Sunday Jul 07, 2024

அம்பாசமுத்திரம் காசிநாதசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில்,

அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் – 627 401.

போன்: +91- 4634 – 253 921, +91- 98423 31372

இறைவன்:

காசிபநாதர் (காசிநாதர்)

இறைவி:

மரகதாம்பிகை

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ள காசிநாதசுவாமி கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றியுள்ள இடங்களும், இக்கோயிலை இணைக்கும் சாலையும் (ஆத்து சாலை) அழகாக இருக்கின்றன. மூலவர் காசிபநாதர் (காசிநாதர்) என்றும் அன்னை மரகதாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் உள்ள அன்னை கடல் போல் கருணை புரிவதால், இத்தலம் அம்பா (அம்மா) சமுத்திரம் (கடல்) எனப் பெயர் பெற்றது. நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் இங்கு ஸ்தல விருக்ஷம் (புனித மரம்) ஆகும். இக்கோயிலின் தீர்த்தம் தாம்பிரபரணி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 29.04.2009 அன்று நடைபெற்றது

புராண முக்கியத்துவம் :

      ஒருசமயம் காசிப முனிவர் சிவனை வேண்டி, ஒரு யாகம் நடத்தினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். அவரிடம் காசிபர், தனக்கு பூஜை செய்ய லிங்க வடிவம் வேண்டுமென்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், அப்படியே சிவலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை காசிபர் இங்கு பிரதிஷ்டை செய்து, வழிபட்டார். காசிபரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் சுவாமி, “காசிபநாதர்’ என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பெயர், “காசிநாதர்’ என மருவியது.

நம்பிக்கைகள்:

பொன், பொருள் மீதான ஆசை குறைய, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

எரித்தாண்டவர்: கேரள மன்னர் ஒருவருக்கு நோய் உண்டானது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. ஒருசமயம் அவரிடம் ஒலித்த அசரீரி, எள் தானியத்தில் ஒரு பொம்மை செய்து, அதில் நோயை இடம்மாற்றி, ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்துவிடும்படி கூறியது. மன்னனும் அவ்வாறே பொம்மை செய்தான். கர்நாடகத்தைச் சேர்ந்த ஏழை அந்தண இளைஞன் ஒருவன் மன்னரிடம் பொம்மையைப் பெற்றுக் கொண்டான். மன்னனின் நோய் விலகியது. மகிழ்ந்த மன்னன், அவனுக்கு விலையுயர்ந்த ரத்தினங்களை பரிசாகக் கொடுத்தான். அப்போது உயிர்பெற்ற பொம்மை, இளைஞனிடம் “”நீ கற்றுக்கொண்ட காயத்ரி மந்திரத்தின் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்துவிட்டால், உன்னை விட்டுச் சென்றுவிடுகிறேன்,” என்றது. அவனும் அவ்வாறே கொடுத்து, நோயிலிருந்து தப்பிவிட்டான்.


தன்னிடமுள்ள ரத்தினங்களை மக்களின் நன்மைக்காக செலவிட எண்ணிய இளைஞன், அகத்தியரிடம் ஆலோசனை கேட்க பொதிகை மலைக்குச் சென்றான். வழியில் இக்கோயில் அர்ச்சகரிடம், ரத்தினங்களை மூடையில் கட்டி கொடுத்துவிட்டு சென்றான். அகத்தியரை பார்த்துவிட்டு திரும்பியவனிடம், அர்ச்சகர் பருப்பு மூடையைக் கொடுத்தார். ஏமாற்றப்பட்ட இளைஞன், மன்னனிடம் முறையிட்டான். அவர் “”இளைஞனிடம் ரத்தினம் பெறவில்லை” என சிவன் சன்னதி முன்பு சத்தியம் செய்யும்படி கூறினார். ஒப்புக்கொண்ட அர்ச்சகரும் சத்தியம் செய்தார். இதனால் கோபம் கொண்ட சிவன், அவனை எரித்துவிட்டார். அர்ச்சகர் மீது பரிதாபம் கொண்ட இளைஞன், அவரை உயிர்ப்பிக்கும்படி சிவனிடம் வேண்டினான். அவரும் அர்ச்சகருக்கு உயிர் கொடுத்தார். பின்பு ரத்தினங்களை மீட்ட இளைஞன், மக்கள் நன்மைக்காக ஒரு கால்வாய் உருவாக்கினான். கால்வாய் அவனது பெயரில், “கன்னடியன் கால்வாய்’ என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு இளைஞனுக்கு அருளிய சிவன் இங்கு தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை, “எரித்தாட்கொண்டார்’ என்றும், “எரிச்சுடையார்’ என்றும் அழைக்கிறார்கள். இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பிறகே, காசிபநாதருக்கு பூஜை செய்கின்றனர்.


சிவன் எதிரில் திருமால்: தாமிரபரணி நதியின் வடகரையில் இக்கோயில் உள்ளது. தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. அம்பாள் மரகதாம்பிகை, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியிருக்கிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இவளது சன்னதியில் தொட்டில் கட்டியும், வளையல் அணிவித்தும் வேண்டிக்கொள்கிறார்கள். இவள் சமுத்திரம் போல அருளை வாரி வழங்குபவளாக அருளுகிறாள். எனவே இவளது பெயரால் இவ்வூருக்கு “அம்பாள் சமுத்திரம்’ என்ற பெயர் உண்டானது.

பிற்காலத்தில் இதுவே, “அம்பாசமுத்திரமாக’ மருவியது. பொய் சத்தியம் செய்து ஏமாற்றிய அர்ச்சகரை எரித்த சிவன், இங்கு உக்கிரமாகவே இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி பார்வதி, பெருமாளிடம் வேண்டினாள். அவர், சிவனை சாந்தப்படுத்தினார். இந்த பெருமாள், எரித்தாண்ட மூர்த்தி சன்னதிக்கு நேரே, தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலத்திலுள்ள நடராஜர், புனுகு சபாபதி என்றழைக்கப்படுகிறார். வியாழக்கிழமையுடன் கூடிய தைப்பூசம் வரும் நாளில் மட்டுமே இவருக்கு விசேஷ அபிஷேக, பூஜை செய்யப்பட்டு, சந்தனம் மற்றும் புனுகு சாத்தி வழிபடுகிறார்கள்.

கோயிலை ஒட்டி ஓடும் தாமிரபரணி நதியில் தேவி, சாலா, தீப, காசிப, கிருமிகர (புழுமாறி தீர்த்தம்), கோகில தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள், சங்கமித்திருப்பதாக ஐதீகம். சித்திரை மாதப்பிறப்பு, தைப்பூசம் மற்றும் தை அமாவாசை ஆகிய மூன்று நாட்களில் சுவாமி, இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார். அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறார்கள். ஐப்பசி உத்திரத்தன்று இரவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி திருவிழாவின் ஏழாம் நாளில் நடராஜர் சிவப்பு பட்டு உடுத்தி சிவப்பு சாத்தியாக புறப்பாடாவர். எட்டாம் திருநாளன்று காலையில் வெள்ளை சாத்தி உலா செல்வார். அதன்பின் பச்சை சாத்தி கோலத்தில் சென்று, அகத்தியருக்கு காட்சி கொடுப்பார். இந்த விழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலவிநாயகரின் திருநாமம் அனுக்கை விநாயகர்.

திருவிழாக்கள்:

ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அம்பாசமுத்திரம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை, திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top