Saturday Jul 27, 2024

திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில் பனையூர் சன்னாநால்லூர் அஞ்சல் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 609504 PH:04366-237007

இறைவன்

இறைவன்: சௌந்தரேஸ்வரர் இறைவி:பெரிய நயகி

அறிமுகம்

திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் (திருப்பனையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 73ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை. சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம். தந்தையை இழந்த கரிகாற்சோழனுடன் தாயார்(அரசி), அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு ’துணையிருந்த விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

புராண முக்கியத்துவம்

சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று “”தம்மையே புகழ்ந்து” என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வந்தார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, “அரங்காட வல்லார் அழகியர்’ என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் “சந்தித்த தீர்த்தம்’ என்றும் பெயருடன் திகழ்கிறது. பிரகாரத்தில் முதலில் பராசர முனிவர் உருவம் உள்ளது. அடுத்து விநாயகர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் “”இராசேந்திர சோழப் பனையூர்” என்று குறிக்கப் பெறுகின்றது சொல்லப்படுகிறது.

நம்பிக்கைகள்

பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும். கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. உள்நுழைந்ததும் வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் – தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. இப்பெயர்க்குச் சொல்லப்படும் காரணம் வருமாறு:- தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய “இரும்பிடர்த்தலையார்’ என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தான். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் “துணையிருந்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். அடுத்துத் தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்துள்ளவை முதிர்ச்சியுறுங் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன. இத்தல விநாயகர் சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இவ்விநாயகரும், “மாற்றுரைத்த விநாயகர்’ என்றழைக்கப்படுகின்றார். பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி – தாலவனேஸ்வரர் – மேற்கு நோக்கியது – சதுர ஆவுடையார் இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை – நடராஜர் சந்நிதி உள்ளன. துவாரபாலகர்கள் முகப்பில் உள்ளனர். உள்ளே சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது. இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது- இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பனையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top