Friday Jun 28, 2024

திருக்கூடல் கூடலழகர் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை – 625 001 மதுரை , நிர்வாகஅதிகாரி : 0452-2338542

இறைவன்

இறைவன்: கூடலழகர் இறைவி: மரகதவள்ளி

அறிமுகம்

இத்திருக்கோயில் மதுரை மாநகரின் மத்தியில் உள்ளது, வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும், வைகாணச ஆகமம், இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது அட்டாங்க விமானமாகும், இவ்விமானத்தில் பெருமாள் இருந்த, நின்ற, கிடந்த மூன்று நிலைகளில் காட்சி தருகிறார், நவகிரக சன்னதி அமைந்துள்ள வைணவ திவ்ய தேசமாகும், இத்திருக்கோயிலுக்கு அருகில் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலும் உள்ளது. தல விருட்சம்:கதலி தீர்த்தம்:ஹேமபுஷ்கரிணி. புராண பெயர்:திருக்கூடல்

புராண முக்கியத்துவம்

மதுரை கோயில்களின் மற்றும் திருவிழாக்களின் நகரமாகும். இந்நகரம் கூடல் மற்றும் ஆலவாய் என அழைக்கப்படுகிறது, மதுரை மாநகரில் தமிழ் புலவர்களால் மூன்றாம் மற்றும் கடைசி சங்கம் நிறுவி தமிழாய்ந்த இடமாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகும், வைணவம் மற்றும் சைவம் தலைத்தோங்கிய நகரமாக திகழ்கிறது, சைவத்திற்கு அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலும், வைணவத்திற்கு அருள்மிகு கூடலழகர் திருக்கோயிலும் சிறப்புற்று விளங்குகிறது, அருள்மிகு கூடலழகர் திருக்கோயிலில் வைணவ திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படு ௧ல் நுற்று எட்டில் ஒன்றான பாடல் தலமாகும், பெரியாழ்வரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாகும், திருமங்கையாழ்வார் மற்றும் திருமழிசைபிரான் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும், திருக்கோயில் மூலவர் கூடலழகர் உற்சவர் வியூக சுந்தர்ராஜர், மூலவர் சன்னதிக்கு தென்புறம் மதுரவல்லிதாயார், வடபுறத்தில் ஆண்டாள் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதிஉள்ளது, தாயார் சன்னதியில் சக்கரத்தாழ்வார், ஆழ்வார் ஆச்சார்யார்கள் சன்னதி உள்ளது, வல்லப தேவ பல்லவர் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாழ்வாரால் அரசவையில் ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என மெய்பித்த சிறப்புமிக்க தலமாகும், பெரியாழ்வார் ஸ்ரீ நாராயணனே பரம்பொருள் என மெய்ப்பித்த பரத்துவ நிர்ணயத்தை பாராட்டி அரசன் பெரியாழ்வாரை பட்டத்து யானை மீதேற்றி வீதிவலம் வரும்போது கூடலழகர் கெருட வாகனத்தில் காட்சி தந்தபோது பெருமாளை தரிசித்த பெரியாழ்வார் பெருமாள் அழகுக்கு பல்லாண்டு பாடினார், இச்சிறப்பு மிக்க வைபவம் இன்றும் இத்திருக்கோயிலில் பிரதி மார்கழிமாதம் பரத்துவ நிர்ணயம் என்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது,பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்ற “திருப்பல்லாண்டு’ பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு. அஷ்டாங்க விமானம் : பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் “ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்இங்கு தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இங்குள்ள உற்சவர் “வியூக சுந்தர்ராஜன்’ என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும்முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

சிறப்பு அம்சங்கள்

ஸ்ரீ மதுரவல்லி ஸமேத ஸ்ரீ கூடல் அழகர் மங்களாசாஸனம் மதுரவல்லி மணாளா மங்கலங்கள் நிறைந்தவனே கிருதமாலைக் கரையமர்ந்த கூடல் அழகா மங்கலங்கள்! அடியாரின் துயர்தீர்க்க நீயமர்ந்த கதலிவனம் விடிந்திட்ட பொழுதான பெருமரீளே கூடல் அழகா மங்கலங்கள்! அருள்வேண்டி வழிநிற்கும் அடியவரைத் திருக்கையால் அழைத்தருளும் திருமாலே கூடல் அழகா மங்கலங்கள்! அருள்வதற்காய் பாம்பணையில் வீற்றிருந்து காத்தருளும் நெடுமாலே பரமபதநாதா கூடல் அழகா மங்கலங்கள்! உயர்வேத ஒளியாகி உலகெங்கும் நிறைவாகி நின்றருளும் சூரியநாராயணா கூடல் அழகா மங்கலங்கள்! இத்தாரையைக் காத்திடவே யோக நித்திரையைக் கொண்டவனே பள்ளிகொண்ட பரந்தாமா கூடல் அழுகா மங்கலங்கள்! குறை நீக்கும் கோவிந்தா உன் அட்டாங்க விமானம் மறை போற்றும் மாதவா கூடல் அழகா மங்கலங்கள்! மார்க்கண்டேய மகரிஷியின் தவத்தாலே உருவான எழுகடல் புண்ணிய தீர்த்தத்தின் புருஷாத்தமனே கூடல் அழகா மங்கலங்கள்! தவம் செய்த காசியப முனிவரின் சேஷதீர்த்தம் முன்தோன்றி வரம்தந்த நெடுமாலே கூடல் அழகா மங்கலங்கள்! திருவடியின் தாமரையை அடியவர்க்கு உகந்தளிக்கும் சக்கர தீர்த்தம் நீராடித்தினம் தொழவே கூடல் அழகா மங்கலங்கள்! நற்கதியை அடைந்திட தேவர்களும் நீராடும் மானசரோவம் வினைதீர்க்கும் வித்தகனே திருமாலே கூடல் அழகா மங்கலங்கள்! பரம்பொருளாய் மறையோர்கள் உனைக்கண்ட பதியாக வரம் தருவாய் வரதராஜா கூடல் அழகா மங்கலங்கள்! திருமார்பில் திருமகளைக் கொண்டவனே திருமங்கை ஆழ்வாரின் கோயில் கொண்ட கோவலரே கூடல் அழகா மங்கலங்கள்! பரம் உனக்கே பல்லாண்டு இசைத்திட்ட விட்டுசித்தன் மெய்சிலிர்க்க வந்துநின்ற கருணாகாரா கூடல் அழகா மங்கலங்கள்! கார்மேகக் கூட்டத்தைக் காத்து நின்று அடியவரின் துயர் தீர்த்துப் புலி காக்கும் புருஷாத்தமா கூடல் அழகா மங்கலங்கள்! தேவர் முனிவரை காக்கும் உன் சக்ராயுதம் காலநேமியை வதம் செய்த கருடவாகனா கூடல் அழகா மங்கலங்கள்! மணவாள மாமுனிகள் மனத்திருந்து பூவுலகைக் காத்தருளும் திரிவிக்கிரமா கூடல் அழகா மங்கலங்கள்! மங்கலங்கள் சொல்லிய மங்கலத்தால் அடியாரின் மனமெல்லாம் அருள் சுரக்கும் மதுசூதனா கூடல் அழகா மங்கலங்கள்!

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி , நவராத்திரி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கூடல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top