Tuesday Jul 02, 2024

திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோவில், திருச்சி

முகவரி

அருள்மிகு திருநெடுங்களநாதர், நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருநெடுங்களம்-620015 திருச்சி மாவட்டம். போன்: +91- 431-252 0126.,2510241 9965045666

இறைவன்

இறைவன்: திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர். இறைவி: மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.

அறிமுகம்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம்.திருச்சி மாவட்டத்தில் துவாக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் நித்தியசுந்தரர்; இறைவி ஒப்பிலா நாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள எட்டாவது சிவத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம். திருநெடுங்களம் என்றால் “சமவெளியில் அமைந்த பெரிய ஊர்’ என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார். கோயில் இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. கோயில் முதல் வாயிலில் கோபுரம் கிடையாது. இரண்டாவது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும், வடக்கில் அகஸ்தியர் சன்னதியும் உள்ளது. இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை. காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினார். இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார். ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி பூஜை சிறப்பாக நடக்கும்.

திருவிழாக்கள்

பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பு. நடராஜருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. நால்வருக்கும் அவரவர்க்குரிய திருநட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சி சத்திரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top