Friday Jul 05, 2024

ராதாமங்கலம் ராமநாதசுவாமி சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

ராதாமங்கலம் ராமநாதசுவாமி சிவன்கோயில்

ராதாமங்கலம், கீழ்வேளுர் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.

இறைவன்:

ராமநாதசுவாமி

இறைவி:

பர்வதவர்த்தினி

அறிமுகம்:

ஒரு முறை, சாபம் பெற்ற நாகங்கள் அங்காங்கே சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கினர். அப்படி வணங்கி மகிழ்ந்த ஒரு தலமே ராகுகேதுமங்கலம் எனப்படும் ராதாமங்கலம், தற்போது தெற்காலத்தூர் எனப்படுகிறது. கீழ்வேளூரிலிருந்து தேவூர் செல்லும் சாலையில் கடுவையாறு செல்கிறது அதன் வடகரையில் 2 கி.மீ. சென்றால் ராதாமங்கலம் எனப்படும் தெற்காலத்தூர் உள்ளது. நாகநாதஸ்வாமி கோயிலின் கிழக்கில் சரியாக ஒரு கிமீ. தூரம் இதே சாலையில் பயணித்தால் இக்கோயிலை அடையலாம்.

இக்கோயில் குடிமுழுக்கு கண்டு பல வருடங்கள் ஆகின்றன. கிழக்கு நோக்கிய கோயில் அருகாமையில் ஆறு ஓடுவதால் தரை மட்டத்தில் இருந்து வளாகமே சற்று உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. கிழக்கில் ஒரு வாயிலும் தெற்கில் ஒரு வாயிலும் மதில் சுவற்றில் உள்ளன, அதன் மேல் இறைவன் குடும்பத்துடன் இருக்கும் காட்சி உள்ளது. கிழக்கு நோக்கிய கருவறை, இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி இறைவியும் சிறிய கருவறை கொண்டுள்ளார். கருவறை மேல் மட்டம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது, இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. அதன் வெளியில் ஒரு நந்தி மண்டபம் கருங்கல் தூண்கள் கொண்டு அழகாக அமைக்கப்பட்டுள்ளது, பலிபீடம் உள்ளது. அதனடியில் கொடிமர விநாயகர் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் தென்மேற்கில் அழகிய சன்னதி கொண்டுள்ளார், அதற்கு ஒரு சிறிய முகப்பு மண்டபம் உள்ளது. வடமேற்கில் முருகனுக்கு சிற்றாலயம் அமைந்துள்ளது முகப்பில் அதே போல் இரு தூண்கள் கொண்ட முகப்பு மண்டபம் உள்ளது அதில் அழகிய மயில் ஒன்றுள்ளது. இரு சன்னதிகளுக்கு இடையில் சில நாகர்கள் மதில் சுவற்றினை ஒட்டியபடி வைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கில் கிணறு ஒன்றுள்ளது சிறிய சன்னதியாக சூரியன் சந்திரன் உள்ளனர். கோயில் பெரிதும் பராமரிப்பின்றி உள்ளது.                            

புராண முக்கியத்துவம் :

இவ்வூரை சுற்றிய கோயில்கள் மகாபாரத கதையுடன் இணைந்த பெருமை கொண்டது. பெருந்தலைக்குடி – அர்ஜுனனாலும்,, இருக்கை- பீமனாலும், தேவூர் நகுலன் சகதேவனாலும், ராதாமங்கலம் தருமராலும் வணங்கிய பெருமை கொண்டது. இக்கோயில் இறைவன் தருமரால் வழிபடப்பட்டவர், ஆனால் இறைவன் பெயர் ராமநாத சுவாமி எனப்படுகிறார்.  இறைவன் ராமநாதசுவாமி இறைவி பர்வதவர்த்தினி.

#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ராதாமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top