Wednesday Jul 03, 2024

கீழச்சூரியமூலை சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

அருள்மிகு சூர்யகோடீஸ்வரர் திருக்கோயில்,

கீழச்சூரியமூலை,

தஞ்சாவூர் மாவட்டம் – 609804.

இறைவன்:

சூர்யகோடீஸ்வரர்

இறைவி:

பவளக்கொடியம்மன்

அறிமுகம்:

சூரியனுக்கு மூலாதாரச் சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார்கோயிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில்தான் முழுச்சக்தியையும் பெற்றான். நவகிரக தலங்களில் ஒன்றான சூரியனார்கோயில் தலத்தின் ஈசான்ய பாகத்தில், அதாவது கீழ் மூலையில் இருப்பதால்தான், இந்த ஊருக்கு கீழச் சூரிய மூலை என்றே பெயர் வந்தது. இங்கே சூரியன் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சூட்சும வடிவில் இறைவனை வழிபடுவதாக நம்பிக்கை. அதை உறுதிப்படுத்துவது போல, கர்ப்பகிரகத்தின் உள்ளும் வெளியே சந்நிதியிலும் எல்லா கோயில்களிலும் இருப்பதுபோல இருட்டாக இல்லாமல் வெளிச்சமாக இருக்கும். உள்ளே ஒரு கண்ணாடியைக் கொண்டுபோனால், அதன் பிரதிபலிப்பு சுவரில் தெரியும். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது இக்கோயில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோக்கி செல்லும் பேருந்தில் சென்றால் கோயில் அருகே இறங்கிக்கொள்ளலாம்.      

புராண முக்கியத்துவம் :

அனைத்துத் உலகங்களிலும் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டி கலந்து கொண்டு பயன் அடைவதைக் கண்டு சூரிய பகவானுக்கு தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்பதுதான் அந்த ஏக்கம். பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படிக் கலந்து கொள்ள முடியும் ? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும் வருத்தத்தையும் தன் சீடனான யக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். அந்த சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர் யக்ஞவல்கியர். சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற இறைவனான சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் குருவின் கவலையை எடுத்துரைத்து, தன் குருவின் வேதனையை தீர்த்துத் வைக்கும்படி வேண்டி அவரை வணங்கினார். சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட வேதங்கள் அனைத்தையும் பாஸ்கரசக்கர வடிவில் செய்து அவற்றின் பலன்களைப் பொறித்துத் சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப்பணித்தார்.

நம்பிக்கைகள்:

கண்சம்பந்தமான அனைத்துத் வியாதிகளும் விலக, சூரிய தோஷம் விலக இங்குள்ள சூர்யகோடீஸ்வரரை வணங்கிச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

பைரவரிடம் ஆரத்தி காட்டும்போது மட்டும், பைரவரின் கண்டத்தில் சிவப்பு நிறத்தில் பவழம் போல ஓர் ஒளி தோன்றி, அசைந்து மறைகிறது. சிறு பொறி போல வந்து மறையும் அந்தப்பவழ மணியின் ஒளிக்கிரணங்கள்தான், நம் பித்ரு சாபத்தையும் சூரிய சந்திரர்களின் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் பிணிகளையும் நிவர்த்தி செய்வதாக நம்பிக்கை .

திருவிழாக்கள்:

பிரதோஷம் சிவராத்தரி

காலம்

1300 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழச்சூரியமூலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

நரசிங்கம்பேட்டை, குத்தாலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top