Friday Jul 05, 2024

போழக்குடி பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி

போழக்குடி பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில், போழக்குடி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609405

இறைவன்

இறைவன் : பிரம்மபுரீஸ்வரர் இறைவி: அதுல்ய குஜாம்பிகை

அறிமுகம்

கொல்லுமாங்குடி- திருநீலக்குடி சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் போழக்குடி நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து ஒரு கிமி தூரம் தென்புறம் உள்ள சாலையில் சென்றால் போழக்குடி அடையலாம். போழர்கள் எனும் குடிகள் வாழ்ந்த ஊர் என்பதால் இவ்வூருக்கு போழக்குடி என பெயர் வந்திருக்கலாம். இறைவன் கிழக்கு நோக்கிய பிரம்மபுரீஸ்வரர் எனும் லிங்க மூர்த்தியாகவும், அம்பிகை இறைவனுக்கு இடப்புறமாக தனி ஆலயம் கொண்டு கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். இறைவி இங்கு அதுல்ய குஜாம்பிகை என அழைக்கப்படுகிறார். கோயில் பூஜைக்கு சரியான குருக்கள் இல்லை, கோயில் பணியாளர் சார்ந்த ஒரு பெண்மணியே அனைவரையும் வரவேற்கிறார். தீர்த்தம், நாக தோஷ பரிகாரம் என இரு சிறப்பு கொண்ட திருக்கோயில் முறையான பராமரிப்பின்றி உள்ளது.

புராண முக்கியத்துவம்

ஆதிசேஷன், வாயு இருவருக்கும் யார் பலசாலி என போட்டி வந்து இருவரும் போட்டியிட்டுக்கொண்டு நின்றதனை கண்ட இறைவன், இருவரையும் சபிக்கிறார், அது போல் பிரம்மனும் தன்னிலை மறந்து உறங்கியதால் படைப்பு தொழில் நின்றதனால் சாபம் பெறுகிறார். இப்படி பிரம்மன் சாபம் பெற்று பிடாரனாகவும், ஆதிசேஷன் பாம்பாகவும் திரிய, திருஞானசம்பந்தர் பதிகத்தில் கூறியபடி போழக்குடி தீர்த்த சிறப்பை அறிந்து , இந்த போழக்குடி வந்து இங்குள்ள தீர்த்த குளத்தில் மூழ்கி எழுந்ததால் பிரம்மன் சாப விமோசனம் பெற்றான். கோபுர வாயிலில் இருந்து கருவறை செல்லும் வழியில் உள்ள மண்டபத்தில் தல வரலாறு வரையப்பட்டுள்ளது. இறைவன் சன்னதி வாயிலில் விநாயகர், முருகன் இருவரும் உள்ளனர். இங்குள்ள இறைவன் எதிரில் உள்ள நந்தியின் அருகில் பாம்பு ஒன்றும் பலி பீடம் ஒன்றும் உள்ளது. அந்த பாம்பே ஆதிசேஷன் எனவும், இங்கும் திருப்பாம்புரம் போல நாக தோஷ நிவர்த்திகள் செய்து பலன் பெறலாம் என கூறுகின்றனர். விநாயகர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார், கருவறையின் நேர் பின்புறம் முருகன் வள்ளி தெய்வானையுடன் தனி சன்னதியில் உள்ளார். சண்டேசர் சன்னதி தனியாகவும், துர்க்கை கருவறை கோட்டமாக தனி மண்டபம் முன்னிழுக்கப்பட்டு உள்ளது. தென்முகன் சன்னதியில் இரு முனிவர்கள் அமர்ந்திருக்கும் கோலம் காணலாம். அதனை ஒட்டி உள்ள பகுதியில் நான்கு நாகர் சிலைகள் உள்ளன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top