Friday Oct 04, 2024

அயோத்தியாப்பட்டணம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம், சேலம் மாவட்டம் – 636 103 Phone: 98948 70206/ 80981 21383

இறைவன்

இறைவன்: ராமர் இறைவி: சீதை

அறிமுகம்

கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணத்தில் அமைந்துள்ளது. இங்கு ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறார். இது திருப்பத்தூர் / ஆத்தூர் – விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து கிழக்கே சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.

புராண முக்கியத்துவம்

ராவண வதம் முடிந்து ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட புராதன சிறப்பு மிக்க கோயில் சேலம் அயோத்தியாபட்டணம் ராமர் கோயில். வட இந்தியா சென்று அயோத்தியில் உள்ள ராமரை வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை. சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் ராமரை வழிபட்டாலே போதும். சகல புண்ணியங்களும் கிட்டும். சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைல மலை குன்றுகள் வழியாக தான் திரும்ப வேண்டும். ராமர், சீதை, லட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைல மலை குன்று பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்ட தொடங்கியது. களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது, சிறிய அளவிலான கோயில் ஒன்று தென்பட்டது. இங்கு ராமர், சீதை, லட்சுமணன் உட்பட அனைவரும் அன்றிரவு தங்கினர். விடிந்து எழுந்த போது பட்டாபிஷேகத்திற்கான நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டது. நேரம் தவறினால் ராஜ குற்றமாகிவிடும் என்று எண்ணிய ராமர் இந்த கோயிலிலேயே பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவும், பின்பு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் முடித்தார் என்றும் சொல்வதுண்டு.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

புராதன சிறப்போடு, ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அதேசமயம் கம்பீரமான தோரணையில் வீற்றிருக்கிறது அயோத்தியாபட்டணம் கோதண்டபாணி ராமர் கோயில். ராமர் காலடி பட்டதால் அயோத்தியாபட்டணம் என்ற பெயரை இவ்விடம் பெற்றது. இங்குள்ள ஒவ்வொரு கல்லும் கவி பாடுகின்றன. கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுந்து மனதை மயக்குகின்றன. தாரமங்கலம் கைலாசநாதர் பெருமாள் கோயில், திருச்செங்கோடு முருகன் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றுடன் இந்த கோயிலும் ஒரே காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இதற்கு இங்குள்ள பிரமாண்டமான சிற்பங்களே சாட்சி. அசுரனை வதை செய்யும் தேவர் குதிரை, யானை, யாழி, சிங்கம் போன்றவற்றின் மீது அமைந்திருப்பது போன்ற ஒரே கல்லில் செய்யப்பட்ட பல்வேறு கற்சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. சிற்பங்களில் குறிப்பாக ராமர் பட்டாபிஷேக காட்சி, பரதன், சத்ருக்னன், லட்சுமணன் கற்சிற்பங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு தூணில் திருமலை நாயக்கர் தன் தேவியுடன் காட்சி தருகிறார். சிற்ப கலைக்கு மட்டுமல்ல. ஓவியக் கலைக்கும் பெயர் பெற்றது இக்கோயில். இவ்வளவு ஆண்டுகளாகியும் காலத்தால் அழியாத அன்றைய அற்புத ஓவியங்கள் கோயிலின் “சிலீங்’கில் பார்ப்போரை சிலிர்ப்படைய வைக்கின்றன. இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் கோயில் கதவு ஓட்டை வழியாக வரும் சூரிய ஒளி பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது கோயிலை சுற்றி எழுப்பப்பட்டு விட்ட கட்டடங்களால் தடுக்கப்பட்டு விட்டது. இவ்வளவு புராதன சிறப்பு மிக்க கோயிலுக்கு அனைவரும் சென்று வழிபட்டால் கோடி புண்ணியங்கள் கிட்டுவதோடு, உலக புகழ் வாய்ந்த அதிசய கற்சிற்பங்களை காணும் களிப்பையும் பெறலாம். ஐந்து நிலை ராஜகோபுரமும் உயர்ந்த விளக்குத் தூணும் கொண்ட கோயில் இது. விளக்குக் தூணின் அடியில் கருடாழ்வார். சங்கு, சக்கரம் ஆகிய உருவங்கள் காணப்படுகின்றன. கிழக்கு திசை நோக்கிய கோயில், மூலவர் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார். கருவறை மூன்று நிலை விமானத்தோடு விளங்குகின்றது. வழக்கமாக வலதுபுறமாக காணப்படும் தயார் இங்கு இடதுபுறமாக எழுந்தருளியுள்ளார். கருடாழ்வார் ராமரை நோக்கி வணங்கியபடி நிற்கின்றார். பிராகாரத்தில் தெற்குநோக்கி ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். ஆழ்வார்கள் தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். மகா மண்டபம் 28 கலைநயமிக்க தூண்களைக் கொண்டது. ஒரு தூணில் தசாவதாரக் காட்சிகள் அனைத்தும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இசைக்கும் தூண் ஒன்றும் உள்ளது. மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கண்ணன் கோபியரோடு நீராடும் காட்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மீது சமீபகாலத்தில் உருவாக்கப்பட்ட, பாற்கடல் பள்ளிகொண்ட நாராயணன், பாமா-ருக்மணி சுதைச் சிற்பங்கள் அழகாகக் காணப்படுகின்றன. ராவணனை அழித்துவிட்டு அயோத்தி செல்லும் வழியில் ராமர் இங்கு தங்கி விபீஷணனுக்கு பட்டாபிஷேக ராமனாகக் காட்சியளித்தார். ஆகவே இந்த ராமர் பட்டாபிஷேக ராமர் என அழைக்கப்படுகிறார். இதன் காரணமாகவே இந்தத் தலத்துக்கு அயோத்தியாப் பட்டினம் என்ற பெயரும் ஏற்பட்டது. திருமலைநாயக்க மாமன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. ராமன் இருக்குமிடம் அயோத்தி என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

திருவிழாக்கள்

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது. ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி

காலம்

17 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அயோத்தியாப் பட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அயோத்தியாப் பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி, கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top