Tuesday Jul 02, 2024

திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர்- 613 203. திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 94434 47826,+91- 94427 29856

இறைவன்

இறைவன்: வியாக்ரபுரீசுவரர் , பிரியநாதர் இறைவி: செளந்தரநாயகி, அழகம்மை

அறிமுகம்

பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 53வது சிவத்தலமாகும். இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் அல்லது பிரியநாதர்; இறைவி சௌந்தரநாயகி.

புராண முக்கியத்துவம்

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்-புலி; பாதர்-கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது. நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.

நம்பிக்கைகள்

புது வாகனம் வாங்குபவர்கள் பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தால், எந்த விபத்தும் ஏற்படாது என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார். லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோயில். பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, நால்வர், அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராஹி, பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நடராஜர் சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தில்லைஸ்தானம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top