Friday Jun 28, 2024

திருநைமிசாரண்யம் தேவராஜன் திருக்கோயில், உத்தரபிரதேசம்

முகவரி

திருநைமிசாரண்யம் தேவராஜன் திருக்கோயில், உத்தரபிரதேசம் – 261402, தொலைபேசி: 096515 12727

இறைவன்

இறைவன்: தேவராஜன் (ஸ்ரீஹரி) இறைவி: ஹரி லக்ஷ்மி

அறிமுகம்

நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி.மீ. தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார்.

புராண முக்கியத்துவம்

இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று. வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.

நம்பிக்கைகள்

வியாச பகவான் இவ்விடத்தில் தான் மகாபாரதம், 18 புராணங்கள், பகவத்கீதையை அருளிச் செய்தாராம். கோமதி ஆற்றுக்கு போகும் வழியில் வியாசகட்டி என்ற இடத்தில் வியாசருக்கு கோயில் உள்ளது. இங்கு தான் வியாசபகவான் தங்கி இருந்தாராம். வியாச பகவானின் புதல்வரான சுகபிரம்மம் உலாத்திய இடம் இது. தனது தந்தையிடம் பாகவதம், பாரதம் முதலானவற்றை கற்றறிந்த இடம் இது. சக்ர தீர்த்தத்தின் தென்கிழக்கு பக்கம் கோமதி நதிக்கரையில் பாண்டவர்கள் வனவாசகாலத்தில் பலநாள் தங்கியிருந்ததாக சொல்லப்படும் பாண்டவர் கோட்டைக்கு செல்லும் வழியில் மேற்படி சுக பிரம்மத்திற்கு ஆலயம் உள்ளது. இவரின் வெண்கலச் சிலை (கிளிமூக்குடன்) பெரியதாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சற்று தூரத்தில் ஒரு குன்றின் மீது ஹனுமான் சட்டி என்ற ஆலயத்தில் ஸ்ரீ இராம லட்சுமணர்களை தனது இரு தோள்களில் ஏந்திய ஹனுமாரின் மிக பிரம்மாண்டமான சிலையை காண வேண்டியது.

சிறப்பு அம்சங்கள்

இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு.[7][8] சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும். இங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர்.[9] இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. சூத பௌராணிகர் உக்கிரசிரவஸ் என்ற சௌதி, குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, மகாபாரதம் மற்றும் புராணங்கள் எடுத்துக் கூறினார்.

திருவிழாக்கள்

ராமநவமி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

உத்தரபிரதேசம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீதாபூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சண்டிகர்

அருகிலுள்ள விமான நிலையம்

சண்டிகர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top