Wednesday Oct 02, 2024

மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோவில் (குலச்சிறை நாயனார் ஸ்தலம்), புதுக்கோட்டை

முகவரி :

மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோவில் (குலச்சிறை நாயனார் ஸ்தலம்), புதுக்கோட்டை

மணமேல்குடி – 614 620 புதுக்கோட்டை மாவட்டம்

மொபைல்: +91 75020 64449

இறைவன்:

ஜெகதீஸ்வரர்

இறைவி:

ஜகத்ரக்ஷாகி

அறிமுகம்:

ஜெகதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி தாலுகாவில் மணமேல்குடி நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் ஜெகதீஸ்வரர் என்றும், தாயார் ஜகத்ரக்ஷாகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் குலச்சிறை நாயனாரின் அவதார ஸ்தலமாக கருதப்படுகிறது. மணமேல்குடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3.5 கிமீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை முதல் ராமநாதபுரம் வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

குலச்சிறை நாயனார்: குலச்சிறையார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப் போற்றப்பட்ட பெருந்தகையாளர். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த வாரப்பாடு உடையவராயிருந்தார். சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று இன்னமுது ஊட்டுவார். திருநீறும்உருத்திராக்கமும் அணிந்தவரும் அஞ்செழுத்தோது பவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.

இத்தகைய அடியவர்க்கு அன்பு பூண்ட அகத்தினரான குலச்சிறையார் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக அரசகருமம் செய்தார். பாண்டிய மன்னன் சமண சமயத்தவனாகவும் குடிகளெல்லாம் அவன் வழியினராகவும் நின்ற போதும் பெருமானம் உடையவராக அவர் சைவத்தின் வழி நின்றார்.

இவ்வாறு சிவநெறியினராய் அரசகருமம் பார்க்கும் நாளில் சிவநெறி விளக்கும் திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டிற்கு அருகே திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதான செய்தியைக் கேள்வியுற்றார். இச்செய்தியினைக் கேள்விப்பட்ட அளவிலேயே அவரை நேரிற் கண்டு அடிபணிந்தது போல் ஆனந்தமடைந்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தோடிருந்த பாண்டிமாதேவியாரோடு ஆலோசித்துப் பரிசனங்களை திருஞானசம்பந்தரிடம் சென்று சேதி சொல்வதற்கென அனுப்பி வைத்தார். சம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளும் செய்தி எட்டும் முன்னமே நன்னிமித்தங்கள் பல தோன்ற ‘இவை சண்பை அரசு வரும் நற்குறி’ எனத் தெளிந்தார். எழுந்தருளும் செய்தி கேட்டதும் பாண்டிமாதேவியார் சென்று அவர் பணிப்பினைப் பெற்று வரவெதிர்கொள்ளச் சென்றார். செல்லும் அவர் தம் எதிரே புண்ணியத்தின் படையெழுச்சி போன்றும் அடியவர் சூழ வரும் ஆளுடைய பிள்ளையினைக் கண்டார். பரமசமய கோளரி வந்தான் எனும் முத்துச்சின்ன ஓசை செவிநின்ற அமுதமென அவரை விம்மிதமுறச் செய்து கண்வழியூடாகவும், செவிவழியூடாகவும் உளம் நிறைந்த அன்பு வெள்ளத்தாலே கைகள் சிரமிசை ஏறிக்குவிய அவ்விடத்திலே நிலமிசை வீழ்ந்து வணங்கினார். பின் எழுந்து நெருங்கிச் சென்று வீழ்ந்து வணங்கிக் கிடந்தார். ஆளுடைய பிள்ளையாரைச் சூழ்ந்து வந்த தொண்டர் குழாம், பாண்டிய முதல் மந்திரிப் பாங்குடன் வந்த அவரைப் பணிந்தபோதும் அவர் எழாதவகையைக் கண்டு சிவபுரச் செல்வரிடம் சென்று கூறினார். சிவஞானச் செல்வரும் முத்துச் சிவிகையின்றும் இறங்கி வந்து தம் கைமலர்களால் அணைத்தெடுத்தார். அவர் தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் கைதொழுது நின்றார். அப்பொழுது ஆளுடைய பிள்ளையார். இம்மதுரவாக்கின் போற்றினால் மீண்டும் வீழ்ந்து வணங்கி நின்று போற்றினார். ஆளுடைய பிள்ளையாரோடு கூடிச்சென்று ஆலவாய் உறையும் அவிர்சடைக் கடவுளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப்பெருமானைத் திருமடத்தில் உறையச் செய்து, அவருக்கும் பரிசனத்தார்க்கும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது. இவற்றையெல்லாம் செவ்வனே செய்தாரெனினும், தீயவை புரியும் சமணரால் தீங்கேதும் நேருமோ என அஞ்சினார். அவ்வாறு தீதேதும் நிகழின் உயிர் துறப்பதே தக்கதென்ற துணிவும் கொண்டார். அவர் அஞ்சிய வண்ணமே சமணர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த மடத்திற்குத் தீவைத்த செய்தி அவரை மனம் பதைபதைக்கச் செய்தது. ஆயினும் பிள்ளையார்க்குத் தீங்கேதும் நிகழாதது குறித்து ஆறுதல் அடைந்தார். சமணர் மடத்திற்கு வைத்த தீ மறைச்சிறுவன் ஆணையால் மன்னனை வெப்பு நோயாய் வருத்திய வேளையில் அதற்குரிய தீர்வு திருஞானசம்பந்தரேயென மதியுரை கூறினார். மன்னனும் அவர் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டிமாதேவியாரையும் அவரையும் பணித்தான். பணிப்பின்படி பாண்டிமாதேவியார் சிவிகையில் வர குதிரையேறிச் சென்ற குலச்சிறையார் சம்பந்தப்பிள்ளையார் திருமடத்தை அடைந்தார். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற ஞானசம்பந்தரைக் கண்டார். கண்ட பொழுதே அமண்கொடியோனின் கொடுந்தொழில் நினைத்து கண்ணருவி பாய கைகுவித்திறைஞ்சி திருவடியில் வீழ்ந்து அழுதார். திருவடியைப் பற்றிய கைவிடாது புரண்டயரும் அவரைப் புகலிவேந்தர் ‘ஒன்றுக்கும் அஞ்சாதீர்’ என்று அபயமளித்தார். அபயமளித்த அவர் சிவிகையில் ஏறிவர அவரை அரச மாளிகைக்கு அழைத்துச் சென்று அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமர்வித்தார். அவர் அமணர்களுடன் புரிந்த சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் யாவினும் அமைச்சராம் பாங்குடன் ஒழுகினார். புனல்வாதத்தின்போது எதிரேறிச்சென்ற திருப்பாசுர ஏட்டை குதிரையேறிச் சென்று ஏடகத்தில் எடுத்துத் தலைமிசை ஏறிவந்தார். வாதில் தோற்ற அமணரையெல்லாம் அவர் உடன்பட்டவாறே கழுவிலேற்றி முறை செய்யுமாறு அரசன் பணிக்க அப்பணிப்பின்படியே எண்ணாயிரம் அமணரைக் கழுவில் ஏற்றினார்.

திருநீறணிந்த பாண்டிய மன்னனுடன் பாண்டிமாதேவியாருடனும் பரசமய கோளரியாரை அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றுதல் செய்தார். சிவம் வளர்க்கும் செம்மலர் ஆலவாயில் அமர்ந்திருந்த நாளெல்லாம் நாடொறும் சென்று அவரைப் போற்றி வேண்டும் பணியெல்லாம் செய்தார். காழியர்பெருமானைப் பாண்டிநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுக்கும் அழைத்துச் சென்று ஈற்றில் தம் சொந்த ஊரான மணமேற்குடிக்கும் எழுந்தருளச் செய்தார் அங்கு அருள் புரியும் ஜெகதீஸ்வரர் பெருமான் ஆசிப்பெற்றார். சீகாழி மன்னர் சோழநாட்டிக்குப் புறப்படத் திருவுளம் பற்றியபோது அவரோடு கூடிச்செல்வதே குலச்சிறையாரின் ஆசையாக இருந்தது. சிவபுரச் செல்வரோ “இங்கு சிவநெறி போற்றியிருங்கள்” என்று பணித்தார். அவர் பணிவழியொழுகும் கருத்தால் பாண்டி நாட்டில் சிவநெறி விளங்குமாறு அரசகருமம் செய்து ஆலவாய் இறைவனின் அருட்தாள் சேர்ந்தார்.

ராமாயணத்தில் உள்ள குறிப்புகள்: இந்தியாவின் சிறந்த இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் மணமேல்குடி குறிப்பிடப்பட்டுள்ளது. ராமாயணத்தின்படி, ராமர் வங்காள விரிகுடாவைக் கடந்து, இந்தியக் கடற்கரையின் தென்கிழக்கு விளிம்பில் உள்ள மூன்று புள்ளிகளிலிருந்து இந்தியாவிலிருந்து இலங்கையை அடைய முயன்றார். முதலில், அவர் வேதாரண்யத்திலிருந்து (கோடியக்கரை), இரண்டாவதாக மணமேல்குடியிலிருந்து கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது, இறுதியாக அவர் ராமேஸ்வரம் தீவில் இருந்து இலங்கைக்குச் சென்றார்.

சிறப்பு அம்சங்கள்:

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய கோயில் இது. மூலஸ்தான தெய்வம் ஜகதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் மற்றும் கிழக்கு நோக்கி இருக்கிறார். அவர் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார். அன்னை ஜகத்ரக்ஷாகி என்று அழைக்கப்படுகிறார். அவள் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி மற்றும் குலச்சிறை நாயனார் சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்:

சித்ரா பௌர்ணமி, நவராத்திரி, குலச்சிறை நாயனார் குருபூஜை விழாக்கள் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மணமேல்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

அறந்தாங்கி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top