Wednesday Oct 02, 2024

திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் – 609 118. நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 279 423 ,320 520, +91- 94861 41430.

இறைவன்

இறைவன்: லட்சுமிபுரீஸ்வரர், மகாலட்சுமீஸ்வரர் இறைவி: லோகநாயகி

அறிமுகம்

திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் நாவுக்கரசர் ஒரு பதிகமும் சுந்தரர் இரு பதிகங்களும் பாடியுள்ளனர்.மொத்தம் நான்கு பதிகங்கள் உள்ளன. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. சிவபெருமானாரின் லிங்க வடிவின் உச்சியில் குழியுள்ளது. அகத்தியர், பரசுராமர் மற்றும் திருமகள் வழிபட்ட திருத்தலம். இக்கோயில் தருமையாதீனக் கோயில்.

புராண முக்கியத்துவம்

மகரிஷியான ஜமதக்னி, தன் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினான். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவரை உயிர்ப்பித்தான். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் அவன் வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னியும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் “மகாலட்சுமீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

நம்பிக்கைகள்

தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பரிகார பூஜை செய்து வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன், இத்தலம் வழியாகவே சென்று திரும்புவான். ஒருசமயம் அவன் இத்தலத்தை கடந்து சென்றபோது, காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது, திரி தானாகவே எரியத்துவங்கியது. இதைப்போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம், இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் நிகழுமா? எனக் கேட்டான். அவர் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடம் சென்றபோது, சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. பின் இங்கேயே கோயில் எழுப்பி வழிபட்டார். திரி அணைந்த தலம் என்பதால், “திரிநின்றியூர்’ என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் “திருநின்றியூர்’ என்றும் பெயர் பெற்றது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் “பரசுராமலிங்க’மாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் “ஜமதக்னீஸ்வரராக’ சிறிய பாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்து தீர்த்தத்தை “நீலமலர் பொய்கை’ என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு சிவனுக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம்.

திருவிழாக்கள்

ஆனித்திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநின்றியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top