Monday Jul 01, 2024

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர் – 612 401, திருஅரிசிற்கரைப்புத்தூர், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435 – 246 6939, +91-99431 78294.

இறைவன்

இறைவன்:படிக்காசுநாதர் ( சொர்ணபுரீஸ்வரர்) இறைவி: சௌந்தரநாயகி / அழகம்மை

அறிமுகம்

அழகாபுத்தூர் சொர்ணபுரீசுவரர் கோயில் (அரிசிற்கரைப்புத்தூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 66ஆவது சிவத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புகழ்த்துணை நாயனார் அவதரித்ததும் முத்தி பெற்றதும் இத்தலத்திலேயே என்பது என்பது தொன்நம்பிக்கை. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள்தான் சங்கு சக்கரம் வைத்தபடி அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் உள்ள முருகன் சங்கு, சக்கரம் வைத்தபடி அருள்பாலிக்கிறார். நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 129 வது தேவாரத்தலம் ஆகும்.

புராண முக்கியத்துவம்

ஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், “நீங்கள் யார்?’ எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார். முருகன் அவரிடம் எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள்? எனக்கேட்டார். “ஓம்’ என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான்! என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார். இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை. சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு காட்சி தந்து “”தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது,” என்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

நம்பிக்கைகள்

இங்கு வேண்டிக்கொள்ள தவறை தட்டிக்கேட்கும் மனப்பான்மையும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சங்கு, சக்கர முருகன்: ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, அவர்களை அழிக்க முருகனை அனுப்ப எண்ணினார் சிவன். எனவே, இங்கிருந்த முருகனை அசுர வதத்திற்கு கிளம்பும்படி கூறவே, முருகனும் கிளம்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன், கைகளில் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, “கல்யாணசுந்தர சண்முகசுப்பிரமணியர்’ என்று அழைக்கிறார்கள். அருகில் வள்ளி, தெய்வானையும் இருக்கின்றனர். இவரது திருவாட்சி “ஓம்’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பது விசேஷம். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம். நாயனார் அவதார தலம்: நாயன்மார்களில் ஒருவரான புகழ்த்துணையார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவன் மீது பக்தி கொண்டிருந்த இவர், அரசலாற்றில் தீர்த்தம் எடுத்து தினமும் சிவபூஜை செய்வது வழக்கம். இவர் மிகவும் வறுமையில் வாடினாலும், பூஜையை மட்டும் விடாமல் செய்து வந்தார். ஒருசமயம் இப்பகுதியில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போதும் புகழ்த்துணையார் கலங்கவில்லை. பூஜையை வழக்கம்போல தொடர்ந்தார். பல நாட்களாக சாப்பிடாததால், உடல் தளர்ந்த புகழ்த்துணையார் தள்ளாடியபடியே சுவாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்தார். சிவன் சன்னதிக்குள் சென்ற அவர், உடல் வலுவின்றி கீழே சரிந்தார். அப்போது தீர்த்த குடம் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. புகழ்த்துணையாரும் லிங்கத்தின் மீது விழுந்து மயக்கமுற்றார். சிவன் அவரது கனவில் தோன்றி, “”என்ன வேண்டுமென கேள்!’ என்றார். புகழ்த்துணையார் கனவிலும், மக்களின் வறுமையை போக்கி, சிவபூஜை தடையின்றி நடக்க அருள் செய்யும்படி வேண்டினார். சிவன் அவரிடம், தினமும் ஒரு படிக்காசு தருவதாகவும், அதை வைத்து மக்களின் பஞ்சத்தை போக்கும்படியும் கூறினார். அதன்பின் மயக்கம் தெளிந்த புகழ்த்துணையார் பூஜையை தொடர்ந்தார். சிவனும், தினமும் ஒவ்வொரு படிக்காசு கொடுத்தருளினார். பலகாலம் இத்தலத்தில் சிவபூஜை செய்த புகழ்த்துணையார், இங்கேயே முக்தியடைந்தார். சிவன் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். எதிரெதிரே சூரிய,சந்திரன்: அரசலாற்றின் தென்திசையில் இக்கோயில் அமைந்திருக்கிறது. பொதுவாக நவக்கிரக மண்டபத்தில் சூரியனும், சந்திரனும் கிழக்கு திசை நோக்கியே இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவ்விருவரும் எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எதிரே ஒன்பது குழிகளும் இருக்கிறது. இந்த குழியில் கிரகங்கள் வாயு வடிவில் இருப்பதாக ஐதீகம். இந்த அமைப்பு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் நவக்கிரக சன்னதியில் சூரிய, சந்திரனுக்கு பூஜை செய்தும், நவக்கிரக குழியில் தீபமேற்றியும் வழிபடுகிறார்கள். படிக்காசு பூஜை: புகழ்த்துணை நாயனார் பிறந்து, வளர்ந்து, முக்தியடைந்த தலம் இது. தற்போதும் இவரது தலைமுறையினரே இங்கு பூஜை செய்கின்றனர். படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொண்டு, ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

மாசிமகம், மகாசிவராத்திரி, கிருத்திகை, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் நாயனார் குருபூஜை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அழகாபுத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top