Tuesday Jul 02, 2024

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம் அஞ்சல் -612 303. கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429

இறைவன்

இறைவன்: சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர் இறைவி: கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி

அறிமுகம்

திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருப்புறம்பியத்தில் அமைந்துள்ளது. செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சிசொன்ன தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும்.

புராண முக்கியத்துவம்

பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால் (புறம்பு – அயம்) திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது. வேறு பெயர்கள் :- கல்யாண மாநகர், புன்னாகவனம் என்பன. பிரளய வெள்ளம் வந்தபோது புறம்பாய் இருந்தமையால் புறம்பயம் என்று பெயர். இரத்தினவல்லி என்னும் ஒரு வணிக குலத்துக் கன்னிப் பெண் தனக்கென்று உறுதிசெய்யப் பெற்றிருந்த கணவனுடன் திருமணமாகுமுன் இவ்வூருக்கு வந்தாள். அப்பொழுது கணவனை பாம்பு கடித்து இறந்தமையால் அவள் வருந்தியழுதாள். அவ்வூருக்கு வந்திருந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பியருளி இரத்தினவல்லிக்கு திருமணம் செய்து வித்தார். இறைவன் சான்றாக நின்றருளினார். இதனால் இறைவனுக்கு சாட்சிநாதர் என்று பெயர் பெற்றார். இதற்கு வன்னிமரமும் ஒரு சான்றானது. வன்னிமரம் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது, சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது.

நம்பிக்கைகள்

திருமண வரம் வேண்டியும், குழந்தைச்செல்வம் வேண்டியும், கல்வி, கேள்விகளில்சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை. தெட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். அகத்தியர், பிரமன், சனகாதி நால்வர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட தலம். அரித்துவசன் என்னும் அரசனுக்குத் துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம். கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தார். கோவிலின் கிழக்கேயுள்ள குளக்கரையில் இத்தெட்சிணாமூர்த்தியுள்ளார். கிழக்கு நோக்கிய கோபுரவாயில், முதற்பிரகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள், முதலியவை உள்ளன. இரண்டாவது பிரகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தெட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இதற்கு மேலே சட்டைநாதர் சன்னதி உள்ளது. தலவிநாயகர் – பிரளயங் காத்த பிள்ளையார் – வெண்ணிறத் திருமேனி. தலபுராணமும், உலாநூலும் உள்ளனவாகத் தெரிந்தாலும் அச்சிடப்பட்டுக் கிடைக்கவில்லை. திருவையாறு வித்வான் வை. சுந்தரேசவாண்டையார் அச்சிட்டுள்ள “புறம்பயமாலை’ என்னும் நூலில் 10 பாடல்களே கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

திருவிழாக்கள்

மாசிமகத்தில் 10 நாட்கள் உற்சவம், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மதுரை ஆதீனம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்புறம்பியம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top