Friday Jun 28, 2024

திருவண்வண்டூர் பாம்பணையப்பன் திருக்கோயில், கேரளா

முகவரி

அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் திருவண்வண்டூர், செங்கண்ணூர்வழி, பத்தனம்திட்டாமாவட்டம், கேரளா – 689 109.

இறைவன்

இறைவன்: பாம்பணையப்பன், கமலநாதன் இறைவி: கமலவள்ளி

அறிமுகம்

கேரளாவின் புகழ்பெற்ற பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது. “தேறுநீர் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்’ என நம்மாழ்வார் பாடியுள்ளார். கேரளாவில் பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த தலங்களில் இங்கு தான் அடிக்கடி விழாக்களும், முக்கியமான நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்வூரில் பூமியை தோண்டும் போது புதிய பெருமாள் விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு, அதை இக்கோயிலுக்கு கொண்டுவந்து புதிய சன்னதிகளும் மண்டபங்களும் கட்டப்பட்டன. இக்கோயில் வட்டவடிவமான கருவறையுடன் அமைந்திருப்பதும் பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிப்பதும் மிகவும் சிறப்பு. இக்கோயிலின் மேற்கு புற வாசலில் நுழையும் போது வாசலின் மேல், காளிங்கன் மீது கண்ணன் நர்த்தனம் ஆடுவது போல் அமைந்திருக்கும் சிற்பம் பேரழகு வாய்ந்தது. அந்த கண்ணனை தாங்கி நிற்கும் இரண்டு தூண்களின் இரண்டுபுறமும் தசாவதாரக்காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது. மூலவரின் விமானம் சகல வேத விமானம். பெருமாளை நாரதர், மார்க்கண்டேயர் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.

புராண முக்கியத்துவம்

ஒரு முறை பிரம்மனுக்கும் நாரதருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. இதில் நாரதனை பிரம்மா சபித்து விடுகிறார். இதனால் வருத்தமடைந்த நாரதர் பிரம்மனை விட்டு பிரிந்து இத்தலம் வந்து பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, சகல சிருஷ்டிகளையும் பற்றிய தத்துவ ஞானத்தை தனக்கு போதிக்க வேண்டுமென வேண்டுகிறார். இவரது தவத்தால் மகிழ்ந்த பெருமாள் வேண்டிய வரம் தந்தருளினார். எனவே பெருமாளே அனைத்தும் என்றும், அவரை வழிபடும் முறை மற்றும் துதிப்பாடல்கள் அடங்கியதாக நாலாயிரம் அடிகள் கொண்ட “நாரதீய புராணம்’ என்ற நூலை இத்தலத்தில் நாரதர் அருளியதாக வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தரும் தலம். நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு பால்பாயாசம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 75 வது திவ்ய தேசம்.பஞ்சபாண்டவர்கள் வன வாசத்தின் போது இப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது இக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்ததை கண்டு, அதை நகுலன் புதுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதை நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மலைநாட்டு திருப்பதிகளுக்கும் பாண்டவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அவர்கள் ஐந்து பேரும் தனித்தனி சந்நிதிகள் பெருமாளுக்காக நிறுவியதை, 77. திருவித்துவக்கோடு வில்வாசித்தோம். அது தவிர அவர்கள் ஐவரும் தனித்தனியே பெருமாள் தலங்கள் நிறுவியுள்ளார்கள். அவைகளின் விபரம்வருமாறு: 1. திருக்கடித்தானம் (81) சகாதேவன் பிரதிஷ்டை 2. திருசிற்றாறு (82) தருமர் பிரதிஷ்டை 3. திருப்புலியூர் (83) பீமன் பிரதிஷ்டை 4. திருஆரமுளா (84) அர்ச்சுனன் பிரதிஷ்டை 5. திருவண்வண்டூர் (85) நகுலன் பிரதிஷ்டை காட்சிகண்டவர்கள் : நாரதர், மார்க்கண்டேயர்

திருவிழாக்கள்

மாசிமாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் செய்து பத்து நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவண்வண்டூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கணூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top