Tuesday Jun 25, 2024

திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில், திருபுவனம், கும்பகோணம் வழி, தஞ்சாவூர் மாவட்டம் – 612103.

இறைவன்

இறைவன்: கம்பஹரேஸ்வரர் இறைவி: தர்மசம்வர்த்தினி

அறிமுகம்

போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில். திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பகோணம் அருகில் திருபுவனம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் கும்பகோணம் அருகே மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்று வேலைப்பாடுகளுடன் உள்ளன. மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருப்பெயர் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் / நடுக்கம் தீர்த்த நாயகன் / திருபுவன மகாதேவர். தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள். திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும். இத்தலத்து அம்பாளுக்கு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி / தர்மசம்வர்த்தினி என்ற பெயர் வழங்குகின்றது.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் இரணியன் என்ற அசுரன் தேவர், மனிதர், விலங்கு முதலிய யாவராலும், எத்தகைய ஆயுதத்தாலும், பகல், இரவு என்ற இரு வேளைகளிலும் சாகாத வரத்தைத் தவமியற்றிப் பெறுகிறான். மமதையின் உச்சத்தில் தானே கடவுள் என்று அறிவித்து மீறுவோரைக் கொல்கிறான். இவனது மைந்தன் ப்ரகலாதன் தீவிரத் திருமால் பக்தன்! அகந்தையின் உச்சத்தில் தன்னைக் கடவுளாக ஏற்க மறுத்த மகனையே கொல்லப் பல்வேறு முயற்சிகள் செய்கிறான். பலிக்கவில்லை! ஆத்திரத்தின் உச்சத்தில் மகனிடம் “நீ வணங்கும் நாராயணன் எங்கிருக்கிறான்? அவனைக் காட்டு. உன் கண்முன் அவனைக் கொன்று நானே கடவுள் என்று உனக்கு நிரூபிக்கிறேன்” என்கிறான். ப்ரகலாதன் நிதானமாக “நாராயணன் எங்கும் இருக்கிறான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்” என்றான். ஆத்திரத்தோடு அரக்கன் அருகிலிருந்த தூணைக் காட்டி “அவன் எங்கும் இருக்கும் தெய்வம் என்றால் இந்தத் தூணில் இருந்து வெளிவரட்டும்” என எட்டி உதைக்க, சிங்கத்தின் தலையும், மனித உடலும் கொண்ட உருவமாய் நரசிம்மர் தோன்றி இரணியன் குடலைக் கீறி அவனை அழிக்கிறார். அழித்த பின்பும் ஆத்திரம் தீரவில்லை. அனைவரும் சிவனிடம் காப்பாற்றும்படி முறையிடுகின்றனர். எட்டுக் கால்கள், நான்கு கைகள், இரண்டு இறக்கைகள், கூர்மையான நகங்கள், பற்கள், யாளிமுகம் ஒருங்கிணைந்த தோற்றமாய் சரபேஸ்வரர் தோன்றுகிறார். பாதி உருவம் அகோரப் பறவை, மீதி உருவம் அகோர விலங்கு! சரபேஸ்வரரைக் கண்ட நரசிம்மருக்குக் கோபம் நீங்கிப் பயம் வந்தது. சிவனைத் தாக்க விழைகிறார். அப்போது சிவனின் தீண்டலில் சினம் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறார் திருமால். அனைவருக்கும் ஏற்பட்ட கம்பத்தினை (நடுக்கத்தினை) தீர்த்ததால் சிவன் கம்பகரேஸ்வரர் (நடுக்கம் தவிர்த்த பெருமான்) என்ற திருப்பெயர் பெறுகிறார். சரபப் பறவையாய்த் தோன்றியதால் சரபேஸ்வரர்! என பெயர் உருவானதாக கூறுகிறது புராணக் கதைகள். ஆலய அமைப்பு : கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம். ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும். இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள். அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார். சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர். சரபேஸ்வரர்: : தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்க ஆணையிட்டார். வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான். இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது. எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.

நம்பிக்கைகள்

கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும். சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள். சரபேஸ்வரர் வழிபாடு : எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும். இதுதவிர ஆலயத்தில் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்சனை களிலும் பங்கேற்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது. இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார். மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார். தொன்மைச் சிறப்பு: இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907-ம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை, கி.பி. 1178-ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முகமண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்தக் கோவிலை நிர்மாணித்ததைக் கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இதுதவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம் – பிரம்மோற்சவம் -18 நாட்கள் திருவிழா சரப உற்சவம் – பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும். அன்று ஏக தின அர்ச்சனை நடக்கும். அன்று இரவு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடு – திருவீதி வீ உலா. சரபேசர் சிறப்பு பூஜைகள் : வெள்ளி , சனி, ஞாயிறு, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய 5 நாட்களின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தவிர தினமும் சரப ஹோமம் (பெரிய பூஜை)நடக்கும் முருகனுக்கு கார்த்திகை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கும். சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். நவராத்திரி, சிவராத்திரி அன்று கோயிலின் விசேஷ நாட்கள் ஆகும். பவுர்ணமி திருவீதி வீ வலம் இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெறும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

13 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருபுவனம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவிடைமருதூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top