Thursday Jul 04, 2024

திருமயேந்திரப்பள்ளி ஸ்ரீ திருமேனியழகர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி -609 101. கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-4364- 292 309.

இறைவன்

இறைவன்: திருமேனியழகர், இறைவி: வடிவாம்பிகை

அறிமுகம்

திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 6 வது சிவத்தலமாகும். இந்திரன், மயேந்திரன், சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

புராண முக்கியத்துவம்

இந்திரன், கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி முனிவரால் சபிக்கப்பட்டான். பாவ விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று தான் மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், “மகேந்திரப்பள்ளி” என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டதாக ஒரு ஐதிகம் உண்டு. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி இல்லை.

நம்பிக்கைகள்

முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பிரம்மனுக்குரிய தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால், துன்பப்பட வேண்டும் என எழுதப்பட்ட தலையெழுத்து மாறி, நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை. கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

அழகு தரும் சிவன்: சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, “திருமேனி யழகர்’ என்றும், அம்பாள் வடிவாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, “அழகர்’ என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் “சுந்தரராஜன்’ என்று சமஸ்கிருதத்திலும், “அழகர்’ என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் “அழகர்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம். சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top