Wednesday Jul 03, 2024

காக்கமொழி ஶ்ரீ கார்கோடக புரீஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்

முகவரி

காக்கமொழி ஶ்ரீ கார்கோடக புரீஸ்வரர் திருக்கோயில், காக்கமொழி, காரைக்கால் மாவட்டம் – 609 604.

இறைவன்

இறைவன்: ஶ்ரீ கார்கோடக புரீஸ்வரர் இறைவி: ஸ்ரீ கற்பகாம்பாள்

அறிமுகம்

காரைக்காலிலிருந்து 5 கி.மீ தொலைவில் (நிரவி- ஊழியபத்து சாலையில்) உள்ளது காக்கமொழி கிராமம். நிரவி, ஊழியபத்து, விழிதியூரில் இருந்து வாகன வசதிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் கும்பாபிஷே கம் நிகழ்ந்து 1,100 ஆண்டுகள் ஆகி விட்டன. சுந்தரச் சோழன் காலத்தில் வாழ்ந்து, மகிமைகள் பல புரிந்த குண்டு சித்தர்,இங்கு வந்து முன்ஜன்ம வினைகளைத் தீர்த்துக் கொண்டார். அதனால் சுந்தரச் சோழனிடம் சொல்லி இந்த ஆலயத்தைப் புனரமைத்தார். இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் பல குறிப்புகள் பிரமாண்ட புராணம், நைடதம் போன்ற ஞானநூல்களில் காணப்படுகின்றன.ஆதிசேஷனும் கார்கோடகனும் வணங்கிய தலம் இது என்பதால் நாக தோஷம் நீக்கும் ஆலய மாகவும், ராகு-கேது பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இத்தனை சிறப்புகளை உடையதாக விளங்கி காலவெள்ளத்தில் நிலைத்து நின்ற இந்த ஆலயம் சில நூற்றாண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்பட்டது. இதனை கடந்த 4.2.2021 (தை 22-ம் நாள்) புதன் கிழமை அன்று கோயிலின் மகா கும்பாபிஷேக வைபவம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. ஆலயத்தின் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி தருகின்றன. ஈசனும் அம்மையும் கோலாகலமாய் உற்சவம் கண்டு அருள்பாலிக்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

கார்கோடகன் என்ற கொடிய விஷப் பாம்பு, இக்கோயில் சிவலிங்கத்தை வழிபாடு செய்து மோட்சம் அடைந்ததாகவும், நளச்சக்கரவர்த்தி பல சிவாலயங்கள் சென்று தரிசித்து வந்த நிலையில், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபாடு செய்து பின்னர் திருநள்ளாறு சென்றதாக கூறப்படுகிறது. பா ம்பு விமோசனம் அடைந்த தலம் என்பதால் இது ராகு – கேது தோஷ நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகவும் விளங்குவதாக கூறப்படுகிறது. கார்கோடகன் நளனைத் தீண்டி தண்டனைப் பெற்றதால், இந்த ஊரில் இன்றுவரை எந்த நாகமும் எந்த ஜீவராசியையும் தீண்டுவதில்லை என்று ஆச்சர்யம் தெரிவிக்கிறார்கள் ஊர் மக்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷ பாதிப்பு கொண்டவர்கள், உறவுகள் – சொத்துக்கள் இழந்தவர்கள் இங்கு வந்து கார்கோடகனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாத்தி, மருக்கொழுந்து மொட்டு அல்லது தாழம்பூ சூட்டி வழிபட்டால், எல்லா சிக்கலும் தீர்ந்து நலம் பெறுவார்கள் என்கிறது தலவரலாறு.

நம்பிக்கைகள்

இந்த ஆலயத்தில் நித்ய பிரதோஷம் நடை பெறுகிறது. அதில் கலந்துகொண்டு சிவனாரை யும் நந்திதேவரையும் வழிபடுவதால் நாம் முன் வைக்கும் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள், பைரவ மூர்த்தி, ஸ்ரீநடராஜர், கார்கோடகன் எனும் நாகன், நவகிரகங்கள் ஆகிய தெய்வச் சந்நிதிகள் உள்ளன. சந்திர புஷ்கரணி தீர்த்தம்; வில்வம் தல விருட்சம். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வெள்ளி நாக மோதிரத்தை உண்டியலில் செலுத்தினால் ராகு – கேது தோஷம் நீங்கும்; வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், சந்தான வரம் கிட்டும்; நாகர் சிலைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால், கல்யாண வரம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

நளனுக்கு அருள் கிடைத்த தலம் என்பதால், சனி தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது. தேவாதிதேவர்கள் வந்து ஈசனிடம் எப்போதும் வேண்டியவண்ணம் இருக்கும் தலம் இது. அவர்களின் வேண்டுதல்களைத் தொடர்ந்து செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்து அமைந்திருப்பது விசேஷ அம்சம்!

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காக்கமொழி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்கால்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top