Friday Jul 26, 2024

குருவாயூர் குருவாயூரப்பன் திருக்கோயில், கேரளா

முகவரி

குருவாயூர் குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர் தேவஸ்தானம், கிழக்கு நாடா, குருவாயூர், திருச்சூர் மாவட்டம், கேரளா – 680101.

இறைவன்

இறைவன்: உன்னி கிருஷ்ணன்

அறிமுகம்

குருவாயூர் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். பக்தர்களால், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் (புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் தலம்) அறியப்படும் திருத்தலம். இந்தக் கோவிலில் உள்ள மூலவரான குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த விக்கிரகம், மிகவும் புனிதத்துவம் பெற்றதான ‘பாதாள அஞ்சனம்’ என்னும் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம. 108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்றல்ல எனினும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வரும் திருக்கோயில்.

புராண முக்கியத்துவம்

குருவாயூரப்பன் கோவிலில் உள்ள மூலவர் விக்கிரகத்தை, வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணு உருவாக்கினார். பின்னர் அதனை பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார். அதை வைத்து சில காலம் பூஜை செய்து வந்த பிரம்மன், அந்த விக்கிரகத்தை தேவர்களின் குருவான பிரஜாபதியிடம் வழங்கினார். அவரிடம் இருந்த அந்த விக்கிரகம், கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரிடம் போய் சேர்ந்தது. அதன் மூலம், அந்த விக்கிரகம் மீண்டும் மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரிடமே வந்தடைந்தது. அதனை தான் ஆட்சி செய்த துவாரகையில் வைத்து வணங்கி வந்தார், கிருஷ்ணர். கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாகும் தருணம் வந்தபோது, தன் சிறுவயது முதலே தன்னுடன் இருந்தவரும், தன் தேரோட்டியுமான உத்தவரை அழைத்தார், கிருஷ்ணர். அவரிடம், “இன்னும் சில நாட்களில் துவாரகையை கடல் சூழ்ந்துகொள்ளப் போகிறது. அந்த பெருவெள்ளத்தில், நான் வழிபடும் விக்கிரகம் மிதக்கும். அதனை தேவர்களின் குருவான, பிரஜாபதியின் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்று கூறினார். கிருஷ்ணர் சொன்னபடியே, அடுத்த சில நாட்களில், பெரிய பிரளயம் ஒன்று உண்டானது. அந்த பிரளயத்தில் துவாரகை நகரம் தாக்கப்பட்டது. அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விக்கிரகம், குரு பகவானிடம் போய் சேர்ந்தது. அதை தன்வசப்படுத்திய குருபகவான், அவரது முதன்மை சீடரான வாயு தேவனுடன் சேர்ந்து விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிறப்பான ஒரு இடத்தைத் தேடி அலைந்தார். இறுதியில் அவர்கள் பரசுராமரால் உருவாக்கப்பட்ட, அந்த பசுமை போர்த்திய தேசத்தை அடைந்தார்கள். அதுவே கேரளம். அங்கே மகாவிஷ்ணுவின் மற்றொரு அம்சமாக கருதப்படும் பரசுராமரை, குரு பகவானும், வாயு பகவானும் சந்தித்தனர். பின்னர் அவரிடம், தங்களிடம் இருக்கும் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தை காண்பித்தருளும்படி வேண்டினர். அதைக் கேட்டு பரவசம் அடைந்த பரசுராமர், ‘அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்புமிக்க இடம் இதுதான்’ என்று, இருவரையும் அழைத்துப் போய் ஒரு இடத்தைக் காண்பித்தார். பன்னெடுங்காலமாக அந்த இடத்தின் அருகில்தான் சிவபெருமான், தவம் இருந்து வந்தார் என்பதை அதன் பிறகே குரு பகவானும், வாயு பகவானும் அறிந்து கொண்டனர். பரசுராமர் கை காட்டிய இடத்தில், விக்கிரகத்தை குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த காரியத்தைச் செய்ததால், இந்த தலம் ‘குருவாயூர்’ என்று ஆனது. இத்தல இறைவனும் ‘குருவாயூரப்பன்’ ஆனார். கிருஷ்ண பகவானால், துவாரகையில் வைத்து பூஜிக்கப்பட்ட விக்கிரகம் என்பதால், இந்த ஆலயம் ‘தென் துவாரகை’ என்றும் போற்றப்படுகிறது. மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீக்ஷித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்பயாகம் செய்தான். அதனைக்கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம்… மன்னா, இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க, யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழுநோயால் பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து, கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா! உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன். ஜனமேஜயா! உன் நோய் நீங்க பக்தியுடன் குருவாயூரப்பன் கோவிலில் உள்ள புஷ்கரணியில் நீ தினமும் இந்த நீராடு. ஸ்ரீகிருஷ்ணனைக் குறித்து தவமியற்று. ஸ்ரீகுருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார். ஸ்ரீகிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும், அன்னை பார்வதியையும் தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி…. ஜனமேஜயா! உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகிவிடும் என்று கூறினார். ஆஹா! என் நோயை முற்றிலும் நீக்கிய என் ஜயனுக்கு இன்னமும் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். ஜனமேஜயன் நாடு திரும்புமுன் குருவாயூரப்பனுக்குச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார்.

நம்பிக்கைகள்

குருவாயூர் கிருஷ்ணர் கோயில் செல்பவர்கள் அருகிலுள்ள மம்மியூர் மகாதேவர் கோயில் சென்று தரிசனம் செய்தால் தான் குருவாயூர் முழு தரிசன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். குருவாயூரில் குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறான். உருவத்தில் தான் அவன் குழந்தை. ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன் அவன். குருவாயூர் கோயிலில் திருமணம் முடித்தவர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வர். இதனால் இங்கு தினமும் திருமணக் காட்சியைக் காண முடியும். இத்தலத்தில் பூஜைகள் மிகுந்த சாஸ்திரப்படியும், சித்த சுத்தியுடனும், இறைமாட்சிக்கு ஏற்றம் தரும் வகையில் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. உள்ளத்தாலும், மனதாலும், தூய்மையான புனித வாழ்வு நெறி அர்ச்சகர்களின் பணிக்காலத்தில் கடைபிடித்து அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் இத்தலத்தில் இறைவனின் திருவருளைப்பெற திருக்கோயிலில் உள்ள ருத்ர தீர்த்தத்தில் மூழ்கி ஈர ஆடைகளுடன் தரிசித்தால் மஹா புண்ணியத்தை பெறுவர். குழந்தைகளுக்கு ருசியான சோறு கிடைக்க, தம்பதியினர் தீர்க்க ஆயுளுடன் வாழ, வெண்குஷ்டம் நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

நாராயண பட்டத்திரி சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாராயணீயம். பூந்தானம் என்ற மகான் மலையாளத்தில் எழுதிய ஞானப்பானை ஆகிய நூல்கள் எல்லாம் குருவாயூரப்பனது மகிமைகளை விவரிக்கின்றன. நாரத புராணத்தின் குருபாவன புர மகாத்மியம் குருவாயூரின் மகிமைகளை விவரிக்கிறது. குருவாயூரப்பன் கோயிலில் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டபோது. அங்குள்ள மரச்சுவர்கள், தூண்கள் ஆகியன சேதமடைந்தன. பிறகு பிரஸ்னம் மூலம் கிடைத்த உத்தரவுப்படி, மறுபடியும் தூண்கள் மற்றும் சுவர்களைக் கருங்கற்களால் நிர்மாணிக்கத் தீர்மானித்தனர். அதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். விஷ்ணுவின் தசாவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களுடன் கூடிய பத்து தூண்கள் தயாராயின. அதில் கிருஷ்ணாவதாரத்தை குறிக்க ஒரு தூணில் கம்ச வத காட்சியை வடித்திருந்தார் சிற்பி. ஒருநாள் சிறுவன் ஒருவன் தலைமைச் சிற்பியிடம் வந்து கிருஷ்ணனை வேணுகோபாலனாகச் செதுக்கியிருக்கும் தூணை இங்கு வையுங்கள்! என்றான் அப்படி ஒரு சிற்பத்தை நாங்கள் இது வரை வடிக்கவில்லையே! என்றார். உடனே சிறுவன் சிற்பவேலை நடக்கும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்று, கிருஷ்ணர் வேணுகோபாலனாக விளங்கும் தூணைக் காட்டினான். வியப்படைந்த சிற்பி, திரும்பிப் பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை. வந்தது குருவாயூரப்பனே என்பதை உணர்ந்த தலைமைச் சிற்பி, அந்தத் தூணையே அங்கு நிறுவினார். இந்தத் தூண் குருவாயூரப்பனாலேயே படைக்கப்பட்டதாக ஐதீகம். அதன் பிறகு கம்ச வத தூணை உட்பிராகாரத்தில் வைத்திருக்கிறார்கள். குருவாயூரில் துலாபாரத்துக்கு இணையான வேறொரு சிறப்பும் உள்ளது. அதுதான் கிருஷ்ணாட்டம். இரவு சுவாமி சன்னதியின் நடை அடைத்தபின் தொடங்கி, காலையில் நடை திறப்பதற்கு முன் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலி பீ யை வைத்து கிரீடம் தயார் செய்து, அதை அணிந்து கொண்டு இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். கண்ணனுக்கு இந்த நாட்டியம் ரொம்பப் பிடிக்குமாம். குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. *இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள். *குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை. *இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும். *இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும். *இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன். *நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது. *இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர். *குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. *கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

திருவிழாக்கள்

கார்த்திகை முதல் நாள் முதல் மார்கழி 11 வரை 41 நாட்கள் மண்டல காலம் என்பர். இந்த மண்டல காலத்தில் வரும் ஏகாதசி சிறப்பு தரும். ஏனெனில் அர்ஜுனனுக்கு, பகவான் கிருஷ்ணன் கீதையை உபதேசித்து ஏகாதசி அன்றே குழந்தைக்கு முதன் முதலாக சோறூட்ட வேண்டும். எந்தக் கோயிலில் போய் ஊட்டினால் அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ருசியான சோறு கிடைக்கும் என கேட்டால் எல்லோருமே சொல்வது குருவாயூரைத் தான். ஏப்ரம் 14ம் தேதி சித்திரை விஷு இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு முக்கிய பண்டிகைகள் பல உண்டு. அனைத்து வைணவ பண்டிகைகளும் இங்கு நடக்கும். இங்கு விருச்சிக ஏகாதசி மிக முக்கியமான பண்டிகை. இந்த ஏகாதசிக்கு 18 நாட்கள் முன்னதாகவே விழா தொடங்கி விடும். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பக்தர்களால் யானைகள் காணிக்கையாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் பத்மநாபன், கஜராஜன், கேசவன் என்ற பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் போற்றப்பட்டு வருகிறது. மேலும் இங்கு 52 யானைகள் உள்ளன. இங்கு யானை தான் சன்னதியை திறந்து வைக்கும். விழா காலங்களில் சுவாமியை யானையே சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானைதான் சுவாமியை சுமக்கும் பாக்கியத்தை பெறும். இப்படி பல்வேறு வித்தியாசமான நடைமுறைகள் இந்தக் கோயிலில் உண்டு. இங்கு காலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு விடும். முதல் நாள் அணிந்த மாலை மற்றும் அலங்காரங்களுடன் பூஜை நடத்தப்படும். இதை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் அபிஷேகம் நடக்கும் . தொடர்ந்து 12 கால பூஜைகள் நடத்தப்படும். இந்தக் கோயிலுக்கு சித்திரை முதல் நாள் சென்று வருவது மிகுந்த சிறப்புக்குரியது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குருவாயூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கொச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top