Tuesday Jul 02, 2024

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில், பெரம்பலூர்

முகவரி

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம் – 621115.

இறைவன்

இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: வாலாம்பிகை

அறிமுகம்

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். கோனேரி ஆற்றங்கரையில் வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் 4 வழிச்சாலையில் 15 கிமீ. தொலைவில் உள்ளது. இக்கோயில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சியின் வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ளது. வாலி பூசை செய்த நிலையில் இவ்வூர் வாலிகண்டபுரம் என்றழைக்கப்படுகிறது. இக்கோயில் இரஞ்சன்குடி கோட்டைக்கு 7 கிமீ தொலைவிலும், பெரம்பலூரிலிருந்து 11 கிமீ தொலைவிலும், தொழுதூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், சிறுவாச்சூரிலிருந்து 17 கிமீ தொலைவிலும் உள்ளது. இது பெரம்பலூர்-தொழுதூர் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக வாலீஸ்வரர் உள்ளார். அம்பாள் பெயர் வாலாம்பிகை. வாலி வழிபட்ட ஈசுவரர் என்ற நிலையில் இவ்வாறு அழைக்கப்படுகிறார். வாலினை நினைவுகூறும் வகையில் திருக்குளத் தூணிலும், ஆங்காங்கே பல இடங்களில் வாலியின் சிற்பங்கள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றில் பல வாலி மயமாக உள்ளன என்று கூறலாம். இங்கு வந்து மூலவரை பூஜித்த பின்னர் வாலிக்கு எதிராளியின் பலத்தில் பாதி பலம் கிடைத்ததாகக் கூறுகின்றனர். அன்னை வாலாம்பிகை ஆவார். சரவண தீர்த்தம் கோயிலின் தீர்த்தமாக உள்ளது.

புராண முக்கியத்துவம்

தென்புறத்தில் 1008 பாணம் உள்ளடக்கிய ஒரே லிங்கம். கருவறையில் வாலீஸ்வரர் சுயம்பு மூர்த்தியானதால் சற்றே ஒரு பக்கமாக சாய்ந்து காட்சியருளிக் கொண்டிருக்கிறார். இங்கு வந்திருந்து பூஜை செய்வித்துதான். எதிராளியின் பலத்திலிருந்து சரி பாதியினைத் தன் பலத்துடன் சேர்த்து பெற்றுக் கொண்டு எவரையும் வீழ்த்தும் சக்தியினை வாலி பெற்றதாகப் புராண வரலாறு. தூரத்திலிருந்து பார்க்கும்போதே அழகிய ஏழு நிலை ராஜகோபுரம். அப்படியே நம் மனசுக்குள் எழுந்து நிற்கிறது. திருவுருவச் சிலைகள் ஏதுமற்ற வேலைப்பாடுகளுடனான பீடங்கள் பொருந்திய ராஜகோபுரம் இது. சகஸ்ர கோபுரம் எனக் குறிப்பிடப்படுகிறது. கோபுர உச்சியில் ஒன்பது கலசங்கள் மிளிர்கின்றன. ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில். வாலி பூஜை செய்த இறைவனுக்கு வாலீஸ்வரர் என்றும், ஊருக்கு வாலி கொண்டபுரம் என்றும் பெயர். அதுவே மருவி தற்போது வாலிகண்டபுரம் ஆனாலும் முதலாம் ராஜராஜ சோழன் தனது வெற்றிப் பெயர்களுள் ஒன்றான கேரளாந்தகனை நினைவுபடுத்தும் விதமாக இந்த ஊருக்கு கி.பி 1013 ல் கேரளாந்தகபுரம் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்ததாகக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. மகா மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கி துர்க்கை அம்சத்துடன் அன்னை வாலாம்பிகை. நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். கருவறைக்குப் பின்புறமாக மகாமண்டபச் சுற்றில் கை பின்னமான தண்டாயுதபாணியும், பின்னமான தட்சிணாமூர்த்தியும் பதிக்கப்பட்டுள்ளனர். காது மடல் நீண்டு தொங்கும் ஆதி தண்டாயுதபாணி அடுத்து வடமேற்கு மூலையில் ஆதிகாலத்தில் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கொற்றவை. மகா மண்டப பிராகாரச் சுற்றில் தென் திசையில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் ஏழரை அடி உயரத்தில் கையில் வேலுடன் கருணையே வடிவமாகக் காட்சியளிக்கிறார் தண்டாயுதபாணி, அருணகிரிநாதருக்கு முக்திக்குரிய தலம் எதுவென்று இங்குதான் அருளப்பட்டது. தண்டாயுதபாணியின் திருமுகம் மேற்குப்புறமாக சற்றே சாய்ந்து நளினமும் சாந்தமும் அருளும் நிறைந்து இங்கு காணப்படுவது மிக மிகச் சிறப்பு. வடக்கு திசைநோக்கிய இந்த தண்டாயுதபாணி, எம பயம் நீக்கி நீண்ட ஆயுளைத் தர வல்லவர்.

நம்பிக்கைகள்

எம பயம் நீக்கவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரத் திருவிழா இங்கு மிக முக்கியத் திருவிழா. அஷ்டமி பூஜை இங்கு வெகு சிறப்பு.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வாலிகண்டபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அரியலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top