Friday Jun 28, 2024

திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி

திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவேட்டீஸ்வரர் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600005 Phone: +91 44 2841 8383 / 2851 1228 Mobile: +91 94860 50172

இறைவன்

திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், திருவேட்டீஸ்வரர் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600005 Phone

அறிமுகம்

திருவேட்டீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை நகரில் உள்ள திருவேட்டீஸ்வரன் பேட்டையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையான கோவில். இது புனித திருநாவுக்கரசரின் திருத்தாண்டகம் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு வைப்பு ஸ்தலங்களில் ஒன்றாகும். மூலவர் திருவேட்டீஸ்வரர் என்றும், தாயார் செண்பகாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் ராகு-கேது பரிகார ஸ்தலம். இது காளஹஸ்தி மற்றும் வாரணாசிக்கு சமமாக கருதப்படுகிறது. ஆற்காடு நவாப்கள் கடந்த காலங்களில் கோயிலின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளனர். இன்றும் நெய்வேத்தியத்திற்கான பால் முஸ்லிம்களால் வழங்கப்படுகிறது

புராண முக்கியத்துவம்

மிகப்பழமையான இத்திருக்கோயில் 7-ம் நூற்றாண்டில் இருந்துள்ளது. இயற்கை அல்லது போரின் காரணமாக இக்கோயில் முற்றிலும் அழிந்து மூலவர் சிவலிங்கம் மட்டும் செண்பக மரங்கள் அடங்கிய புதரில் மறைந்து இருந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பசு ஒன்று தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சுரப்பதைக் கண்ணுற்று மக்கள் சுயம்பு லிங்கமாக இருந்த லிங்கத்தின் மீது வெட்டுகாயம் இருந்ததால் “திருவேட்டீஸ்வரர்” என அழைத்து திருக் கோயில் எழுப்பினர். மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோயில் நிலங்களுக்கு வரி செலுத்து வதிலிருந்து விலக்கு அளித்து கவுல் ஏற்பட்டது. எனவே 16,17ம் நூற்றாண்டில் இக்கோயில் இருந்துள்ளது. நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு பால், புஷ்பம் நவாப் பரம்பரையினர் மூலமாக இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சமயத்தில், ஒரு பன்றியை வேட்டையாடினான். சிவபெருமான் வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்று சொல்லி அவனை சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன் அம்பு எய்யவே, சிவனின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய நின்ற வேடன், சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவவழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கும் சுயம்புலிங்கத்தைக் கண்டு வழிபட்டான். வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் என்பதால், இவர் “திருவேட்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். பார்த்தபிரகரலிங்கம்’ (பார்த்தன் அர்ஜுனன்) என்றும் இவருக்கு பெயர் உண்டு. ராகு கேது தலம்: தேவர்கள் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை சாப்பிட அசுரனான ஸ்வர்பானு என்பவன், தேவர்களுடன் அமர்ந்து கொண்டான். இதை சூரியனும், சந்திரனும் திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர். திருமால் அமுதம் பரிமாறிய கரண்டியால் ஸவர்பானுவை அடிக்கவே தலையும், உடலும் துண்டானது. அவன் அமுதத்தை சாப்பிட்டதால் உயிர் பிரியவில்லை. பின்பு சிவனருளால் தனியே விழுந்த தலையுடன் பாம்பு உடல் சேர்ந்து ராகுவாகவும், மீதி உடலுடன் நாக தலை சேர்ந்து கேதுவாகவும் உருமாறினான். அமுதம் உண்டதால் அழியாத்தன்மை பெற்ற அவர்களுக்கு கிரக பதவியும் கிடைத்தது. தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய சந்திரரை இவர்கள் ராகு, எமகண்ட நேரத்தில் சக்தியின்றி செய்து விடுவர். குறிப்பிட்ட நாட்களில் முழுமையாக விழுங்கி விட்டு, அவர்களின் பணியை தாங்கள் செய்வார்கள். இந்த நிகழ்வின் அடிப்படையில் இவர்கள் நாக வடிவில் சூரிய, சந்திரனை விழுங்க முயலும் அமைப்புடன் காட்சி தருகின்றனர். இந்த கிரகங்கள் சுவாமி சன்னதி எதிரேயுள்ள மண்டபத்தின் மேல் சுவரில் உள்ளன. வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்த கிரகங்களுக்குரிய தானியமான உளுந்து, கொள்ளு தானியம், மந்தாரை மற்றும் செவ்வரளி மலரை திருவேட்டீஸ்வரருக்கு படைத்து வழிபடுகிறார்கள்.

நம்பிக்கைகள்

ராகு மற்றும் கேது கிரகங்களின் பாதகமான அம்சங்களில் இருந்து பரிகாரம் செய்யும் புனித தலமாக இந்த கோவில் முக்கியத்துவம் பெறுகிறது. பக்தர்கள் தாங்கள் அறியாமல் செய்த தவறுகளுக்காகவும், சர்ப்ப கிரக தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும் இறைவனிடம் மன்னிப்பு கேட்கின்றனர். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையின் அடையாளமாக இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சுவாமி சிறப்பு: சிவன் கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது பெரும்பாலும் சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு பள்ளியறைக்குள் சிவனே செல்கிறார். இதற்காக சிலை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இவர் அர்த்த மண்டபத்தில் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, இடது காலை குத்திட்டு அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவருக்கான உற்சவரும் இங்கிருக்கிறார். இத்தலத்தில் சிவனை, இந்திரன் வழிபட்டதாக ஐதீகம். இதனடிப்படையில் புரட்டாசியில் இந்திரபூஜை விழா நடக்கிறது. அப்போது, சுவாமி சன்னதி முழுதும் காய்கறி, பழம் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. நவக்கிரக பூஜை: இக்கோயிலில் தினமும் காலை (முதல்) பூஜையின்போது மூலவர் அருகில் ஸ்படிக லிங்கத்தையும், அருகில் நவக்கிரகங்களுக்கு உரிய நவரத்தினங்களையும் வைக்கின்றனர். பின்பு, ஒவ்வொரு கிரகத்திற்குமான தானியம் மற்றும் மலர்களை படைத்து பூஜை செய்கின்றனர். அதன்பிறகு, சூரியனுக்கு வைத்த மலரை, பிரகாரத்திலுள்ள சூரியன் சிலை முன்பு வைத்து தீபாராதனை செய்யப்படுகிறது. இதன் பின்பே, மூலவருக்குரிய பூஜை நடக்கிறது. அப்போது சிவனுக்குரிய 300 திருமந்திரங்கள் சொல்லி “ருத்ரதிரிசதை அர்ச்சனை’ செய்கின்றனர். இந்நேரத்தில் சிவனை வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கண்ணப்ப நாயனார்: சிவன் வேடராக வந்தபோது, அர்ஜுனன் அவரை அறியாமல் அடித்துவிட்டதற்கு வருந்தினான். அவனே, அடுத்த பிறப்பில் கண்ணப்பன் என்னும் வேடனாக பிறந்தான். சிவனுக்கு தன் கண்ணையே கொடுத்து பரிகாரம் தேடிக்கொண்டான். சிவனருளால் நாயனாராகவும் அந்தஸ்து பெற்றார். அர்ஜுனன் வழிபட்ட தலமென்பதால் இங்கு கண்ணப்ப நாயனார் உற்சவராக இருக்கிறார். இவர் தை மிருகசீரிஷத்தில், குருபூஜையின்போது வீதியுலா செல்கிறார். பிரகாரத்தில் மனைவி சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் மற்றும் வள்ளலாருக்கு சன்னதி இருக்கிறது. பூச நட்சத்திரத்தில் வள்ளலாருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தைப்பூசத்தன்று உற்சவ வள்ளலார் வீதியுலா செல்கிறார். இதுதவிர உற்சவர் சண்முகர் சன்னதியிலும் வள்ளலார் சிலை உள்ளது.

திருவிழாக்கள்

ஏப்ரல்-மே மாதங்களில் சித்திரை பிரம்மோத்ஸவம், மே-ஜூனில் வைகாசி விசாகம், செப்டம்பர்-அக்டோபரில் புரட்டாசி மஹாலய அமாவாசை மற்றும் நவராத்திரி, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மாசி மகம் தீர்த்தவாரி மற்றும் சிவராத்திரி, மார்ச்-ஏப்ரலில் பங்குனி உத்திரம், தை மாதத்தில் கோயில் தேர் திருவிழா. இக்கோயிலில் சித்திரை மாதம் திருவிழா, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி, கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு சஷ்டி நாளிலும் – அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்களில் 6 வது நாளில் – கோவிலில் ஒரு சிறப்பு நிகழ்வான ‘சத்ரு சம்ஹார த்ரிசாதா’ பூஜையை ஆறு அர்ச்சகர்களால் ஆறு பூக்கள், ஆறு நிவேதனங்கள், ஆறு பழங்கள் கொண்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவல்லிக்கேணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top