Wednesday Jul 03, 2024

தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், தலைச்சங்காடு – 609 301 ஆக்கூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 280 757

இறைவன்

இறைவன்: சங்காரண்யேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி

அறிமுகம்

தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 45ஆவது சிவத்தலமாகும். சங்கு + ஆரண்யம் + ஈசுவரர் = சங்காரண்யேசுவரர். வாயிலில் நுழைந்ததும் கோயிலின் வலப்புறம் அதிகாரநந்தி உள்ளது. வாயிலைக் கடந்ததும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயிலின் மூலவர் சங்காரண்யேசுவரர் சன்னதிக்கு முன்பாக ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், கோச்செங்கணான், துவாரகணபதி உள்ளனர். மூலவருக்கு முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர், மஹாவிஷ்ணு, ஜுரஹரர், ராமர், சீதை, வலம்புரி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். அருகே தனியாக துர்க்கை உள்ளார். பலிபீடம், நந்திக்கு இணையாக கோயிலின் இடப்புறம் சௌந்தரநாயகி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. தல விருட்சம் – புரசு தீர்த்தம் – சங்கு தீர்த்தம் ஆகமம் – காரண ஆகமம்

புராண முக்கியத்துவம்

மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு. இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 108 வது தேவாரத்தலம் ஆகும்.

நம்பிக்கைகள்

குழந்தைப்பேறுக்காக பெண்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்கள் பவுர்ணமி விரதம் இருந்து அம்மனுக்கு செய்யப்பட்ட சந்தனக்காப்பில் இருந்து சிறிதளவு சந்தனம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பிறக்க வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

* கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது. *ஒரே சிவாலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் தரிசனம் கிடைக்கிறது. மூலவர் தனியாகவும் பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர். உலக மகா கோடீஸ்வரர்களான சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள். கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் ஏராளமான சிவாலயங்கள் கட்டியுள்ளான். அதில் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்ட கோயில்களும் கட்டியுள்ளான். அப்படிப்பட்ட மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதி. நடுவில் முருகன் சன்னதி. வலது பக்கம் அம்மன் சன்னதி என அமைக்கப்பட்டிருக்கும். திருத்தலைச்சங்காடு, திருவெண்காடு, திருச்சாய்க்காடு, திருமறைக்காடு, திருத்தலையாலங்காடு என்ற வரிசையில் திருத்தலைச்சங்காடு எனச்சிறப்பு பெற்றது. இத்தலம் சங்காரண்யம், சுவேதாரண்யம், வேதாரண்யம், வில்வாரண்யம் , வடவாரண்யம் என்ற ஐந்து ஆரண்யங்களிலும் வைத்தும் போற்றப்படுகிறது.,

திருவிழாக்கள்

வைகாசி விசாகம் 5 நாள்திருவிழா சிறப்பாக நடக்கிறது. கந்த சஷ்டியின் போது ஒரு நாள் லட்சார்ச்சனை நடக்கிறது.

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தலைச்சங்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top