Thursday Jul 04, 2024

கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்-608 306, கடலூர் மாவட்டம். போன்: +91& 4144 & 208 508, 208091, 93457 78863.

இறைவன்

இறைவன்: பதஞ்சலீஸ்வரர் இறைவி: காணர் குழலி

அறிமுகம்

கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 32வது தலம் ஆகும். இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே 1 கிமீ சென்றடையலாம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்றழைக்கப்படும் இத்தலம் கொள்ளிடக்கரையில் உள்ளது. மிகப் பழைய கோயிலான இது பாழடைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பதஞ்சலிநாதர், இறைவி கானார்குழலி.

புராண முக்கியத்துவம்

பாற்கடலில் பள்ளிகொண்டி ருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன், சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார்.சிவன், அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒருசமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்தபோது, அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே, இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி. சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம், “”என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே!” என்றார். “”தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும்,” என்று வேண்டிக்கொண்டார் பதஞ் சலி. சிவன், அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவரது பெயரையே தனக்கும் சூட்டி, “பதஞ்சலீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும்விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

நம்பிக்கைகள்

நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு “மதூகவனம்’ என்றும் பெயருண்டு. கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். தமிழ் வருடப்பிறப்பின் போது 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால், வெளியில் இருந்தே சிவனை தரிசித்துவிட்டு சென்றார்களாம். எனவே, இத்தலத்து மண்ணை மிகவும் விசேஷமானதாக கருதுகிறார்கள். மண்ணை எடுத்துச்சென்றால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நடராஜர், தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி, உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன், மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். பதஞ்சலி, நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. வரப்பிரசாதியான இந்த அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.

திருவிழாக்கள்

சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காட்டுமன்னார்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காட்டுமன்னார்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top