முகப்பேர் கற்பகேஸ்வரர் திருக்கோயில், சென்னை
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/IMG_20230415_070030.jpg)
முகவரி :
அருள்மிகு கற்பகேஸ்வரர் திருக்கோயில்,
சிவன் கோவில் தெரு, முகப்பேர் மேற்கு,
சென்னை மாவட்டம் – 600037.
இறைவன்:
கற்பகேஸ்வரர்
இறைவி:
கற்பக சௌந்தரி
அறிமுகம்:
அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில் 5-வது பிளாக் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பல காலம் பூஜிக்கப்பட்டு, சில நூறு ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கிடந்து, சில காலத்திற்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்.
அழுக்காக; பாசிபடர்ந்து; சில சமயம் சிதைந்து பின்னமாகிக்கூட இருக்கலாம் என்றுதானே நினைத்தீர்கள்? ஆனால் இந்த இலிங்கம், மிகவும் கம்பீரமாக நேற்று வடிக்கப்பட்டது போன்ற வனப்புடன் காட்சியளிக்கிறது.
சென்னை முகப்பேர் பகுதியில் உள்ளது இந்த ஆலயம். புரான காலத்தில் மகப்பேறு என்றழைக்கப்பட்ட தலம்தான் இன்று மருவி முகப்பேர் ஆகியுள்ளது. இந்த ஆலயத்தின் பெயர், “கற்பக சௌந்தரி உடனுறையும் கற்பகேஸ்வரர் திருக்கோயில்.”
அமுதம் வேண்டி அமரர்கள் பாற்கடலை கடைந்த போது ஐராவதம் எனும் யானை, உச்சைஸ்ரவம் எனும் குதிரை, காமதேனுப்பசு இப்படிப்பட்ட அற்புதமான பலவும் வெளிப்பட்டன. அவற்றுள் ஒன்றான, கேட்டதை கேட்டபடி தரும் கற்பகத்தருவும் தோன்றியது. கேட்டதை தரும் அந்த மரத்தை எல்லோருமே கேட்டார்கள். தங்களுக்கு வேண்டும் என்று யாருக்கு தருவது? யோசித்தவர்கள் இந்திர லோகத்தில் இருக்கட்டும் அது என்று தீர்மானித்தார்கள். இந்திரலோகத்தில் வைக்கப்பட்ட அந்த மரத்தின் கீழ் இடபவாகனனின் இலிங்கதிருமேனி ஒன்றை அமைத்து பூஜித்தார்கள்.
புண்ணிய செயல்கள் பல புரிந்த பூவுலக மன்னன் ஒருவனின் நாட்டில் விதிப்பயனால் வறட்சி நிலவியது. அந்த சமயத்தில், கற்பகத்தரு இந்திரலோகத்தில் உள்ளது என்பது நாரதர் மூலம் தெரிய வந்தது. நாட்டின் பஞ்சம் போக்க பரமனின் பரிவை வேண்டித் தவம் இருந்தான் அவன். மனம் இரங்கினார் மகேசன். வரம்தர நேரில் வந்தார். கற்பகத் தருவினை கருணையோடு அளிக்கும்படி காட்சி தந்த கங்காதரனிடம் கேட்டான்.
“விண்ணுலக விருட்சத்தின் வித்து, மண்ணுலகில் முளைக்காது” என்று சொன்னார் முக்கண்ணன். “அதற்கு பதிலாக அரசமரம் ஒன்றின்கீழ் எம்லிங்கத்திருமேனியை அமைத்து வழிபடுக. அங்கேயாமே கற்பகமாய் நின்று கேட்டவர்க்கு கேட்ட வரம் அளிப்போம்” எனச் சொல்லி மறைந்தார். அப்படியே வழிபட்டான் அரசன். மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் வழிப்பட்டனர். பரமனின் பார்வையில் நெருப்பு மட்டும் அல்ல; நீரும் வெளிப்படும் என்பதை நிரூபிப்பது போல் அத்தலத்தில் மழை பெய்தது. கருணை மழை பொழிந்த கடவுளை மறந்து விடாமல் கோயில் அமைத்தார்கள். கும்பிட்டார்கள்.
காலம் நகர்ந்தது. வேகமாக எப்படியோ மறக்கப்பட்டு, மண்ணுக்குள் மறைந்து போனது அந்த ஆலயம். வீடு கட்ட எண்ணிப் பூமியை தோண்டிய பக்தர் ஓருவரின் பார்வையில் பட்டது பரமனின் இலிங்கத் திருமேனி. அரண்மனையைப்போல் வீடுகள் பல அமைந்து விட்ட அப்பகுதியில், அரனுக்கு என்று ஓர் அரை மனையாவது ஒதுக்கி ஆலயம் அமைத்திட வேண்டும் என்று தீர்மானித்தனர் பக்தர்கள்.
எண்ணத்தை எல்லாம் ஈடேற்றும் கற்பகமாக அத்தலத்திற்கு வந்தவர் ஆதலால், அவர்கள் நினைத்தபடியே கோயில் அமைந்திட ஆசிபுரிந்தார். எத்தனையோ சோதனைகளுக்கு பிறகு எழும்பியது ஆலயம். ஈசனுக்கு திருப்பெயர் சூட்ட எண்ண யோசித்த போது அவரது மூபகாரணப் பெயரான கற்பகேஸ்வரர் என்றே சூட்டிடும்படி வாக்கு கிட்டியதாம்.
பலிபீடம், நந்தி மண்டபம் கடந்து சென்றால், கருவறை நாதன் கற்பகேஸ்வரரின் தரிசனம் கண் குளிரக் கிடைக்கிறது. அரனின் திருமேனியை மிகமிக அருகே தரிசிக்க முடிகிறது. பரமனின் இடப்பக்கத்து சன்னதியில் இருக்கிறாள் அன்னை கற்பக சௌந்தரி. நாற்கரத்து நாயகியான இவளைத் துதிப்போர் நலிவு நீங்கி வாழ்வில் பொலிவு பெறுவர் என்பது நிச்சயம். அது மட்டுமல்ல, மணப்பேறும் மகப்பேறும் இவளை மனதார வணங்குவோர்க்கு கிட்டுகிறது என்பதற்கு இங்கு வரும் பக்தர்களே சாட்சியாக உள்ளனர்.
அற்புதம் புரியும் கற்பக கணபதி அருளும், அறுமுகன், கோடி நலம் புரியும் கோஷடத்து தெய்வங்கள் தரிசனம் கிடைக்கிறது. வலம் வரும் பாதையில் துர்க்கை, தனி சன்னதியில் கனக துர்க்கையாக, திரி பங்கலலிதம் எனும் அமைப்பில் காட்சியளிக்கிளாள். இந்த வடிவம் இவள் தீவினைகளையும் ஓட்டுபவள் என்பதை உணர்த்தும் அமைப்பு என்கின்றார்கள்.
பிடாரி கொம்மத்தம்மன் என்ற பெயரோடு அமைந்துள்ள தனிக் கோயில் ஒன்றினையும் உள்ளே காணமுடிஞ்கிண்றது. அம்பிகை, சூலமேந்திய கரத்தினளாய், சூழ்வினையாவும் பொசுக்கும் குணத்தினளாக இங்கே ஆட்சி புரிகிறாள். இவளே தனது தலமான இங்கே ஈசனுக்கு இடம் தந்தவளாம். இவளுக்கு, அமாவாசை தினங்களில் நூற்றியெட்டு தீபங்கள் ஏற்றி அபிஷே ஆராதனை செய்து சிறப்பிக்கின்றனர். நால்வர், நாகர், நவகிரகம், பைரவர் சன்னதிகளும் இருக்கின்றன. அரசமரம் ஒன்று வேம்போடு பிணைந்து தழைத்து நிற்கிறது.
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/IMG_20230415_075112.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/IMG_20230415_070030.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/IMG_20230415_074728.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/2021-04-17.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/2024-02-06.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/IMG_20210417_190945.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/IMG_20200221_183800.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/2024-02-06-1.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/panoramio-126681850.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/2024-02-06-2.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/2024-02-06-3.jpg)
![](https://lightuptemples.com/wp-content/uploads/2024/04/2023-05-10.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முகப்பேர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருமங்கலம் மெட்ரோ
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை