Thursday Sep 19, 2024

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், நாமக்கல்

முகவரி

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம் – 637 015. போன்: +91- 4286 – 256 100, 94429 57143.

இறைவன்

இறைவன்: கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் இறைவி: பத்மாவதி தாயார்

அறிமுகம்

மோகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் கல்யாண பிரசன்ன வெங்கடராமனார் கோயிலும் ஒன்று. கல்யாண பிரசன்ன வெங்கடரமணருக்கு துணைவி பத்மாவதி தாயார். இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. மோகனூர் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இது காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இந்த பேரூராட்சி நாமக்கல்லில் இருந்து 19 கி.மீ தொலைவிலும், கரூரில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர நாளிலும் சத்யநாராயண பூஜை நடைபெறும். மோகனூரில் காவிரி ஆறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்வது சிறப்பு.

புராண முக்கியத்துவம்

இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு, “கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது. கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா, ருக்மணி உள்ளனர். ஆண்டாள், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. தலவிருட்சம் வில்வம். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும், ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். ஒரு செயலை துவங்குவது விநாயகரிடம், முடிவது ஆஞ்சநேயரிடம் என்பார்கள். இவ்விருவரையும் வழிபட்டு துவங்கும் வேலை, சிறப்பாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது. கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம். உற்சவ காலங்களில் சுவாமி அலங்காரம், கருட சேவை சாதிப்பது எல்லாமே இங்குதான். அடுத்து மகா மண்டபம், நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள். வலதுபுறம் ஆண்டாளின் சிறு சன்னதி, இடதுபுறம் பாமா ருக்மிணி சமேத நவநீத கிருஷ்ணனின் சிறு சன்னதி. மகா மண்டபத்தின் இடதுபுற விளிம்பில், லட்சுமி நரசிம்மர் மற்றும் உற்சவர்களின் தனிச் சன்னதி. வலதுபுற விளிம்பில் சம்மோகன கோபாலனின் தனிச் சன்னதி. மகா மண்டப துவார பாலகர்களைக் கடந்து உள்ளே சென்றால், அர்த்த மண்டபம். அங்கு உற்சவர். கருவறையில் மூலவராக கல்யாண பிரசன்ன வெங்கடரமண பெருமாள். வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூமாதேவி. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு மூவருமே நின்ற நிலையில் காட்சி அருளிக் கொண்டிருக்கின்றனர். கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவருக்கு வெட்டி வேர் மாலை வெகு விசேஷம். பின்புறம் யோக நரசிம்மர். தெற்கு மூலையில் பத்மாவதி தாயார், கருவறையின் பின்புறம் தன்வந்தரி என தனிச் சன்னதிகள். தன்வந்தரிக்கு செவ்வாய்தோறும் மூலிகை சூரணம் நைவேத்யம். அந்த வாரம் முழுவதுமாக அந்த சூரணமே பக்தர்களுக்குப் பிரசாதம். சன்னதியின் மேல் விதானத்தில் நவகிரக மரச் சிற்பங்கள். அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டவை. தன்வந்தரி பெருமாள் சன்னதியின் சுற்றுப்பாதையின் மூன்று புறங்களிலும் தரையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வண்ண விளக்குகளுடன் கூடிய கண்ணாடி அறை. உற்சவ காலங்களில் ஏகாந்த சேவை இங்குதான். முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில். அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள்.

நம்பிக்கைகள்

கல்வியில் சிறப்பிடம் பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, நோய் தீர இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

திருப்பதியில் ஓர் நாள்: சுவாமி வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் “திருப்பதியில் ஓர் நாள்’ என்னும் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே, அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படும். ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. தன்வந்திரி சன்னதி: சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். இவர்களை வழிபட்டால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. தன்வந்திரிக்கு, மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு, சுக்குப்பொடி, நாட்டுச்சர்க்கரை, நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். ஒவ்வொரு திருவோணத்தின்போதும் மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடுகிறார்கள். பூஜை முடிந்தபின்பு தேங்காயை வீட்வீ டு பூஜையறையில் வைத்து பூஜிக்க ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. குரு, சிஷ்யை தரிசனம்: சுவாமி கோஷ்டத்தில் லட்சுமிஹயக்ரீவர் இருக்கிறார். இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது. பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மாணவர்கள் ஹயக்ரீவருக்கு தேனபிஷேகம் செய்து வணங்கி, சரஸ்வதியை வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. எத்தனையோ கோயில்களில், என்னென்ன காரணங்களுக்காகவோ லட்சார்ச்சனை, யாகங்கள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால், இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது விசேஷம். சிறப்பம்சம்: காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இங்கு நீராடி சுவாமியை வழிபடுவது சிறப்பு. காவிரியம்மனுக்கும் சன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது.

திருவிழாக்கள்

புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மோகனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரூர், நாமக்கல், சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top