Tuesday Jul 02, 2024

சித்தமல்லி குலசேகரசுவாமி திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு குலசேகரசுவாமி திருக்கோயில், சித்தமல்லி, திருவாரூர் மாவட்டம் – 614705. தொலைபேசி: +91 – 4367 – 2815 2533 மொபைல்: +91 – 97880 50170, 9840053289

இறைவன்

இறைவன்: குலசேகரசுவாமி இறைவி: அபிராமியம்மன்

அறிமுகம்

மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை சாலையில் 15 கி.மீ., தூரத்தில் பெருகவாழ்ந்தான். இங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் சித்தமல்லி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அபிராமியம்மன் சமேத குலசேகரசுவாமி திருக்கோயில் உள்ளது. பதினொன்றாம் ஆண்டில் குலசேகர பாண்டியனால் உருவாக்கப்பட்ட ஆலயம் இது. மன்னவன் பெயரிலேயே ஈசன் குலசேகர சுவாமி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இவரை வணங்குவதால் மனக் கவலை தீரும் என்பது ஐதீகம். இக்கோயிலில் மாசிமாதக் கடைசி நாளில் மாலை வேளையில் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் மீது படர்கிறது. இங்குள்ள தண்டாயுதபாணி கருங்கல்லால் ஆனவர். வலக்கரத்தால் தண்டத்தை ஊன்றியிருக்கிறார். அந்த தண்டத்தை விரலால் சுண்டினால் வெண்கல ஓசை எழுகிறது.

புராண முக்கியத்துவம்

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலத்தில் முன்னூதிமங்கலம் காட்டுக்கு வந்தனர். மனம் கலங்கிய நிலையில் இருந்த பாண்டவர்கள் சிவலிங்க வழிபாடு செய்ய எண்ணினர். காடு முழுவதும் சிவலிங்கத்தை தேடி பார்த்து கிடைக்காமல் சோர்வடைந்தனர். அப்போது “”சித்தர்கள் தவமிருக்கும் இடத்தில் எழுந்தருளியுள்ளேன்,” என்று அசரீரி ஒலித்தது. அவ்விடத்தில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டனர். தங்கள் சித்தம் (மனக்கவலை) தெளிவித்த ஈஸ்வரரை வழிபட்டனர். இத்தலத்திற்கு சித்தமல்லி என்று பெயர் வந்தது. சித்தம் அல்லி (மனம் சந்திரனைக் கண்ட அல்லி போல் மலர்ந்ததால் இப்பெயர் ஏற்பட்டு, சித்தமல்லியாக மருவியது. 11ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் இவ்விடத்தில் கோயிலை கட்டிய பிறகு, சிவனுக்கு “குலசேகர பெருமான்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன், நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்

மேற்கு நோக்கிய இந்த கோயிலில் அகத்தியர் வழிபட்டுள்ளார். விசேஷ நாட்களில் மட்டும் மேற்கு வாசல் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் தெற்கு வாசல் பயன்படுத்தப் படுகிறது. ஆவுடையாரின் மேல் பெரிய பாணலிங்கம் உள்ளது. தனக்கு தரிசனம் தரவில்லை என்பதால் அர்ஜூனன் கோபமடைந்து, சுவாமி இருக்கும் திசை நோக்கி அம்பு எய்தான். அதை நிஜமாகவே சிவன் தாங்கிக் கொண்டார். அந்தத் தழும்பு லிங்கத்தின் வலது பாகத்தில் வடுவாக உள்ளது. மாசி 21 முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் மாலையில் சூரியக்கதிர் சுவாமி மேல் படுகிறது. எமபயம்போக்கும் அன்னை: அன்னை அபிராமி நான்கடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். திருக்கடையூருக்கு அடுத்து இரண்டாவது அபிராமியாக திகழ்கிறாள். வலது காலை சிறிது முன்வைத்து கூப்பிட்ட குரலுக்கு உடனே வரும் நிலையில் இருப்பது அதிசயம். ஆயுள் அபிவிருத்தி அளிக்கும் திருக்கடையூருக்கு இணையான ஸ்தலம். மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. வெண்கல சத்தம்: இங்குள்ள தண்டாயுதபாணி கால்களில் பாதரட்சை அணிந்து, இடக்கையை இடுப்பில் வைத்து வலக்கையில் இருக்கும் தண்டத்தை பீடத்தில் ஊன்றியபடி காட்சி தருகிறார். மொட்டைத்தலையுடன் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்துள்ளார். இவரது திருக்கரத்தில் இருக்கும் கல் தண்டத்தை சுண்டினால் வெண்கல ஓசை கேட்கிறது. தீர்த்த சிறப்பு: கோயிலில் அதிசய சுனை கிணறு உள்ளது. கோயிலை சுற்றியுள்ள கிணறுகளில் உப்பு சுவை தண்ணீரும், கோயில் உள்ளே உள்ள கிணற்றில் நல்ல சுவையிலும் நீர் கிடைப்பது அதிசயம்.

திருவிழாக்கள்

சிவராத்திரி, பிரதோஷம், வைகாசி விசாகம்

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சித்திமல்லி

அருகிலுள்ள இரயில் நிலையம்

முத்துப்பேட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top