Thursday Jul 04, 2024

செய்யூர் கந்தசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், செய்யூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603302.

இறைவன்

இறைவன்: கந்தசுவாமி இறைவி: வள்ளி, தெய்வானை

அறிமுகம்

கந்தசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் தாலுகாவில் செய்யூர் நகரில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இத்தலத்தை முதன்மைக் கடவுளாகப் போற்றியதால் இக்கோயில் திருப்புகழ் ஸ்தலம் என்று கருதப்படுகிறது. இக்கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலைய வாரியத்தால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

கந்தசுவாமி பெருமானைப் போற்றி அந்தக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர் கலம்பகம், சேறை கவிராஜ பிள்ளையின் சேயூர் முருகன் உரை, முருகதாச ஸ்வாமிகளின் சேயூர் முருகன் பதிகக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகளின் நெஞ்சுவிடு தூது எனப் பல நூல்கள் தோன்றியுள்ளன. அருணகிரிநாதரும் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். இப்புண்ணிய தலத்தில் அவருக்கு சிலையும், அவர் பாடிய பதிகங்களின் கல்வெட்டும் காணப்படுவது சிறப்பு! 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த ஊர் சோழர் காலத்தில் ஜெயம்கொண்ட சோழநல்லூர் என்றும் வீரராஜேந்திர நல்லூர் என்றும் அழைக்கப்பட்டது. கிபி 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுகள் அரசர்களின் அலுவலகத்தில் முஸ்லிம்கள் பணியமர்த்தப்பட்டதைக் குறிக்கிறது.

நம்பிக்கைகள்

தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள முருகனை மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

வேதாளங்களை சிவகணங்களாக செய்யூர் கந்தசுவாமி கோயிலில் காணலாம். வேதாளங்கள் பைரவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை. எனவே ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும், அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு, கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள் பைரவர் மூலமாக விரைவாக முருகனிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பது ஐதிகம். இதனால் பலர் பயனடைந்துள்ளதால், ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இக்கோயிலை நாடி வருவோர் அதிகம். தெற்கு, கிழக்கு என இரண்டு நுழைவு வாயில்கள் கொண்டது கோயில். வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் பழமையான கல் தீபஸ்தம்பமும், கொடிமரமும் மூலஸ்தானத்தை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றன. இக்கோயிலின் சிறப்பு, கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்காளாகவே காட்சியளிப்பதாகும். வழக்கமாக சைவ கோயில்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை விளங்குவர். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணுமாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். மேலும் சிவதலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும், பைரவரும் இம்முருகன் கோயிலில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் காணப்படுகின்றன. தலவிருட்சம் வன்னி மற்றும் கருங்காலி மரங்களாகும். தேய்பிறை அஷ்டமி அன்று மாலை வேதாள பூஜை விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளிப்பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது. கோயலுக்கு வெளியே நவகிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். கோயிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் திருநாமங்களுள் ஒன்று.

திருவிழாக்கள்

ஆடிக் கிருத்திகை, கந்தசஷ்டி-சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்தர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.

காலம்

10 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செய்யூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மேல்மருவத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top