Thursday Jul 04, 2024

அவளிவநல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: 91-4374-316 911, 4374-275 441,

இறைவன்

இறைவன்: சாட்சிநாதர் இறைவி: சௌந்தரநாககி

அறிமுகம்

அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-நாகூர் இருப்புப் பாதையில் சாலியமங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே ஆறரை மைல் தொலைவில் உள்ள திருத்தலமிது. கோயில் வெண்ணி இருப்புப்பாதை நிலையத்திலிருந்தும் செல்லலாம். தஞ்சாவூரிலிருந்து அம்மாப்பேட்டை வழியே கும்பகோணத்திற்கு செல்லும் பேருந்துப்பாதையில் 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வராகமூர்த்தியும் (திருமால்) காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.

புராண முக்கியத்துவம்

பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, “இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி” என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் “அவள் இவள்” என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள்; கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று. இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

நம்பிக்கைகள்

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள், தோல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் இத்தலத்தில் நீராடினால் சிறந்த பலன் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 163 வது தேவாரத்தலம் ஆகும். மூலஸ்தானத்தில் சிவன் ரிஷபாரூடராய் காட்சி தருவது சிறப்பு. அரித்துவாரமங்கலத்தில் பன்றி வடிவம் எடுத்து செருக்குடன் நிலத்தை தோண்டிய பெருமாள், இத்தலத்தில் தன் பிழை தீர்க்கும் படி வழிபாடு செய்தார். சிவனின் “பஞ்ச ஆரண்யம் (காடு)’ தலங்களில் இதுவும் ஒன்று. திருக்கருகாவூர் உஷகாலம், அவளிவணல்லூர் காலசந்தி, அரித்துவாரமங்கலம் உச்சிகாலம், ஆலங்குடி சாயரட்சை, திருக்கொள்ளம்புதூர் அர்த்தஜாம பூஜை இந்த 5 தலங்களையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு. தை அமாவாசையில் இங்கு சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

நவராத்திரி, கந்தஷஷ்டி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம்

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அவளிவநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top