Saturday Jul 27, 2024

ஒருகோடி சிவன்கோயில்

முகவரி

ஒருகோடி சிவன்கோயில்,விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்– 605301 வட்டம்,

இறைவன்

இறைவன்:அபிராமேஸ்வரர் இறைவி: முக்தாம்பிகை

அறிமுகம்

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம், ஒருகோடி சிவன்கோயில் ஒருகோடி அப்படின்னா உங்களுக்கு என்ன தோன்றும்? கட்டுகட்டா பணம் கண்முன் தோன்றும், உண்மைதான் இன்றைய உலகம் பொருள் சார்ந்த உலகமாகிவிட்டது. ஆனால் நான் சொல்லும் ஒருகோடி அருள் சார்ந்த விஷயம். அதை பற்றி சொல்கிறேன் வாங்க .. விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் நான்கு கிமி வந்து தோகைப்பாடியில் இருந்து வலது பக்கம் பிரிந்து வெங்கடேசபுரம் ரயில் நிலையைத்தை ஒட்டிய இருப்புப்பாதையை கடந்து 2 கி.மீ. சென்றால் வரும் ஒரு கோடி. ஆமாங்க இந்த ஊர் பெயர் தான் ஒருகோடி. கிராமத்திற்குள் செல்வதற்கு முன்னரே இடது புறம் தங்ககொண்டாங்கி கிராமத்திற்கு சாலை பிரியும் இடத்துக்கு அருகிலேயே அரசு, வேம்பு, தென்னை அடர்ந்த ஒரு சோலையில் தான் சிவன்கோயில் உள்ளது. அருகிலேயே பரந்த நீர்ப்பரப்பு கொண்ட கொண்டாங்கி ஏரி உள்ளது. இந்த கிராமத்துக்கு இன்னொரு வழியும் இருக்கு விழுப்புரம்- திருவெண்ணெய் நல்லூர் சாலையில் நாலு கிமி வந்தால் கொண்டாங்கி ரோடு வரும் அதன் வழியா இந்த கோயிலுக்கு வரலாம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

சிறப்பு அம்சங்கள்

இவ்வளவு சிரமப்பட்டு, எதுக்கு இந்த கிராம சிவன்கோயிலை பார்க்க போகணும்? சிறிய சாவிகள் தான் பெரிய பூட்டுக்களை திறக்கின்றன. அது போல் இந்த சிறிய கோயில் ஞானத்திற்கான பெருவழியை திறக்கும். இந்த பழமை வாய்ந்த தலத்து இறைவனை ஒரு கோடி சித்தர்கள் வந்து வழிபட்டு, தவம் செய்து இங்கேயே மரங்களாகவும், இலைகளாகவும், பூக்களாகவும், காய்களாகவும், கனிகளாகவும் கற்களாகவும், மணல்துகள்களாகவும் இன்றும் இருக்கின்றார்களாம் அதனால்தான் இக்கிராமம் “ஒரு கோடி’ என்று அழைக்கப்படுவதாக செவி வழி செய்தி. அதுமட்டுமல்ல இறைவனை வழிபட நேர் எதிரில் வாசல் இருக்கும் அதன் வழியாக சென்று தான் வழிபடுவோம் அல்லவா! சில கோயில்களில் எதிரில் சாளரம் இருக்கும் அதன் வழி தான் வழிபடவேண்டும், அவை சாளரக்கோயில் எனப்படும், இந்த ஒருகோடி கிராமத்தில் மட்டும் தான், ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவுக்கு சிறிய துளை வழிதான் பார்த்து வழிபடவேண்டும். இது ஒரு துளை தரிசனக்கோயில், இதனை இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் சிறப்பு. 2018 வரை இந்த சிவாலயம் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. தற்போது போனது வந்ததை பூசி வண்ணமடித்து வழிபாட்டிற்கு வந்துள்ளது. முழுமையான திருப்பணிகள் செய்யவேண்டும். இக் கோயிலில் உள்ள சிலைகள் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால் இக் கோயில் 15-ம் நூற்றாண்டுக்கு உரியதாக இருக்கிறது. இக் கோயில் இறைவன் அபிராமேஸ்வரர் இறைவி முக்தாம்பிகையுடன் உடனுறைகிறார். கோயிலின் உள்ளே பல்வேறு அரிய வகை ஓலைச் சுவடிகள் இருந்ததாகவும், நாளடைவில் அவை காணாமல் போயும், பலரால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன என்றும் இக் கிராம மக்கள் கூறுகின்றனர். இக்கோயில் இறைவனை ஓலை படித்த நாயகி உடனுறை கோடி கொடுத்த நாதர்’ என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இதனால் இங்கு ஓலைச் சுவடிகள் இருந்தது என்ற மக்களின் கூற்று உண்மையாக இருக்கலாம் கிழக்கு நோக்கிய சிவாலயம், இறைவி தெற்கு நோக்கியுள்ளார். மூலவருக்கு நேரே துளை வாசலும், அதன் எதிரில் நந்தியும், கோயிலுள் நுழைவதற்கு பக்கவாட்டில் வாயில் இறைவியின் எதிரில் உள்ளது. தென்புறம் தக்ஷணமூர்த்தி உள்ளார், கருவறை பின்புறம் கோடி விநாயகர் எனும் சிற்றாலயம் உள்ளது. அருகில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிற்றாலயம்உள்ளது, தற்போது பெரிதாக சிதைந்துள்ளது அதில் இருந்த சிலைகள் களவாடப்பட்டுவிட்டன. அதன் சன்னதி எதிரில் ஒரு வேல் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இக் கோயிலில் கொற்றவை, பேச்சியம்மன், மூத்ததேவி ஆகிய சிலைகள் உள்ளன. கோயிலுக்கு முன்புறம் எல்லைபிடாரி அம்மன் சிலை உள்ளது. புதிதாய் பக்தர் ஒருவர் வாங்கி கொடுத்த ஒரு பைரவர் வானமே கூரையாக உள்ளார். சிவாலயம் அருகில் கிணறு இருந்தது, இந்த கிணற்றின் உள்ளே தங்கத் தேருடன் கூடிய புதையல் இருந்ததாகவும், பொதுமக்கள் கூறுகின்றனர். பல சிரமங்களுக்கு இடையே சிதைந்த கோயில் மீட்கப்பட்டுள்ளது. தற்போது முருகன் எனும் கோயில் பூசாரி ஒருவர் பூஜை செய்து வருகிறார். மக்கள் வரவு பிரதோஷம் போன்ற சிறப்பு நாட்களில் உள்ளது. எனினும் அன்றாட செலவினங்களுக்கும், பிரதோஷ செலவுகளுக்கும், கோயில் பூசாரி கையறு நிலையில் உள்ளார். முருகன் சன்னதி கட்டுமானத்திற்கும் பிரதோஷ செலவுகளுக்கும் உதவ நம்மில் பலருண்டு.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பிள்ளையார்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top