Friday Jun 28, 2024

திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில் (அடி அண்ணாமலை திருக்கோயில்)

முகவரி

திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில், அடி அண்ணாமலை திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் – 606604.

இறைவன்

இறைவன்: ஆதி அருணாசலேஸ்வரர் இறைவி: ஆதி அபிதகுஜாம்பாள்

அறிமுகம்

ஆதிஅண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் அமைந்துள்து. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள தொண்டை நாட்டு வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. இச்சிவாலயம் அண்ணாமலையார் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலை அடி அண்ணாமலையார் கோயில் என்றும் அழைப்பர். இத்தலத்தின் மூலவர் ஆதி அருணாசலேஸ்வரர் என்றும், அம்பாள் ஆதி ஆதி அபிதகுஜாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை ஆறுகப் பெருமான் மற்றும் எண்ணற்ற இலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலில் அங்க மண்டபம் உள்ளது. அத்துடன் உண்ணாமலை எனும் தீர்த்தமும் அமைந்துள்ளது. இத்தலத்திலிருந்து அருணாசலேஸ்வரரை பார்ப்பதை சிவயோக முக தர்ஷன் என்று அழைக்கின்றனர். திருமூலர் இந்த தலத்திருந்து அவ்வாறு தரிசித்துள்ளாக கூறப்படுகிறது. மாணிக்கவாசகர் திருவெம்பாவை இத்தலத்தில் இயற்றியுள்ளார். இத்தலத்திற்கு வருகின்ற வழியில் மாணிக்கவாசருக்கான கோயிலும் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

கிழக்கே பிரதான கோவிலில் உள்ள லிங்கமூர்த்திக்கு அண்ணாமலையார் என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பது போல மேற்கே உள்ள லிங்க மூர்த்திக்கு அணி அண்ணாமலையார் பெயர் சூட்டப்பட்டது. இத்தலத்து சிவபெருமானுக்கு அணி அண்ணாமலையார் என்று பெயர் சூட்டப்பட்டதால் அந்த இடமும் அணி அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் மலைக்கு அணிகலன் போல இந்த ஆலயம் இருப்பதாலும் அணி அண்ணாமலை என்று அழைக்கப்பட்டது. அப்பர் தனது பாடல்களில் இந்த தலத்தை அணி அண்ணாமலை என்றே குறிப்பிட்டுள்ளார். எனவே இன்றும் சான்றோர்கள் இந்த தலத்தை அணி அண்ணாமலை என்றே அழைக்கின்றனர். மலையே சிவமாக திகழும் திருவண்ணாமலை கிரிவல பாதையில் ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் வருண லிங்கம் அருகே அணி அண்ணாமலையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு ஆதி அருணாசலேஸ்வரர் என்ற பெயரும் இருப்பதால் இந்த ஊரை ஆதி அண்ணாமலை என்றும் அழைத்தனர். அதுதான் நாளடைவில் பேச்சுவழக்கில் அடி அண்ணாமலை என்று மாறிப் போனது. தற்போது பெரும்பாலானவர்கள் அடி அண்ணாமலை என்றே அழைக்கிறார்கள். இந்த தலத்தில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் நீண்ட காலம் தங்கியிருந்தார். அப்போதுதான் அவர் திருவெம்பாவை பாடல்களை இயற்றினார். மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் அனைவரும் எழுந்து குளித்து விட்டு ஈசனை வழிபட வாருங்கள் என்பதை உணர்த்தும் வகையில் மாணிக்கவாசகர் பாடல்கள் அமைந்துள்ளன. இத்தலத்தின் பெருமையை மேலும் சிறப்பு பெற செய்யும் வகையில் மாணிக்கவாசகர் தனது ஒரு பாடலில், “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியே” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இத்தலத்துடன் மாணிக்கவாசகர் இரண்டற கலந்துள்ளார். அடி அண்ணாமலையார் ஆலயத்துக்கு திரும்பும் தெருவின் முனையில் மாணிக்கவாசகருக்கு தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயத்துக்கு மாணிக்கவாசகர் கிழக்கு பார்த்த முகமாக அண்ணாமலையாரை எப்போதும் வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

சிறப்பு அம்சங்கள்

அணி அண்ணாமலையார் ஆலயத்துக்குள் சிவபெருமான் லிங்கமாக எழுந்தருளி இருந்தார். உண்ணாமலை அம்மன் தனி சன்னதியில் உள்ளார். ஆலயத்தின் வடக்கு பகுதியில் பழனி ஆண்டவர் சன்னதி உள்ளது. தெற்கு புறம் சம்பந்த விநாயகர் சன்னதி இருக்கிறது. மேலும் அண்ணாமலையார் ஆலயத்தில் உள்ள சன்னதி அமைப்புகள் அனைத்தும் இந்த ஆலயத்திலும் இருக்கின்றன. அண்ணாமலையார் ஆலயத்தில் எத்தகைய பூஜைகள் நடத்தப்படுகிறதோ அதேபோன்று அணி அண்ணாமலையார் ஆலயத்திலும் பூஜைகள், வழிபாடுகள் உள்ளன. அண்ணாமலையர் ஆலயத்தில் வழிபடும் பக்தர்கள் அணி அண்ணாமலை ஆலயத்திலும் வழிபட்டால்தான் முழுமையான பலன்களை பெற முடியும் என்று சொல்கிறார்கள். இந்த ரகசியத்தை திருவண்ணாமலை தலத்தை நாடி வந்த மகான்கள், ரிஷிகள், சித்திகள், சித்தர்கள் அனைவரும் உணர்ந்து இருந்தனர். இதனால்தான் அண்ணாமலையார் ஆலயத்தை சுற்றி வந்த சித்தர்கள் ஒவ்வொருவரும் அணி அண்ணாமலையாரை நெருங்கவும் தவறவில்லை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை / பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top