Thursday Jul 04, 2024

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம் – 636001. போன்: +91-427-245 0954, 245 2496

இறைவன்

இறைவன்: சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார் இறைவி: சொர்ணாம்பிகை

அறிமுகம்

சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில் சேலம் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சுகவன முனிவர் கிளியின் உருவத்தில் இங்கு உள்ள மூர்த்தியை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் சுகவனேசுவர பெருமான் என அழைக்கப்படுகிறார். மேலும் இந்த கோவில் நான்கு யுகங்களாக உள்ளது. இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். அம்பிகையின் பெயர் சொர்ணாம்பிகை. இக்கோயிலில் கணபதிக்கு ஸ்ரீ மதவடி விநாயகர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சுகவன கணபதி, ஸ்ரீக்ஷிப்த கணபதி,ஸ்ரீ ந்ருத கணபதி, ஸ்ரீ விகடசக்ர கணபதி என பல கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணபதிக்கும் தனிச் சிறப்பு. இக்கோயில் தீர்த்தம் அமண்டுக தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.

புராண முக்கியத்துவம்

பிரம்மதேவன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறது என்ற ரகசியத்தை சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்த சுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் போய் சொல்லிவிட்டார். கோபம் கொண்ட பிரம்மன் சுகர் முனிவரை கிளியாக்கி சாபம் கொடுத்துவிட்டு, பாபநாசப்பகுதியில்(இப்போதைய கோயில் பகுதி) வந்த சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட்டுவந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார். அதேபோல் வந்து எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளிவடிவாக சுகர் முனிவர் சிவபெருமானை வழிபட்டு வரும் வேளையில் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றின் மீது பதுங்கின. கோபம் கொண்ட வேடன் புற்றை வெட்டினான். கிளிகள் எல்லாம் செத்தன. அப்போது ராசகிளி (சுகர்) மட்டும் சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து காத்தது. வேடன் கிளியை வெட்ட ரத்தம் பீறிட்டது. கிளி இறக்க சுயம்புவின் தலையில் ரத்தம் பீறிட இறைவனை உணர்ந்த வேடன் தன் வாளால் தன்னைத்தானே வெட்டி மாய்த்துக்கொண்டான். சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப் பெற்ற சுகர் முனிவர், “”பெருமானே உன் திருப்பெயர் சுகவனேஸ்வரராக இருந்து இத்திருத்தலம் அருள் தர வேண்டும்,” என்று கேட்டுக் கொள்ள அதுபடியே இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

விகடச்சக்கர விநாயகர் : இத்தலத்தில் உள்ள விகடச்சக்கர விநாயகருக்கு (சகட் விநாயகர்) மாலை,தேங்காய் பழம் கடலை சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட்டம் உபாதைகள் நீங்கும். கல்யாணபாக்கியம், குழந்தைபாக்கியம், உத்தியோக பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபடலாம். பல்லி விழும் உபாதைகள் விலக இத்தலத்தில் வழிபடுதல் நல்லது. சாபம் பெற்ற சுகமுனிவர் கிளியுருவங்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். அழகிய கிளி முகங்கொண்ட சுக முனிவரின் மூலவர் உற்சவ மூர்த்தியும் உள்ளது. இதனாலேயே சுகவனம் என்றும் சுகவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனை பாடியுள்ளார். தேவர்கள் பெருமானை அரசமர வடிவில் வழிபட்டது, சேரமானுக்கும், ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் தந்தது, ஒளவையார் ஓர் வளர்ப்புப்பெண்ணுக்குத் திருமணம் செய்வித்தது போன்ற பெருமைகளையுடைய தலம்.

சிறப்பு அம்சங்கள்

மூல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது. இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று. நவகிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதனால் நல்ல வரனும், உத்தியோகமும் கை கூடும். நவகிரக சக்தி மேல் தளத்தில் பல்லி,உடும்பு உருவங்கள் உள்ளன. பல்லி விழும் உபாதைகள் நிவர்த்தி பெற்று சுகம் பெறலாம் .

திருவிழாக்கள்

வைகாசிப் பெருந்திருவிழா -10 நாட்கள்- கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரைத்திருவிழா ஆகியவையும் சிறப்பாக நடைபெறும்.

காலம்

13 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சேலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி, கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top