Sunday Oct 27, 2024

ஞானம் அளிக்கும் ஞானபதீஸ்வரர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் பனையூர் பகுதியில் அமைந்துள்ளது ஞானபதீஸ்வரர் ஆலயம்..

பனையூர் ஆதி காலத்தில் ‘பனையூர் குளமங்கலம்’ என்றும், ‘பனசை நகர்’ என்றும், ‘தென்பனசை நகர்’ என்றும், ‘பனையூர் பிராந்தக சருப்பேதிமங்கலம்’ என்றும் பல பெயர்களைக் கொண்டு விளங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஊர் மேலப் பனையூர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊரின் வடகிழக்கில் சிவன் கோவிலும், அதன் எதிரில் ஊரணியும் அமைந்துள்ளது. இது பழங்காலத்திலேயே இவ்வூர் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற கிராமம் என்பதைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. பனையூரைச் சுற்றியுள்ள பாக்குளம், பனையக்குளத்தின் கீழ்க்கடைசி, மல்லியக்குடி ஏந்தல், வடக்கிக்கண்மாய் முதலிய இடங்களில் காணப்படுகின்ற பெருங்கற்கால மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள், பனையூரிலும் உள்ள கல்வெட்டுகள் இத்தலத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக இருக்கின்றன.

பனையூரில் அமைந்த சிவன் கோவிலும், கோனாட்டு நாயகி அம்மன் என்ற பிடாரி அம்மன் ஆலயமும், அழகப்பெருமாள் என்ற மேலை வாசல் ஐயனார், பனையக்காட்டு ஐயனார் போன்ற கோவில்களும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. என்றாலும், இங்குள்ள சிவன் கோவிலே அனைத்துக்கும் தலைமையானது, மிகவும் பழமை யானது. இந்த ஆலயம் பெரிய திருச்சுற்று மதிலையும், தென்புறத்தில் குடவரை வாசல் என்ற முகமண்டபத்தையும் கொண்டு அமைந்துள்ளது.

சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதி இரண்டும் கிழக்கு பார்த்த நிலையில் தனித்தனியாக அமைந்துள்ளன. பரிவாரத் தேவதைகளான மூலப் பிள்ளையார், சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர் முதலிய தெய்வங்களுக்கும் தனித்தனியான சன்னிதிகள் இருக்கின்றன. தட்சிணாமூர்த்தி கருவறையின் தென்புறத் தேவக்கோட்டத்தோடு இணைந்துள்ள சிறு மண்டபத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். கருவறையின் மேற்கு, வடக்கு தேவகோட்டங்களில் தெய்வ உருவங்கள் இல்லை. வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர் ஆகியோரும் தனித் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

இத்தல இறைவனின் சன்னிதியானது, நீண்ட கருவறைப் பெற்று விளங்குகிறது. அதையடுத்து அர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளது. இக்கோவிலில் பல்வேறு இடங்களில் சுமார் 60 கல்வெட்டுகள் காணப் படுகின்றது.

இங்குள்ள இறைவனின் பெயர் ஞானபதீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. ஆனால் முன்காலத்தில் இறைவனுக்கு அறிவீசுரமுடையார் என்றும், அம்பாளுக்கு அகிலமீன்ற நாச்சியார் என்றும் திருநாமங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இக்கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல நோய்கள் நெருங்காது என்பது ஐதீகம்.

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் பனையப்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்கு இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். பனையப்பட்டியில் இருந்து ஆட்டோ வசதியும் உண்டு. 

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top