Sunday Jul 07, 2024

சபரிமலை ஐயப்பன் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், கேரளா

முகவரி

சபரிமலை ஐயப்பன் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், சபரிமலை, ரன்னி வட்டம், பத்தனம்தித்தா மாவட்டம், கேரளா மாநிலம் – 689662.

இறைவன்

இறைவன்: ஐயப்பன்

அறிமுகம்

கேரளாவில் உள்ள சாஸ்தா கோவில்களில் மிகவும் புகழ்பெற்றதும் முக்கியமானதும் ஐயப்ப சுவாமிக்காக கட்டப்பட்ட சபரிமலை ஸ்ரீ தர்மஸ்தலா கோவிலாகும். இது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட 5 கோடி பேர் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்து வருகிறார்கள். கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கடும் விரதம் மேற்கொள்வார். மண்டல பூஜையில் தொடங்கி, மகர விளக்கு வரை சிலர் இந்த விரதத்தைத் தொடர்ந்து இருந்து மலைக்குச் செல்வார்கள். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும்.

புராண முக்கியத்துவம்

நீதியும் நேர்மையும் புத்திசாலித்தனமும் இறையாண்மையும் கொண்ட மன்னர் ராஜசேகர் அவருடைய குடிமக்களால் மிகுந்த மரியாதையுடன் போற்றப்பட்டார். அவருடைய ஆட்சிக்காலம் அந்த நாட்டின் பொற்காலமாக இருந்தது. ஆனால் மன்னருக்கோ மிகப்பெரிய மனக்குறை ஒன்று இருந்தது. அவருக்கு குழந்தை இல்லை. அவருடைய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு மகுடத்தை ஏற்க ஒரு வாரிசு இல்லை. மகிழ்ச்சியற்ற ராஜாவும் அவருடைய பட்டத்து ராணியும் ஒரு குழந்தைக்காக சிவபெருமானிடம் இடைவிடாமல் வேண்டினர். அதே நேரத்தில் மகிஷாசுரன் என்கிற அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டான். அவனுடைய கடுமையான தவத்தின் விளைவாக மகிஷனை பூமியில் யாராலும் அழிக்க முடியாது என்கிற அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வரம் அளிக்க வேண்டிய கட்டாயம் பிரம்மதேவனுக்கு ஏற்பட்டது. பிரம்மன் கொடுத்த வரத்தால் அசாத்திய தைரியம் அடைந்த மகிஷாசுரன் மனிதர்களையும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பழங்குடி சமூகத்தினரையும் படிப்படியாக அழிக்கத் தொடங்கினான். அவனுடைய கொடுமையான செயல்களால் பயந்து போன மக்கள் தூர தேசங்களுக்கு ஓடிவிட்டனர். ஒரு தெய்வீக சக்தியால் மட்டுமே அவனை அழிக்க முடியும் என்பதை உணர்ந்த தேவர்கள் துர்காதேவியை தஞ்சமடைந்தனர். துர்க்கை அம்மன் அவனை ஒரு ரத்தக்களறி போரில் கொன்றார். தனது சகோதரனைக் கொன்றவர்களை பழிவாங்க உறுதி பூண்ட மகிஷாசுரனின் சகோதரி மகிஷி பிரம்மனை நோக்கி கடுந்தவம் புரிந்து மகா விஷ்ணுவுக்கும் (ஹரி) மற்றும் சிவபெருமானுக்கும் (ஹரன்) பிறக்கும் குழந்தையால் மட்டுமே தன்னை கொல்ல முடியும் என்கிற ஒரு வரத்தைப் பெற்றுக் கொண்டாள். அதன் பிறகு தேவலோகத்திற்கு சென்ற மகிஷி தேவர்களைத் துன்புறுத்த தொடங்கினாள். இதனால் வேதனையுற்ற தேவர்கள் மகாவிஷ்ணுவை இதில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி வேண்டினர். ஹரிஹரனுக்கு பிறக்கும் மகனைத் தவிர வேறு யாராலும் மகிஷியை கொல்ல முடியாது என்கிற வரத்தை அவள் பெற்றிருப்பதால் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். விஷ்ணுவின் பெண் வடிவமான மோகினிக்கும் சிவபெருமானுக்கும் இணைவு ஏற்பட்டு அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்து அதை சிவபக்தனான குழந்தையில்லாத பந்தளராஜன் ராஜசேகரனின் பராமரிப்பில் விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒருநாள் பம்பை நதிக்கரையில் உள்ள காடுகளில் வேட்டையாட பயணம் மேற்கொண்ட மன்னன் ராஜசேகரன் ஆற்றங்கரையின் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுப்புறம் மற்றும் நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது காட்டிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார். திகைத்துப்போன அந்த மன்னன் ஒலி வந்த திசையை நோக்கி பின்தொடர்ந்து சென்ற போது அங்கே ஒரு அழகான குழந்தை கை கால்களை உற்சாகமாக உதைத்தபடி படுத்து கிடந்தது. குழப்பத்துடன் அங்கே நின்ற மன்னன் குழந்தைக்கு சொந்தமானவர்கள் யாரும் சுற்றிலும் இல்லாததால் இந்த குழந்தையை தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று மனதில் ஏக்கம் கொண்டார். அந்த தெய்வீகக் குழந்தையை மன்னன் ராஜசேகரன் பார்த்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஒரு முனிவர் தோன்றி ‘குழந்தையை உனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்துக்கொள்’ என்று அறிவுறுத்தினார். மேலும் அந்தத் துறவி இந்த குழந்தை உனது அரச வம்சத்தின் எல்லாத் துன்பங்களையும் நீக்குவான் என்றும் சிறுவனுக்கு 12 வயதாகும்போது மன்னர் ராஜ சேகரனுக்கு அந்தக் குழந்தையின் தெய்வீகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்றும் உறுதியளித்தார். கையில் கிடைக்கும் போதே குழந்தை கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததால் தங்கக் கழுத்து உடையவன் என்கிற பொருள்படுமாறு குழந்தைக்கு ‘மணிகண்டன்’ என்று பெயர் சூட்டும்படி அந்த சாது அறிவுறுத்தினார். பரவசமடைந்த மன்னன் ராஜசேகரன் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களை ராணியிடம் விவரித்தார். அவர்களிருவரும் சிவபெருமானின் அருளால் இந்த குழந்தை கிடைத்ததாக பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் வரவில் பந்தள நாடே மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தபோது மன்னர் ராஜசேகரனின் காலத்திற்குப் பிறகு நானே இந்த நாட்டிற்கு மன்னராக வேண்டும் என்று கனவு கோட்டை கட்டியிருந்த அரசவை திவான் மட்டும் அரச தம்பதியரின் மகிழ்ச்சியால் கொதிப்படைந்தான். குழந்தையிலிருந்தே மணிகண்டன் மிகவும் புத்திசாலியாகவும் மதிநுட்பத்துடனும் இருந்தான். தற்காப்புக் கலைகள் மற்றும் சாஸ்திரங்களில் சிறந்து விளங்கிய மணிகண்டன் தனது புத்திசாலித்தனம் மற்றும் தெய்வீக ஆற்றலால் தனது குருவை ஆச்சரியப்படுத்தினான். பந்தள நாட்டில் அமைதியும் செல்வமும் நிரம்பி வழிந்தது. காலப்போக்கில் குரு, மணிகண்டன் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல தெய்வீக அவதாரம் என்கிற முடிவுக்கு வந்தார். படிப்பை முடித்தவுடன் மணிகண்டன் தனது குருவுக்கு குருதட்சனை வழங்கவும் அவருடைய ஆசியைப் பெறவும் சென்றார். மணிகண்டன் தனது ஆன்மீக குருவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக அணுகியபோது குரு மணிகண்டனை பற்றி தான் ஏற்கனவே ஊகித்தவாறு, மணிகண்டன் ஒரு மனிதப்பிறவி அல்ல மனிதகுல நன்மைக்காக படைக்கப்பட்ட தெய்வீக சக்தி என்பதை விளக்கினார். மேலும் குரு மணிகண்டனிடம் பிறவியிலேயே பார்வையற்றவனாகவும் ஊமையாகவும் இருந்த தன் மகனுக்கு பார்வை மற்றும் பேச்சுத்திறனை கொடுக்குமாறு மன்றாடினார். மணிகண்டன் தனது தெய்வீக திருக்கரங்களை குருவுடைய மகனின் தலையில் வைத்த அடுத்த நிமிடம் உடனடியாக அந்த பையனுக்கு பார்வையும் பேச்சுத்திறனும் கிடைத்தது. தனது அதிசய சக்தியைப் பற்றி யாரிடமும் சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட மணிகண்டன் அரண்மனைக்குத் திரும்பினார். அதே நேரத்தில் இத்தனை வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த மகாராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டனர். இப்படிப்பட்ட அதிசய நிகழ்வுகளுக்கு ஏதோ ஒரு வகையில் மணிகண்டனுக்கு தொடர்புள்ளதை உணர்ந்த ராஜசேகரன் மணிகண்டனுக்கு மன்னராக முடிசூட்ட முடிவு செய்தார். ஏனென்றால் அவர் வெளிப்படையாகவே ஐயப்பனை தனது மூத்த மகனாகக் கருதினார். மன்னருடைய அமைச்சரை தவிர மற்ற எல்லோரும் இதனால் மனம் மகிழ்ந்தனர். அரசனாக வேண்டும் என்கிற அபிலாஷையை மனதுக்குள் ரகசியமாக வளர்த்து வந்த தந்திரக்காரனான மந்திரி, தெய்வீக அவதாரமான மணிகண்டனை அழிக்க உணவில் விஷம் வைப்பது உள்ளிட்ட பல்வகை திட்டங்களை வகுத்தான். எல்லா சதித் திட்டங்களிலிருந்தும் மயிரிழையில் உயிர் தப்பிய மணிகண்டனுக்கு ஆனால் அவருடைய உடலில் யாராலும் குணப்படுத்த முடியாத அளவுக்கு ஒரு காயம் ஏற்பட்டு விட்டது. இறுதியில் மருத்துவருடைய மாறுவேடத்தில் சிவபெருமானே வந்து சிறுவனை குணப்படுத்தினார். தனது திட்டங்கள் தோல்வியடைந்ததால் அமைச்சர் மகாராணியிடம் சென்று தன் சொந்த மகன் உயிருடன் இருக்கும்போது மன்னர் ராஜசேகரன் தனக்குப் பிறகு மணிகண்டனுக்கு முடி சூட்டுவது முறையாகாது என்று கூறி ராணியின் மனதில் நஞ்சை விதைத்தார். ஒரு உன்னதமான முடிவிற்காக எந்த ஒரு தவறான செயலையும் செய்வது தவறல்ல என்று அர்த்தசாஸ்திரம் நியாயப்படுத்துவதைச் சுட்டிக்காட்டி மகாராணியை சமாதானப்படுத்தி அவளை நோய்வாய்ப்பட்டபடி நடிக்குமாறு தூண்டினார். புலி பாலைத் தடவினால் மட்டுமே உங்கள் நோயை குணப்படுத்த முடியும் என்று ராஜ வைத்தியர் அறிவிப்பார் என்று ராணிக்கு உறுதியளித்தான். புலிப்பால் கொண்டுவர கொடிய காட்டு விலங்குகளுக்கு இரையாகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும் அடர்ந்த வனப் பகுதிக்கு செல்லுமாறு மணிகண்டன் நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்தப் பணியை முடிக்காமல் நாடு திரும்பினாலும் ராஜசேகரனுக்கு மணிகண்டன் மீதுள்ள அன்பு முன்பு போலவே இருக்கும். தனது சொந்த மகன் மீது இருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் மதியிழந்த மகாராணி மந்திரியுடன் இணைந்து கூட்டு சதியில் பங்கேற்று பயங்கரமான தலைவலியால் அவதிப்படுவதை போல நடிக்கத் தொடங்கினாள். பதட்டமடைந்த மன்னர் அரசாங்க மருத்துவர்களை வரவழைத்தார். வேண்டுமென்றே நோய்வாய்ப்பட்ட ராணியை யாராலும் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் மந்திரியின் கூட்டு சதியில் பங்கேற்ற மருத்துவர்கள் ஒரு தாய்ப்பாலூட்டும் பெண் புலியின் பால் கிடைத்தால் மட்டுமே மகாராணியின் நோயை குணப்படுத்த முடியும் என்று அறிவித்தார்கள். நோய்வாய்ப்பட்ட மகாராணியை குணப்படுத்தினால் தனது சாம்ராஜ்யத்தில் பாதியை எழுதித் தருவதாக மன்னர் ராஜசேகரன் அறிவித்தார். புலிப்பால் கொண்டு வருவதற்காக ராஜசேகரனால் அனுப்பப்பட்ட தளபதிகளின் படை வெறுங்கையுடன் நாடு திரும்பியது. மணிகண்டன் உதவ முன்வந்தான் ஆனால் சிறுவனின் சிறுவயது மற்றும் வரவிருக்கும் முடிசூட்டுவிழா ஆகிய காரணங்களை சொல்லி மன்னர் மணிகண்டனின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டார். இதற்கெல்லாம் சலிக்காத மணிகண்டன் தனக்கு இந்த ஒரு விருப்பத்தை மட்டும் நிறைவு செய்யும்படி தந்தையிடம் தொடர்ந்து வற்புறுத்தினார். மகனின் இந்த முடிவில் மகிழ்ச்சியற்ற பெற்றோராக மன்னர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இந்த வாய்ப்பை அழுத்தமாக பிடித்துக் கொண்ட மணிகண்டன் தன்னை புலிப்பால் கொண்டு வருவதற்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து மன்னருக்கு அழுத்தம் கொடுத்தார் சிறுவனுடன் வனப்பகுதிக்கு செல்வதற்கு வீரர்களின் ஒரு குழுவை ஏற்பாடு செய்யும் ராஜசேகரனின் முயற்சிகளையும் மணிகண்டன் நிறுத்திவிட்டார். படை கூட்டத்தைக் கண்டால் அமைதி இழந்து புலி பயந்து ஓடிவிடும் என்று வாதித்தார். மன்னர் ராஜசேகரன் வேறு வழியின்றி அரை மனதுடன் மகனை வழியனுப்பி வைத்தார். மணிகண்டனுக்கு வழியில் சாப்பிடும் உணவுப் பொருட்கள் மற்றும் சிவபெருமானின் உருவகமாக கருதப்படும் மூன்று கண்களை கொண்ட நெய்த் தேங்காயை கொடுத்தனுப்பினார். சிவபெருமானின் பஞ்பூத கணங்களும் மணிகண்டன் காட்டை நோக்கி பயணிக்கத் தொடங்கியதும் பின்தொடர்ந்தனர். ஆனால் வழியில் தேவலோகத்தில் மகிஷியின் அட்டூழியங்களை கண்ட மணிகண்டன் சினம் கொண்டு அவளை பூமியில் வீசி எறிந்தார். அவள் அழுதா நதிக்கரையில் வந்து விழுந்தாள். விரைவில் இரத்தப் போர் தொடங்கியது. இறுதியில் மணிகண்டன் மகிஷியின் மார்பில் ஏறி ஆக்ரோஷமாக நடனமாடத் தொடங்கினார். அந்த நடனத்தால் பூலோகமும் தேவலோகமும் அதிர்ந்தது. தேவர்களும் நடுநடுங்கிப் போயினர். அப்போது தன் மீது ஏறி நிற்கும் அந்த தெய்வ அவதாரம் ஹரி ஹரனின் மகன் என்று மகிஷி உணர்ந்து கொண்டாள். சிறுவன் காலடியில் அடிபணிந்து தொழுது பின்னர் உயிரை விட்டாள். மகிஷியை வென்ற மணிகண்டன் புலிப்பால் தேடி காட்டிற்கு சென்றார். அங்கே சிவ தரிசனம் செய்த மணிகண்டனிடம் சிவபெருமான், ‘உன் அவதார நோக்கமான தெய்வீகத் திருப்பணியை முடித்து விட்டாய் இருந்தாலும் நீ நிறைவு செய்ய வேண்டிய மற்றொரு மிகப்பெரிய பணி ஒன்று இருக்கிறது’ என்றார். ‘நீ பத்திரமாக திரும்பி வர வேண்டுமென்று வருத்தத்துடன் காத்திருக்கும் உன் தந்தை மற்றும் நோய்வாய்ப்பட்ட உன் தாயாரை விரைவில் போய் பார்’ என்று நினைவுபடுத்தினார். மேலும் புலிப்பால் கொண்டு செல்லும் பணியில் தேவேந்திரன் உனக்கு உதவி செய்வார் என்று உறுதியளித்தார். அதன்படி மணிகண்டன் புலி உருவெடுத்த தேவேந்திரன் மீதேறி அமர்ந்து தேவர்களும் தேவ கன்னிகைகளும் ஆண் மற்றும் பெண் புலிகளாக புடைசூழ அரண்மனையை நோக்கி பயணித்தார். புலி மீது ஏறி வரும் சிறுவனைப் பார்த்து பயந்துபோன பந்தள நாட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி ஆங்காங்கே ஒளிந்து கொண்டனர். அப்போது முதன்முதலில் காட்டில் மணிகண்டனை ராஜசேகரன் கண்டெடுத்த போது தோன்றிய அதே முனிவர் இப்போதும் தோன்றி திகைப்பில் ஆழ்ந்த பந்தள நாட்டு குடிமக்களுக்கு மணிகண்டனின் உண்மையான தெய்வீக அவதாரத்தைப் பற்றி எடுத்துரைத்தார். புலிகள் புடைசூழ மணிகண்டன் அரண்மனை கதவை நோக்கி வந்தபோது மன்னர் கவலை தோய்ந்த முகத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தார். புலி மேலிருந்து இறங்கிய மணிகண்டன் இப்போது மகாராணியாருடைய இனம் தெரியாத நோய்க்கு புலிப்பாலை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். மகாராணியுடைய பாசாங்கை புரிந்துகொண்ட மன்னர் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சிறுவனின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து மன்னித்து விடுமாறு வேண்டினார். மகாராணியின் நோய் நீங்கியவுடன் மணிகண்டன் அரண்மனையை விட்டு வெளியேறி காட்டிற்கு சென்று விட்டார். மணிகண்டன் காட்டிற்கு சென்ற அந்த நாளில் அவருக்கு பன்னிரெண்டாவது வயது தொடங்கியது. மணிகண்டன் காட்டிற்கு சென்றதற்கு காரணமான மந்திரியை ராஜசேகரன் தண்டிக்க முடிவு செய்தார். இருந்தாலும் தெய்வீக விருப்பத்திற்கிணங்க அந்த முடிவை நிறுத்தினார். மேலும் மணிகண்டன் மகிஷியை அழிப்பதற்காக இது தானே மேற்கொண்ட நாடகம் என்று தந்தைக்கு புரிய வைத்தார். தன்னுடைய தெய்வ காரியம் நிறைவடைந்து விட்டதால் தான் தேவலோகத்திற்கு திரும்ப வேண்டும் என்று சொன்னார். புறப்படுவதற்கு முன் தந்தை ராஜசேகரனின் அளவில்லாத பக்தியை கண்டு மெச்சிய மணிகண்டன் மன்னருக்கு ஒரு வரம் கொடுக்க விரும்புவதாக சொன்னார். உடனடியாக மன்னர் ராஜசேகரன் மணிகண்டனின் நினைவாக தான் ஒரு கோயிலை கட்ட விரும்புவதாகவும் கோயில் கட்டுவதற்கு பொருத்தமான இடத்தை பரிந்துரைக்குமாறு மணிகண்டனிடம் மன்றாடினார். உடனே மணிகண்டன் தன்னுடைய அம்பை எடுத்து வில்லை எறிந்தார். அது ஒரு இடத்தில் சென்று தைத்தது. அந்த இடம் ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரை நோக்கி சபரி என்கிற பெண் துறவி தவமிருந்த இடமாகும். அந்த இடம் தான் சபரிமலை. சபரிமலையில் தனக்கு கோயில் கட்டும்படி மன்னர் ராஜசேகரனிடம் கூறிய மணிகண்டன் உடனடியாக மாயமானார். அதற்குப் பிறகு அகஸ்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி மன்னர் ராஜசேகரன் சபரிமலை கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். 41 நாள் கடுமையான விரதமிருந்து தன்னை தரிசிக்க வருபவர்களுக்கு மட்டுமே தரிசனம் கொடுப்பேன் என்று மணிகண்டன் அசரீரியாகச் சொன்னார். அதேநேரத்தில் மன்னர் ராஜசேகரன் கோயில் கட்டும் பணியை முடித்தார். கோவில் கர்ப்பக்கிரகத்தை அடைவதற்கு புனிதமான பதினெட்டு படிகளையும் அமைத்தார். ஆனால் இறைவனின் சிலையை நிறுவும்போது மன்னருக்கு குழப்பங்கள் ஏற்பட்டது. அப்போது சுவாமி ஐயப்பனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. பம்பை நதி கங்கை நதியை போன்ற புனிதமான நதியாகும். சபரிமலை காசியை போன்ற புனித ஸ்தலமாகும். அப்போது தர்ம சாஸ்தாவால் அனுப்பப்பட்ட பரசுராமன் கடலுக்கு அடிப்பகுதியிலிருந்து கேரள நிலத்தை சபரிமலையின் உயரத்திற்கு எழுப்பி அவரே ஐயப்ப சுவாமியின் திருவுருவத்தை சிலையாக செதுக்கி மகரசங்கராந்தி நாளன்று பிரதிஷ்டை செய்தார்.

நம்பிக்கைகள்

இல்லற வாழ்க்கையின் இகபர சுகங்களிலிருந்து விலகி ஒரு பிரம்மச்சாரி போன்ற வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து பக்தர்கள் இந்த 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரதம் வாழ்நாள் முழுவதற்கும் நன்மையை தொடர்ந்து பிரதிபலிக்கிறது. சுவாமி ஐயப்பன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் சென்றபோது தலையில் பள்ளிக்கட்டு சுமந்து அதில் உணவுப் பொருட்களும் நெய் அடங்கிய மூன்று கண் கொண்ட தேங்காயும் கொண்டு சென்றதைப் போல பக்தர்கள் இருமுடி சுமந்து தேங்காயை எடுத்துக் கொண்டு தலையில் ஆனந்த மாலையை அணிந்த படி சபரி மலையின் செங்குத்தான சரிவுகளில் ஏறும்போது சரண கோஷங்கள் பாடிக்கொண்டு இறுதியில் பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கின்றனர்.

திருவிழாக்கள்

மண்டல பூஜை என ‎அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் ‎திசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14- “மகர ‎சங்கராந்தி”) மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு ‎மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் ‎பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. ‎

காலம்

5000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பம்பை

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கனூர் அல்லது கோட்டயம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம் அல்லது கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top