Thursday Jul 04, 2024

கூடல்மாணிக்கம் திருக்கோயில், கேரளா

முகவரி

கூடல்மாணிக்கம் திருக்கோயில், மனவளச்சேரி, இரிஞ்ஞாலகுடா, திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680121.

இறைவன்

இறைவன்: கூடல்மாணிக்கம் (பரதன்), விஷ்ணு

அறிமுகம்

கூடல்மாணிக்கம் கோயில் அல்லது குடல் மாணிக்கம் கோயில் / கூடல்மாணிக்கியம் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தின், திரிசூர் மாவட்டத்தில், இரிஞ்ஞாலகுடா,அருகேயுள்ள மனவளச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலில் பிரதான கட்டமைப்பு, கோட்டைகளுடன் கூடிய சுவர்களுடன் அமைந்துள்ளது. பிரதான கட்டமைப்பைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அதில் ஒரு குளம் சுவர் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளது. இராமரின் மூன்றாவது சகோதரரான பரத வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பழங்கால கோயில் கூடல்மாணிக்கம் கோயிலாகும். இருப்பினும் கோயிலின் முக்கியச் சிலை விஷ்ணுவாகும். கூடல்மாணிக்கத்தின் கோயிலில் மற்றொரு தெய்வத்துடன் தொடர்புடைய பெயர் “சங்கமேஸ்வரர்” (சங்கமத்தின் இறைவன்) என்பதாகும். இது ” நாலம்பலம் ” என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் உள்ள நான்கு கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். ஒவ்வொரு கோயிலும் இராமாயணத்தில் உள்ள நான்கு சகோதரர்களான இராமன், பரதன், இலட்சுமணன் மற்றும் சத்ருக்கன் . ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

கூடல்மாணிக்கம் கோயிலின் முந்தைய வரலாற்று குறிப்பு கி.பி 854 தேதியிட்ட சேர மன்னர் ஸ்தானு ரவி வர்மனைப் பற்றி எழுதப்பட்ட கல்வெட்டில் காணப்படுகிறது. இதில் கோயிலுக்கு ஏராளமான நிலங்களை நன்கொடையாக அளித்தது பற்றி குறிப்பிடுகிறது. ஆகையால், இந்த தேதிக்கு முன்பே இந்த கோயில் இருந்திருக்க வேண்டும் என்றும், கூடல்மாணிக்கம் கேரள கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும் கருதுவது நியாயமானதே. இரிஞ்ஞாலக்குடா வரலாற்றில் கூடல்மாணிக்கம் கோவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இப்பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பெரும்பாலான நிலங்கள் கூடல்மாணிக்கம் கோயில் மற்றும் திருவாங்கூரின் தச்சுடயா கைமாலிடம் 1971 வரை இருந்தன. விஷ்ணுபக்தரான வக்கே கைமால் என்பவர் கிராமத்தலைவராக இருந்தார். ஒருநாள், அவருடைய கனவில் இந்திரலோக தேவர் ஒருவர் தோன்றினார். திடுக்கிட்டு கண்விழித்த போது, அந்த தேவர் கண்ணெதிரில் நின்றிருந்தார். கைமால் என்னுடன் உடனே வாருங்கள். கடற்கரையில் புதையல் ஒன்று இருக்கிறது, என்று கூறி அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது, நான்கு சிலைகள் இருந்தன. பார்ப்பதற்கு ஒன்று போல தோற்றம் தரும் இச்சிலைகள் தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகளான ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கனர் ஆகியோரின் விக்ரகங்கள் என்பது தெரியவந்தது. திரிப்பறையார் என்னுமிடத்தில் ராமரையும், இரிஞ்ஞாலக்குடாவில் பரதரையும், மொழிக்குளத்தில் லட்சுமணரையும், பாயம்மாளில் சத்ருக்கனரையும் மூலவராக வைத்து கோயில்கள் அமைக்கப்பட்டன. ஒரே நாளில் தரிசனம்: ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்கனர் ஆகிய நான்கு சிலைகளும் பார்ப்பதற்கு ஒரே தோற்றம் கொண்டவை. விஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதாயுதம், ஜபமாலை ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றனர். நால்வரும் அருள்புரியும் தலங்களுக்கு ஒரேநாளில் சென்று வரலாம். அனைத்தும் இரிஞ்ஞாலக்குடாவைச் சுற்றி போக்குவரத்து வசதியுடன் இருப்பது சிறப்பாகும். ரிஷிகள் வாழ்ந்த தவபூமி: பழங்காலத்தில் இரிஞ்ஞாலக்குடா, அடர்ந்த வனமாக இருந்தது. அங்கு கபிலினி என்னும் மகரிஷி மகாவிஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவரது தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. மகரிஷியின் பக்தியை மெச்சி பெருமாள் நேரில் காட்சி அளித்து, கபிலினி! உன் தவத்தால் மகிழ்ந்தேன்! என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அவரோ, சுவாமி! உம் அருளால் எனக்கு குறையொன்றுமில்லை. எனக்கென எதுவும் வேண்டாம். என்றென்றும் உம்மை வணங்கும் பாக்கியம் இருந்தால் போதும் என்றார். பெருமாள் அவரை ஏதேனும் கேட்கும்படி வற்புறுத்தவே, வரம் அருள்வதாக இருந்தால் ஆன்மிகத்தில் ஈடுபடும் தவசீலர்களுக்கு என்றென்றும் இவ்விடத்தில் இருந்து அருள்புரியுங்கள், என்று கேட்டுக் கொண்டார். மகரிஷியின் வேண்டுதல்படி பெருமாளும் அக்காட்டிலேயே தங்குவதாக சம்மதித்தார். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதியில் தவசிகளே வாழ்ந்து வந்தனர். ராஜாவின் மாணிக்க கல்: இரிஞ்ஞாலக்குடா கோயில் மூலவருக்கு பரதர் என்னும் பெயரை விட கூடல்மாணிக்கம் என்ற பெயரே பிரபலமாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியம் மட்டுமில்லாமல் மற்ற மலையாள இலக்கியங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு. அதிர்ஷ்டவசமாக, ஒருநாள் மூலவர் பரதரின் முன் நெற்றியில் இருந்து பேரொளி ஒன்று கிளம்பியது. அது எங்கிருந்து வருகிறது என்று பலரும் தேடினர். ஒருவராலும் முடியவில்லை. இதையடுத்து ஒரு பக்தர், காயங்குளம் ராஜாவுக்குச் சொந்தமான மாணிக்கக் கல் ஒன்றை கோயிலுக்கு கொண்டு வந்தார். சிலையில் இருந்து வரும் ஒளியோடு, மாணிக்கக்கல்லின் ஒளியை ஒப்பிடும் நோக்கத்தில் மூலவர் அருகில் சென்றார். அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அவர் கையில் இருந்த மாணிக்க கல் அப்படியே பரதரின் நெற்றிக்குள் மறைந்துவிட்டது. அன்றுமுதல், பரதருக்கு மாணிக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் உள்ள பகுதி கூடல் என்பதால் கூடல் மாணிக்கம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. இங்குள்ள குளம் குலிபினி தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. மீன்கள் மட்டுமே இக்குளத்தில் காணப்படுகின்றன. தவளை, பாம்பு இல்லை. மீன்களுக்கு பொரியிட்டு பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இதற்குமீனூட்டு என்று பெயர். மூலவருக்கு வாசனை திரவியம் ஏதும் சாத்துவது கிடையாது. தாமரை, துளசி, தெச்சிப்பூக்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன

நம்பிக்கைகள்

கோயிலை சுற்றிலும் நான்கு குளங்கள் உள்ளன. நான்கில் மிகப் பெரியது குட்டன் குளம், இது கிழக்குப் பகுதியில் உள்ள வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ளது. குளிப்பிணி தீர்த்தம் ஆகியவை வளாகத்திற்குள் அமைந்துள்ளது. குளிப்பிணி தீர்த்தம் முனிவர் குளிப்பிணி யால் புனிதமாக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. முனிவர் இந்த இடத்தில் ஒரு பெரிய வேள்வி நடத்தியதாக கருதப்படுகிறது. இந்த மூலத்திலிருந்து வரும் நீர் கோயிலுக்குள் நடக்கும் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு வெளியே உள்ள “குட்டன் குளத்தில்” தங்களைத் தூய்மைப்படுத்திய பின்னரே பூசாரிகள் விழாக்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பு “குளிப்பிணித் தீர்த்தம்” நீரில் மூழ்க வேண்டும். மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சுவருக்கு வெளியே உள்ள குளத்தை “பதின்ஜரக் குளம்” என்றும், தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வளாகத்திற்கு வெளியே உள்ள குளம் “தெக்கே குளம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நீர்நிலைகளும் கோயிலின் அளவைப் போலவே குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டுள்ளன. “குளிப்பிணி தீர்த்தம்” தவிர மற்ற மூன்று நீர்நிலைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்

கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை பூஜைகள் மற்றும் மூன்று சீவேலிகள் இருப்பது வழக்கம். ஆனால் கூடல்மாணிக்கத்தில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே உள்ளன. சீவேலியும் இல்லை. இதன் சன்னதியில் உஷா பூஜை மற்றும் பந்தீரடி பூஜை இல்லை. வருடாந்த திருவிழாவின் போது மட்டுமே தெய்வம் ஊர்வலத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. எந்த தீபாராதானையும் இல்லை. தீபாராதானையைத் தொடங்க திட்டங்கள் உள்ளன. தீபாராதானை இல்லாத ஒரே கோயில் இதுவாகும். பூஜைக்கு ஊதுபத்திகள் மற்றும் கற்பூரம் பயன்படுத்தப்படுவதில்லை. தெய்வத்திற்கான மலர் பிரசாதம் தாமரை, துளசி மற்றும் அரளி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அவை கோயில் வளாகத்தில் வளர்க்கப்படுவதில்லை. பூசைக்காகவோ அல்லது மாலைகளை தயாரிப்பதற்காகவோ வேறு எந்த பூவும் எடுக்கப்படுவதில்லை. தாமரை மாலை தெய்வத்திற்கு ஒரு முக்கியமான பிரசாதமாகும். 101 தாமரை பூக்களுக்கு குறையாத ஒரு மாலை தெய்வத்திற்கு அணிவிக்கப்படும்.

திருவிழாக்கள்

இந்த கோயில் ஒவ்வொரு ஆண்டும் கொல்ல ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல் / மே) பத்து நாட்களுக்கு அதன் முதன்மைத் திருவிழாவை நடத்துகிறது. திருவிழாவின் முதல் நாள் உத்ரம் நட்சரத்திரம் வானில் தோன்றுவதிலிருந்து கணக்கிடப்படுகிறது. சடங்கு கொடியை ஏற்றுவதன் மூலம் குறிக்கப்படுகிறது. (அருகிலுள்ள திருச்சூரில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு ஒரு நாள் கழித்து தொடக்க நாள் வருகிறது.) திருவிழாவின் ஒவ்வொரு நாளும், பஞ்சரி மேளத்துடன் (புனித இசை) ஒரு சீவேலி ( கோயில் யானைகளின் ஊர்வலம்) இரண்டு முறை, காலையில் ஒரு முறை மற்றும் இரவில் ஒரு முறை நடைபெறும். இதில் பதினேழு யானைகள் பங்கேற்கின்றன. சீவேலியின் இரண்டு அம்சங்கள் கூடல்மாணிக்கம் கோயிலுக்கு தனித்துவமானவை: முதலில் இரண்டு குழந்தை யானைகள் ஊர்வலத்தில் சேர்க்கப்படும். ஒன்று தெய்வத்தை சுமந்து செல்லும் யானையின் ஒவ்வொரு பக்கத்திலும் நிற்கும். இரண்டாவதாக, ஏழு யானைகளின் தலைக்கவசங்கள் ( மலையாளத்தில் ‘நெட்டி பட்டம்’) தூய தங்கத்தால் செய்யப்பட்டவை, மீதமுள்ளவை தூய வெள்ளியால் செய்யப்பட்டவை. திருவிழாவின் கடைசி இரண்டு நாட்களில் பஞ்ச வாத்யம் (ஐந்து கருவிகளின் இசைக்குழுவிலிருந்து புனிதமான இசை) இடம்பெறுகிறது, திருவிழா திருவோணம் நட்சத்துரத்துடன் முடிகிறது.

காலம்

854 ஆம் ஆண்டு

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மனவளச்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top