Thursday Jul 04, 2024

முத்தனம் பாளையம் அங்காளம்மன் திருக்கோயில், திருப்பூர்

முகவரி

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம் – 641 606, திருப்பூர் மாவட்டம். போன்: +91- 421-220 3926, 224 0412.

இறைவன்

இறைவி: அங்காளம்மன்

அறிமுகம்

முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், முத்தனம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான அம்மன் கோயிலாகும். இக்கோயில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கொங்கு மண்டலத்தில் உள்ள முதன்மையான சக்தி பீடம் மற்றும் பழமையான அங்காளம்மன் கோவில் இதுவே ஆகும். செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இக்கோவிலின் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்களாக உள்ளனர். இரண்டு மாத கால இடைவேளையில் இச்சமுகத்தை சேர்ந்த பத்து கூட்டத்தினர் சுழற்சி முறையில் பூஜை செய்து வருகிறார்கள். இக்கோயிலில் அங்காளம்மன் சன்னதியும், முருகன், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

இப்போது கோயில் அமைந்துள்ள இடத்தில் சுமார் 800 வருடங்களுக்கு முன் புதர்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. இந்த காட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தார்களின் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வரும். அவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளில், அருகிலிருக்கும் மணியம்பாளையத்தை சேர்ந்த பசு ஒன்று, புற்று வடிவில் சுயம்புவாக எழுந்திருக்கும் கருநாகரூபிணிக்கு தானாக பால் சுரந்து கொடுத்து விட்டு வந்து விடும். இதனால் தான் ஈன்ற கன்றுக்கு கூட பால் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பசுவின் சொந்தக்காரர் மாடு மேய்ப்பவனை கண்டிக்கிறார். அத்துடன் பசுவையும் கண்காணிக்கிறார். அப்போது பசுவானது சுயம்புவுக்கு தானாக பால் சுரப்பதை நேரில் கண்டார். அதே போல் அன்று இரவே வேறு ஒரு பக்தரின் கனவில் அங்காளம்மன் தோன்றி,””எனது பக்தர்கள் இங்கிருந்து மேல்மலையனூர் வந்து என்னை தரிசிக்க நீண்ட தூரம் பயணம் செய்து, பல சிரமங்களை சந்திக்கிறார்கள். எனவே கொங்கு மண்டலமான இப்பகுதியில் பசு பால் சுரந்த இடத்தில் சுயம்புவாக புற்று வடிவில் எழுந்தருளியுள்ளேன்,” என கூறினாள். நடந்த இச்சம்பவங்களுக்காக புற்று எழுந்தருளியிருக்கும் பெருமனை மாடகுல கவுண்டர்களுக்கு சொந்தமான பூமியை, மணியம்பாளையம் ஓதாள குலக்கவுண்டர்கள் வாங்கி அவ்விடத்தில் சுயம்புவுடன் உள்ள அங்காளம்மனுக்கு கோயில் கட்டி வழிபட்டார்கள். ஏராளமான குலத்தை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு அங்காள பரமேஸ்வரி குலதெய்வமாக விளங்கி காத்து வருகிறாள்.

நம்பிக்கைகள்

“”சுயம்பு மூர்த்தியாக மிகவும் சக்தியுடன் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் அங்காளம்மனை மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும். பஞ்ச விநாயகர்களையும் தரிசனம் செய்தால் துன்பங்கள் பஞ்சாய் பறக்கும் என்பது ஐதீகம். குழந்தையில்லாத பெண்கள் இந்த கணபதியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது கமலகிரிப்புலவரின் அருள் வாக்காகும்.

சிறப்பு அம்சங்கள்

அங்காளம்மனின் அவதார ஸ்தலமான மேல்மலையனூரில் அம்மனுக்கு முன்புறம் பிரம்மாண்டமான புற்று அமைந்துள்ளது. அதே போல் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்புவாக புற்று அமைந்துள்ளது. அங்காளம்மன் பெயர்க்காரணம்: “அங்காளம்’ என்ற சொல்லுக்கு “இணைதல்’ என்று பொருள். இணைதல் என்பதை இருவகைகளில் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் இரண்டு வரங்கள் பெற்றான். ஏழு பிறவி எடுத்து முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதமும் தன்னை கொல்லக்கூடாது என்பவையே அந்த வரங்கள். இதனால் தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தினான். அது மட்டுமல்ல. வரம் தந்த சிவனையே மறந்து விட்டான். தேவர்களை துன்பப்படுத்தினான். இத்தனை வரங்கள் பெற்றிருந்தாலும் ஒரே ஒரு வரம் மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை. அது தான் குழந்தை வரம். 108 பெண்களை மணந்தான். ஆனாலும் பலனில்லை. குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாள கண்டனின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ முதல் பிறவியில் மீனாட்சியாகவும், அடுத்த பிறவியில் காமாட்சியாகவும், மூன்றாவது பிறவியில் விசாலாட்சியாகவும், நான்காவது பிறவியில் காந்திமதியாகவும், ஐந்தாம் பிறவியில் மாரியம்மனாகவும், ஆறாவது பிறவியில் காளியாகவும் உருவெடுக்க வேண்டும். ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன் படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள். காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். ஆனால், அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். அதன் காரணமாக வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள். அவளது அங்கம் வெந்தது. இப்போதும் யாராவது இறந்து விட்டால், “அங்கம் கரைத்தாயிற்றா?’ எனக் கேட்பது உண்டு. அங்கம் என்றால் சாம்பல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கமாகிய சாம்பலிலிருந்து அவள் பிறந்ததால் “அங்காளம்மன்’ எனப்பட்டாள். இறந்த உடலை ஒன்றிணைத்து பிறந்தவளே அங்காளம்மன். பக்தர்கள் இறைவனுடன் மனம் ஒன்ற வேண்டும். அவருடன் தன்னை இணைத்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலும் தேவிக்கு “அங்காளம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது. அங்காளம்மனின் அற்புதங்கள் : மருதுரையான் வலசு என்ற ஊரைச்சேர்ந்தவர் கமலக்கிரிப்புலவர். அவர் நோய்வாய்ப்பட்டு அங்காளம்மன் கோயிலுக்கு வந்து நோய் நீங்கப்பெற்றார். அம்மன் மீது பாமாலை தொடுத்தார். இந்தப்பாடலை நோயுற்ற அனைவருமே பாடலாம். மிகவும் உருக்கத்துடன் அங்காளம்மனை நினைத்து பாடினால் தீராத நோயும் தீரும்என்பது நம்பிக்கை. அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி சிவராத்திரியன்று சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையின் பொன்னடியில் சரணடைய குவிகிறார்கள். இந்நாளில் வெற்றிலை பாக்கு பிடித்தல், முகம் எடுத்து ஆடுதல், மயான ருத்ரி பூஜை நடத்துதல், மாப்பிள்ளை அழைப்பு, நந்தி தேவன் அழைப்பு, அலகு தரிசனம், ஆகிய சடங்குகள் நடத்தப்படும். வெற்றிலை பிடித்தல் என்ற சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்றும் பெயர். பார்வதி தேவியான இளவரசிக்கும், கைலாய மலையின் பேரரசர் சிவபெருமானுக்கும் நிச்சயதார்த்த விழா நடத்தப்படுகிறது. இதன்பிறகு மூன்று முறங்களில் பச்சை மாவால் செய்யப்பட்ட வல்லாள கண்டனின் கோட்டை காவலாளிகளான காளி, கூளி, திமிறி ஆகிய தெய்வங்களின் முகங்களை அமைப்பார்கள். அதை எடுத்து ஆடுவார்கள். வல்லாள கண்டனிடம் அங்காளம்மன் போர் புரிந்த போது நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வல்லாள கண்டனின் படைகளை எதிர்த்து அம்மனும் அவளது படைகளும் போர் செய்ததை நினைவு படுத்தும் வகையில், அம்மனை பல்லக்கில் வைத்து வீரவீத்துடன் விளையாடுவார்கள். இந்நிகழ்ச்சிக்கு “அம்மனை பல்லக்கில் வைத்து ஆடுதல்’ எனப்பெயர். சிவராத்திரியன்று இரவில் “மயானருத்ரி’ பூஜை நடத்தப்படும். வல்லாள கண்டனை அம்பாள் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி இது. மண்ணால் செய்யப்பட்ட ருத்ரியின் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். அங்காளம்மனின் மற்றொரு பெயர் “காளராத்திரி’. வல்லாளனை அழிக்கும் முன்பு மூன்றாம் ஜாமத்தில் அம்பாள் சிவபூஜை செய்தாள். அதை நினைவு படுத்தும் விதத்தில் மயான ருத்ரி பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கு பிறகு அம்மன் வெற்றிக்கோலத்தில் திகழ்வார். பூஜாரிகள் குளித்து விட்டு சிவபெருமானை திருமணத்திற்கு அழைத்து வருவார்கள். இது மாப்பிள்ளை அழைப்பு எனப்படும். பின்னர் நந்தி தேவரை திருமணத்திற்கு அழைக்கும் சடங்கு நடக்கும். தம்பதி சமேதராக பக்த கோடிகளுக்கு சிவனும் பார்வதியும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியை அழகு தரிசனம் என்பர்.

திருவிழாக்கள்

மாசி சிவராத்திரியன்று சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கும். வருடந்தோறும் பெருமனை மாடகுலத்தார் புரட்டாசியில் அம்பு சேர்வை பூஜையும், ஓதாளகுலத்தார்கள் கோயில் முன் உள்ள துஜதஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் பூஜையும் செய்து வருகிறார்கள். மாசி சிவன் ராத்திரி உற்சவம் மிகப்பெரிய அளவில் பல விசேஷ நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. பெரும் அளவில் பக்தர்கள் இத்திருவிழாவில் பங்கு கொண்டு அருள்பெறுகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைக்கு பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள்.

காலம்

800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முத்தனம்பாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top