Tuesday Jul 02, 2024

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சீபுரம்

முகவரி

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் – 603109, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91-44- 2744 7139, 94428 11149

இறைவன்

இறைவன்: வேதகிரீஸ்வரர், இறைவி: திரிபுரசுந்தரி

அறிமுகம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

புராண முக்கியத்துவம்

பூஷா , விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டி தவஞ்செய்தனர்.இறைவன் தோன்றி வரம் தரும்போது மறுத்து சாயுஜ்ஜியப் பதவி தந்து,. இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை கழுகுருவம் அடைக என்ற சாபமிட்டார். கழுகுகளாய்ப் பிறந்து சம்பு ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர். தினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம். கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள். சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும் அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.தீராத வியாதிகள் தீருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர்.இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் .திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.

சிறப்பு அம்சங்கள்

கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்கு திருக்கழுகுன்றம் என பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம். சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் வேதமே மலையாக அமைந்த தலம் கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம் சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம். இறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தந்த தலம். என்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம். உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பரவசமாய் புகழப்பெற்ற தலம். சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்ட முனிவர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார். சிவலிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது.மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறந்து கொண்டிருப்பதால் சங்கு தீர்த்தம் என பெயர்பெற்றது. மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் : 1. இந்திர தீர்ததம் 2. சம்பு தீர்த்தம் 3. உருத்திர தீர்த்தம் 4. வசிட்ட தீர்த்தம் 5. மெய்ஞான தீர்த்தம் 6. அகத்திய தீர்த்தம் 7. மார்க்கண்ட தீர்த்தம் 8. கோசிக தீர்த்தம் 9. நந்தி தீர்த்தம் 10. வருண தீர்த்தம் 11. அகலிகை தீர்த்தம் 12. பட்சி தீர்த்தம் குளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடீய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேய மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது. இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன் பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார். மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வான். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை. அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.

திருவிழாக்கள்

சித்திரை பெருவிழா – 10 நாட்கள் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர் ஆடிப்பூரம் – அம்பாள் உற்சவம் -10 நாட்கள் – இவ்விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் கிரிவலம்: பௌர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கழுக்குன்றம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top