Wednesday Oct 02, 2024

சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், திருச்சித்ரக்கூடம் -608 001, சிதம்பரம் (சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே) கடலூர் மாவட்டம் போன்: +91- 4144 – 222 552, 98940 69422.

இறைவன்

இறைவன்: கோவிந்தராஜன் இறைவி: புண்டரீகவல்லி

அறிமுகம்

அருள்மிகு நடராசப் பெருமானின் திருக்கோயிலினுள்ளேயே அமைந்துள்ள வைணவத் திருத்தலம் திருச்சித்திரக்கூடம். பெருமாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் போக ரெங்கநாதராக அருள்பாலிக்கும் திருத்தலம் திருச்சித்திரக்கூடம். மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் தான் மற்ற திருத்தலங்களில் அருள்பாலிப்பார். ஆனால், பஞ்சபூதத் திருத்தலங்களில் ஆகாயத் திருத்தலமான சிதம்பரத்தில் பிரம்மா நின்ற திருக்கோலத்தில் ஆகாயத்தைப் பார்த்தவாறு அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம். கடலில் மூழ்கிக் கிடந்த பெருமாளை இராமானுஜர் பெருமுயற்சி எடுத்து வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்த திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம். ஆதியில் தில்லை வாழ் அந்தணர்களே பெருமாளுக்கும் பூஜைகளைச் செய்து வந்தனர். 1539-ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுதராயர், பட்டாச்சாரியர்களை நியமித்து வைகாநச ஆகமப்படி பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்த திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம். பெருமாள் சன்னதிக்கு முன்புள்ள மண்டபத்தில் நின்று, அருள்மிகு நடராஜர், அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள், அருள்மிகு பிரம்மா ஆகியோரை ஒருங்கே தரிசிக்கும் வாய்ப்புள்ள ஒரே திவ்யதேசம் திருச்சித்திரக்கூடம். குலசேகராழ்வார், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்வியதேசம் திருச்சித்திரக்கூடம்.

புராண முக்கியத்துவம்

கைலாயத்தில் ஒருசமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்தபோது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர். அவர் தேவசிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி இருவரும் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் தன் வலக்காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு . பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் தங்கினார்.

நம்பிக்கைகள்

வேண்டிக்கொண்ட செயல்களில் வெற்றிபெற, நீதி தவறாமல் இருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

மோட்ச தலம்: கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, “” தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்,” என்றாள். அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து மோட்சம் கொடுத்தார். சுவாமி சிறப்பு: மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப்போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்தபோது, அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்றபடியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு. பதஞ்சலி சன்னதி: பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒருசமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே, மகாவிஷ்ணு அவரை சிவனின் திருநடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ரபாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திருநடனக்கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்தராஜரை வணங்கி மோட்சம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உதவி செய்வார் என்பது நம்பிக்கை. தல சிறப்பு: அசுரகுலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம், “தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும், அவ்விடத்தில் சுவாமி எழுந்தருள வேண்டும்’ என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள்புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். தலமும் “தில்லை நகர்’ எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கஜேந்திரவரதரை தூக்கிய கோலத்தில் கருடாழ்வார், நரசிம்மர், வேணுகோபாலர், பதஞ்சலி மகரிஷி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரும் இருக்கின்றனர்.

திருவிழாக்கள்

சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top