Saturday Jul 27, 2024

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருகோவில், பெரம்பலூர்

முகவரி

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருகோவில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம் – 621113 தொலைபேசி எண்: 80565 53356

இறைவன்

இறைவி: மதுரகாளியம்மன்

அறிமுகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர். வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், ‘அதிதி’ என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அனைத்திற்கும் காரண கர்த்தாவாக நிகழ்ந்து ஆட்டுவிப்பவளும் அவள்தான். திதி குறிப்பிடாமல் தோன்றி இந்தப் பிரபஞ்சத்தைக் காத்தருள்பவள் என்று பொருள். அதிதி என்றால் விருந்தினர் என்றும் பொருள். அன்னை காளி அதிதியாய், ஒரு கிராமத்துக்கு வந்து, அந்த ஊருக்கு அனுகிரகம் செய்து அங்கேயே கோயில்கொண்டு அருள்புரிகிற அற்புதத் தலம் சிறுவாச்சூர். இக்கோவில் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே அதாவது திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினங்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

புராண முக்கியத்துவம்

சிறுவாச்சூர் கிராமத்தில் செல்லியம்மன் என்னும் அம்மன் கோயில்கொண்டிருந்தாள். அங்கே வாழ்ந்துவந்த பில்லிக்காரன் என்கிற மந்திரவாதி அதர்வண வேதம் முழுமையும் அறிந்து தேவதைகளை ஆட்டுவிக்கும் வல்லமை பெற்றான். மக்களைத் துன்புறுத்தி வந்த அவன், செல்லியம்மனையும் தனக்கு ஏவல் செய்யும்படிப் பணித்தான். அவனின் அக்கிரமம் ஒரு எல்லையைத் தாண்டவே, அவனை அழிக்க அங்கு அன்னைக் காளி அதிதியாய் வந்தாள். ஒருநாள் இரவு அந்த கிராமத்தில் தங்க இடம் வேண்டி மக்களிடம் கேட்டாள். அவர்களோ மந்திரவாதிக்குப் பயந்து இடம் தரமறுத்தனர். காளியும் செல்லியம்மனின் ஆலயத்துக்குச் சென்று தங்க இடம் கேட்டாள். செல்லியம்மனும், ‘நாங்களே, மந்திரவாதியால் துன்புறுகிறோம். நீயும் அவனிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம்’ என்று சொல்லி மறுத்தாள். ‘மகிஷன் போன்ற அசுர சக்திகளையே அழித்தொழித்த காளிக்கு இந்த மந்திரவாதி ஒரு எதிரியே இல்லை’ என்பதால் காளியம்மன் சிரித்தபடியே, ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி அந்தக் கோயிலிலேயே தங்கினாள். இரவு ஆங்காரமாய் அங்கு வந்த மந்திரவாதி காளியம்மனைக் கண்டதும் கடும் ஆத்திரம் அடைந்தான். காளியோ தன் கைவசம் இருந்த சூலத்தை அவன் மேல் வீசினாள். அடுத்த கணம் சூலம் அவன் உடலைத் துளைத்தது. மந்தரவாதி உயிர் இழந்தான். மந்திரவாதி மறைந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் ஊராரும் செல்லியம்மனும் மகிழ்ந்தனர். காளிக்கு நன்றிகூறி வணங்கினர். தன்னை அந்த மந்திரவாதியிடம் இருந்து விடுவித்ததற்காக செல்லியம்மனும் காளிக்கு நன்றி கூறி, தான் தன் அண்ணன் வாழும் மலைக்கே போவதாகவும், காளியம்மனே அந்த ஆலயத்தில் குடிகொள்ளுமாறும் வேண்டிக்கொண்டாள். அதன்படியே காளியம்மன் அங்குக் கோயில்கொண்டாள். மதுர காளியை மதுரைக் காளி என்றும் சொல்கிறார்கள். மதுரை அழித்த அன்னை காளியின் வடிவம் கண்ணகி. மதுரையை அழித்தபின்பு அவள் கேரளா சென்று அங்கிருந்து விண்ணகம் சென்றாள் என்பது இலக்கியச் செய்தி. ஆனால், மதுரையை எரித்த பின்பு அன்னை கண்ணகி, இந்த ஊருக்கு வந்து தங்கி அவர்களின் தெய்வமானார் என்கின்றனர் இந்த ஊர்க்காரர்கள். அன்னை, இங்கு நான்கு அடி உயரத்தில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியன வற்றைத் தன் திருக்கரங்களில் ஏந்தியிருக்கிறாள். இடது திருவடியை மடித்து அமர்ந்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றியிருக்கிறாள். ஆதிசங்கரர் இந்தப் பகுதி வழியாக வந்தபோது தாகம் ஏற்பட்டதாகவும் அப்போது மதுரகாளியம்மன் இந்தத் திருவடிவத்தோடு தோற்றமளித்து அங்கே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வடிவத்தோடே அன்னை சிலையானாள் என்றும் அந்தச் சிலையையே ஆதிசங்கரர் இங்குப் பிரதிஷ்டை செய்தார் என்றும் சொல்வதுண்டு. மேலும், சதாசிவ பிரம்மேந்திராள் ஶ்ரீசக்கரம் ஒன்றினை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். வாரத்தில் இருநாள்கள் திறக்கப்படும் இந்த சந்நிதியில் உச்சிகால பூஜை மட்டுமே நடைபெறும். பூஜை நேரத்தில் இரண்டு கோடாங்கிகள் கருவறை மண்டபத்துக்கு வெளியே அருள்வந்து மதுரகாளி மற்றும் செல்லியம்மனின் சரிதத்தைப் பாட்டாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடி முடித்த பிறகுதான் தீபாராதனை நடைபெறுவது வழக்கம். மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்காகச் சோலை முத்தையா ஆலயம் அமைந்துள்ளது. இவரே செல்லியம்மன் மற்றும் மதுரகாளியம்மனின் காவல் தெய்வமாக விளங்குபவர். இவர் அருகிலேயே அகோர வீரபத்திரர் நிற்கிறார்.

நம்பிக்கைகள்

இங்கு மாவிளக்கு செலுத்தி அம்மனை வேண்டிக்கொள்ள தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளவர்கள் அம்மனை தரிசித்து வழிபட விரைவில் குறைகள் நீங்கப் பெறுவர். இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வேண்டிக்கொள்ள, காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும் என்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் மாறி லாபம் ஏற்படும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள்.

சிறப்பு அம்சங்கள்

குலோத்துங்கச் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இந்த ஆலயம், பிற ஆலயங்களில் இருந்து மாறுபட்ட சில வழக்கங்களைக் கொண்டது. ஒரு வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டுமே இந்த ஆலயம் திறந்திருக்கும். இந்த ஆலயத்துக்குள் விநாயகரைத் தவிரவேறு தெய்வங்கள் இல்லை. இங்குப் பிரதான நைவேத்தியம் மாவிளக்கு. மாவிளக்கு ஏற்றி வழிபட வேண்டிய எண்ணம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் மற்ற ஆலயங்களைப் போல மாவாகச் செய்து கொண்டு சென்று மாவிளக்கு இட இங்கு அனுமதியில்லை. அரிசியாகக் கொண்டு சென்று அங்கே இருக்கும் உரலில் இட்டு இடித்து அங்கேயே மாவைத் தயார் செய்து மாவிளக்கிடவேண்டும். பூஜையின் போது நடைபெறும் முதல் தீபாராதனை, செல்லியம்மன் உறையும் மலை நோக்கியே காட்டப்படும். பின்பே மதுரகாளியம்மனுக்குக் காட்டப்படும். இங்கு மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தங்கத் தேர் உள்ளது.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளிக்குப் பூச்சொரிதல் விழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழாவும் தொடங்கும். 8-ஆம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர். அன்று இரவு சிறப்பு பூஜை நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும். புதன்கிழமை அன்று, பக்தர்கள் மதுரகாளி வாசலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். வியாழனன்று செல்லியம்மன், பெரியசாமி, மதுரகாளி உள்ளிட்ட தெய்வங்களின் தேர்பவனியும் வெள்ளிக்கிழமையன்று ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். சனிக்கிழமை நடைபெறும் மஞ்சள் நீராட்டுடன் அந்த வருடத்துத் திருவிழா நிறைவடையும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிறுவாச்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top