Wednesday Jul 03, 2024

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் – பூசம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம்-614 612, பேராவூரணி தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 97507 84944, 96266 85051, 8883988810

இறைவன்

இறைவன் – அட்சயபுரீஸ்வரர் இறைவி – அபிவிருத்தி நாயகி

அறிமுகம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகில் உள்ள விளங்குளம் என்ற ஊரில் உள்ளது அட்சயபுரீஸ்வரர் ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கால் ஊனம் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் மூலவர். அத்துடன் சிவபெருமான் சனிபகவானுக்கு இத்தலத்தில் திருமணமாகும் அருளையும் வழங்கினார். மந்தாதேவி, ஜேஷ்டாதேவி இருவரையும் மணந்த சனிபகவான் இங்கு ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயருடன் திருமணக் கோலத்தில் தன் துணைவியருடன் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார். பூசம் பதநேசம் தரும் என்பது சித்தர்களின் வாக்கு. அருள்மிகு ஆதி பிருஹத் சனீஸ்வரனின் நட்சத்திரமும் பூசம். எனவே, இங்கு வந்து வழிபடுவதால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும் என்பது உறுதி. பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளிலோ, பூச நட்சத்திர தினத்தன்றோ, அட்சய திரிதியை நாளிலோ இத்தல இறைவனை வழிபட்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக்கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.

புராண முக்கியத்துவம்

பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி, பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமர வேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்தநாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பிக் கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சிதந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரியலோகத்துக்கும், பித்ரு லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பித்ரசாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

நம்பிக்கைகள்

பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் இந்த நாட்களில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம். அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.

சிறப்பு அம்சங்கள்

இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன், திருமண கோலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலிக்கிறார்.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை,திருவாதிரை

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பேராவூரணி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பேராவூரணி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top