Wednesday Oct 02, 2024

கடையம் கருத்தீஸ்வரன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி

அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில், கடையம், பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம்.

இறைவன்

இறைவன்: கருத்தீஸ்வரன் இறைவி: அழகம்மை

அறிமுகம்

கடையம் கருத்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் கருத்தீஸ்வரர் அழகம்மையோடு, சொக்கநாதர், மீனாட்சி, குருபகவான், சனீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னியர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர். சந்தியா வந்தனம் செய்யும் நேரம் நெருங்கியதை அசரீரியாக ராமனுக்கு உரைத்து கருத்தினை உணர்த்தியதால் கருத்தீஸ்வரன் என சிறப்புப்பெயர் பெற்றார். திருநெல்வேலி-கடையம் நெடுஞ்சாலையில் 32கி.மீ. தொலைவில் பாப்பன்குளம் உள்ளது. இங்கு இறங்கி சுமார் 1கி.மீ. நடந்தால் கருத்தீஸ்வரர் கோயிலை அடையலாம். முற்காலத்தில் பங்குனி உத்திரத்தை ஒட்டி இத்தலத்தில் நடைபெறும். “பார் புகழும் பாப்பன்குளத்தில் பஞ்சரதம் ஓடும்” என்பது உத்திர பிரம்மோற்சவம் குறித்து இவ்வட்டாரத்தில் சொல்லப்படும் பழமொழி. ஆனால் இன்று இவையெல்லாம் நின்றிபோயும், எளிமையாக நடத்தப்படும் விழாவாக மாறியுள்ளது. தற்போது பல இடங்கள் சிதிலமாகி திருப்பணியை எதிர்நோக்கியுள்ளது.

புராண முக்கியத்துவம்

ராமர், வனவாசத்தின்போது அத்ரி மகரிஷி – அனுசுயாதேவியின் ஆசிகளைப் பெறுவதற்காக திரிகூட மலைப்பகுதிக்கு வந்தார். பதிவிரதா தன்மையில் தலைசிறந்த அனுசுயா தேவி, தங்கள் தபோவனத்திற்கு வந்த சீதையை நகைகளால் அலங்கரித்து மகிழ்ந்தாள். அதன்பின் அப்பகுதியின் இயற்கை எழிலை ரசித்தவாறே நடந்தார் ராமபிரான். மாலைவேளை வந்ததையும் மறந்து அந்த சூழலில் லயித்தார். சந்தியா வந்தனம் செய்யும் நேரம் அது என்பதை அத்தலத்தில் லிங்க வடிவில் தோன்றிய ஈசன், அசரீரியாக ராமனுக்கு உரைத்தார். இப்படிக் கருத்தினை உணர்த்தியதால் இறைவன் கருத்தீஸ்வரன் எனப் பெயர் பெற்றார். ராமனின் சித்தம் அறிந்து உரைத்ததால், சித்தநாதீஸ்வரர் என்று வடமொழியில் கூறுகின்றனர். ராமனின் பாதம் பதிந்த பாறையை, இவ்வூரில் உள்ள ராமசுவாமி கோயிலில் வைத்து வழிபடுகின்றனர். அன்னை அழகிய வடிவுடன் அருள்வதால் தமிழில் அழகம்மை என்றும், வடமொழியில் சவுந்தர்ய நாயகி எனவும் அழைக்கின்றனர்.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வழிபடுவோர் மனக்கவலைகள் நீங்கவும்; திருமணத் தடைகள் விலகவும், மணப்பேறு கைகூடிட பெண்கள் அழகம்மையை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் ஆதித்தவர்மனால் இக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நெற்கட்டும் செவல் மன்னனான பூலித்தேவன், இப்பகுதியில் உள்ள நெற்கட்டும் பாறையில் தங்கி கருத்தீஸ்வரனையும் அழகம்மையையும் வழிபட்டுள்ளான். இங்கு விளையும் நெல் மற்றும் தானியங்களை தல இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்ட பின்னரே மக்களுக்கு வழங்கினான். இப்பகுதியில் விளையும் தானியங்களுக்குக் கப்பம் கட்டவேண்டும் என, பூலித்தேவனை ஆங்கிலேயர் நிர்ப்பந்தம் செய்தனர். அந்நியருக்குக் கப்பம் கட்ட மறுத்தான், பூலித்தேவன். ஆங்கிலேயப் படை அவனைக் கைது செய்து சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றது. கருத்தீஸ்வரரை நோக்கி முறையிட்டான் பூலித்தேவன். நெற்கட்டும் பாறைக்கு நிகரில்லை என்றிருந்தேன்; பொய்க் கட்டாய்க் கட்டி வீதியிலே போகவிட்டான் சண்டாளன்! கருத்தலிங்கம் உனக்குச் சம்மதம் தானா? என்று கருத்தீஸ்வரனை அவன் கேட்க, மறுநிமிடமே பூலித்தேவனின் கைவிலங்குகள் ஈசன் அருளால் தெறித்தன. கட்டியிருந்த இரும்புச் சங்கிலிகள் தகர்ந்து விழுந்தன. இது மாயவித்தை என நினைத்து பயந்து ஓடியது, ஆங்கிலேயர் படை.

திருவிழாக்கள்

பிரதோஷம், சோமவார வழிபாடு, நவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கடையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top