Monday Jul 01, 2024

கோடியக்கரை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோவில் கோடியக்கரை அஞ்சல் வழி வேதாரண்யம் வேதாரண்யம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN 614821

இறைவன்

இறைவன்: அமுதகடேஸ்வரர் இறைவி: அஞ்சநாக்சி

அறிமுகம்

கோடியக்கரை அமுதகடேஸ்வரர் கோயில் சுந்தரரின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 127ஆவது சிவத்தலமாகும். இத்தல இறைவனாரை இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள் முதலானோர் வழிபட்டுள்ளனர்.

புராண முக்கியத்துவம்

திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர். அமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது, அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார். இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம். அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது. மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள். இக்கோயிலில் மற்றொரு வித்தியாசமான அம்சம் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று, சுவாமி அம்பாள் திருமணக்காட்சியைக் காண்பதாகும். கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக சூகாடு கிழாள்’ என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள். சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் “அமிர்த விநாயகராவார்” கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது. மிகவும் பழமையானது இந்தக்கோயில். ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், ராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார்.இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், ராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். இத்தலத்திற்கு வரும் வழியில் இராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் இராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 191 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழாக்கள்

இவ்வூர் அமிர்தகடசுப்பிரமணியருக்கு வைகாசி விசாகத்தில் பத்துநாள் விழா, சஷ்டியில் ஆறு நாள் விழா நடக்கிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வேதாரண்யம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வேதாரண்யம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top