Saturday Jul 27, 2024

ஜெயங்கொண்டபட்டினம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

ஜெயங்கொண்டபட்டினம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், ஜெயங்கொண்டபட்டினம், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 001

இறைவன்

இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி – சௌந்தர்ய நாயகி

அறிமுகம்

சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 7 கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆறு இரண்டாக மூன்றாக பிரிந்து, அகண்டு, விரிந்து கிடக்கும், ஆறுகளுக்கு இடையே பசுமையுடன் பெரும் திட்டுப் பகுதி கிராமங்கள் காட்சியளிக்கும். இதுவே ‘ஆற்றிடைத்தீவு என அழைக்கப்படுகின்றன. அப்படி ஒரு திட்டுபகுதிக்கு செல்லும் வழி தான் இந்த கொள்ளிட கரையோர கிராமம் ஜெயங்கொண்டபட்டினம். முன்னர் ஆற்றங்கரையோர பட்டினமாக இருந்து இன்று சிறிய கிராமமாக உள்ளது. கொள்ளிட கரையோரம் இருந்து சிதிலமடைந்த சிவாலயம் பின்னர் ஊருக்குள் சிறிய அளவில் கட்டப்பட்டுள்ளது, அருகில் ஒரு விநாயகர் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. அக்கோயிலில் இருந்த பிற லிங்கங்கள், சிலைகள் கோயில் அருகில் கிடத்தப்பட்டுள்ளன. . கோயிலின் வடக்கில் பெரிய குளம் உள்ளது. இறைவன் – சுந்தரேஸ்வரர் இறைவி – சௌந்தர்ய நாயகி விநாயகர் கோயில் சிவன்கோயில் இரண்டும் கிழக்கு நோக்கியது, தென்புறம் தட்சணாமூர்த்தி, மற்றும் சண்டேசர் மட்டும் உள்ளார், வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன.

புராண முக்கியத்துவம்

சாதாரண மக்கள் தில்லைக்கு சென்று இறைவனை தரிசிப்பது வழக்கம்… ஆனால் சோழமண்டகப்படியன்று இறைவனே சோழர்கள் இருக்கும் இடத்திற்கு எழுந்தருளி அவர்கள் செய்யும் மரியாதையை ஏற்றுக்கொள்வது வழக்கம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மற்றும் ஆனி ஆகிய மாதங்களில் தேருக்கு எழுந்தருளும் முன்னர் சோழ மண்டகப்படி செய்வது வழக்கமாகும். மூன்றாம் ராஜேந்திரன் காலமான கிபி 1279 யுடன் சோழர்ஆட்சி முடிவுற்றது, எனினும் எஞ்சிய சோழ வாரிசுகள் இந்த கொள்ளிடம் வங்ககடலுடன் கலக்கும் தீவுக்கோட்டை எனும் இடத்தில் உள்ள கோட்டையில் வசித்ததாகவும் அதனை சுற்றி உள்ள பதினெட்டு கிராமத்தில் அவரது சுற்றங்கள் இருந்ததாகவும் கூறுவார்கள். சிதம்பரம் வரை இந்த பதினெட்டு கிராமங்கள் பரந்திருந்தன. பிச்சாவரம் குட்டியாண்டவர் கோயிலில் கிபி 1583ஆண்டு கல்வெட்டு ஒன்றில் விட்டலேசுவர சோழகனார் என ஒரு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 1615 ஆம் ஆண்டில் ரகுநாத நாயக்கர் இந்த தீவுக்கோட்டையின் மீது போர் தொடுத்து சோழகனை வென்றார் என்பது வரலாறு. சிதிலமடைந்த கோட்டை இன்றும் உள்ளது. சோழர் பரம்பரை கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து தீவுக்கோட்டைக்கும் பின்னர் பிச்சாவரம் பகுதிக்கும் சென்று வாழ்ந்தனர் என ஊகிக்கலாம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஜெயங்கொண்டபட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top