Sunday Jul 07, 2024

கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம். போன்: 91 427 2267 845

இறைவன்

இறைவி: கோட்டை மாரியம்மன்

அறிமுகம்

கோட்டை மாரியம்மன் கோயில் சேலம் நகரின் பழமையான யாத்திரை தலங்களில் ஒன்றாகும், இது நகரின் மையத்திலும் திருமணிமுத்தாறு ஆற்றின் கரையிலும் அமைந்துள்ளது. கோவிலின் முதன்மை தெய்வம் கோட்டை மாரியம்மன். இந்த கோவிலின் மிகவும் பிரபலமான அம்சம் அதன் செவ்வாப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஒரு வாரம் நடைபெறும். தற்போதைய சேலம் மாவட்டம் அப்போது சேரநாட்டிற்கு சொந்தமானது என்பதால், சேர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில். கோட்டை பெரிய மாரி என்று அழைக்கப்படும் மாரியம்மன் கோயில், ஆங்கிலேயர்களுக்கு முந்தைய காலத்தில் சேலம் கோட்டையின் காவல் தெய்வமாக இருந்தது. சேலத்தில் உள்ள பழமையான கோவில் இது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோயில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது.

புராண முக்கியத்துவம்

கொங்கு மண்டலம் மலை வளமும், மண் வளமும், தமிழ் கமழ விளங்கிய நாடாக விளங்கியது. சேலம் சேரநாட்டின் ஒரு பகுதியாக திகழ்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முன் சேரநாட்டை சேர்ந்த சிற்றரசர்கள் சேலத்தில் கோட்டை எழுப்பினர். கோட்டையில் தங்கியிருந்த வீரர்கள், அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். காலத்தின் ஓட்டத்தில் அப்பகுதியில் இருந்த கோட்டை இன்று குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டது. கோட்டை இருந்ததற்கான கோட்டை மேடு என்ற பகுதி இன்றும் உள்ளது.

நம்பிக்கைகள்

அம்மன் நோய், கண் சம்பந்தப்பட்ட நோய் நீங்க, திருமணத்தடை, குடும்ப பிரச்சனை நீங்க இங்கு வழிபடுகின்றனர். மண் உரு சாத்துதல் : அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும். கண்ணடக்கம் சாத்துதல் : கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்துவர். உருவாரம் சாத்துதல் : நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பர். அடியளந்து கொடுத்தல் : பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை திருக்கோயிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர். உப்பு மிளகு போடுதல் : பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் குங்குமம் கலந்த உப்பை பலிபீடபீ த்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம். இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம்,குழந்தை பாக்கியம் கைகூடுகிறது பூப்போட்டுப் பார்த்தல் : இத்திருக்கோயிலில் பூப்போட்டு கேட்டல்பிரசித்தமானது.குடும்பத்தில் சிக்கல் தீர, திருமணம் நடைபெற, நோய் தீர, உத்தியோகம் கிடைக்க…இப்படி தங்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பக்தர்கள் வெள்ளை , சிவப்பு நிறங்களில் உள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள். தாம் நினைத்த நிறப் பூ வந்து விட்டால் தாம் எண்ணி வந்த செயல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள மாரியம்மன் திருமணிமுத்தாறு நதிக்கரையில் எழுந்தருளியுள்ளார். முன்பு பக்தர்கள் திருமணிமுத்தாற்றில் நீராடி, பின்னர் அம்மனை தரிசனம் செய்து வந்தனர். கொங்கு மண்டலத்தில் கோட்டை மாரியம்மன் தனி சிறப்புடன் இருந்ததால், சுற்றுபகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மனை தரிசிக்க நடைபயணமாக வந்து சென்றனர். இதற்காக 1876 பழைய கோட்டை பட்டக்காரர் பார்வதியம்மாள், முத்துக்குமார பிள்ளை ஆகியோர் தர்ம சத்திரம் ஒன்றை கட்டிக் கொடுத்தனர். 1881ம் ஆண்டு கோட்டை மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அம்மன் சிரசில் ஜூவாலா கிரீடம், அக்னி கிரீடம் அமைப்பில் நாகம் படம் எடுத்தவண்ணம் உள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்கரத்தில் திரிசூலம் இருக்கிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய், இடது கீழ்கரத்தில் கபாலத்துடன் காட்சி தருகிறாள். இடது காலை மேல் யோகாசனமாய் மடித்து ஈசான திசையை நோக்கி அமைதி வடிவாய் ஆனந்த முகத்துடன் வீற்றிருக்கிறார். அன்னையின் அடியவர்கள் மாரி (மழை) வேண்டி விழா எடுத்தனர். அன்னையும் மனமுருகி செவி மழை பொழிந்தாள். இதனால் ஆடி முழுவதும் மழை பெய்து 18ம் நாள் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

திருவிழாக்கள்

கோட்டை மாரியம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருட பிறப்பு, ஆடிபெருக்கு விழா போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடித்திருவிழா இது இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும், இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று பிற மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்று தொட்டு வரும் நிகழ்ச்சி ஆகும். இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிஷேகம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சேலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி, கோயம்பத்தூர்

0
Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top