Saturday Jul 27, 2024

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் – பூரம் நட்சத்திரம்

முகவரி

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம்-622 303 புதுக்கோட்டை மாவட்டம். Phone: +91 97519 56198, 98430 55146, 94436 04207, 90478 19574

இறைவன்

இறைவன் – ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்) இறைவி – பிரஹன்நாயகி (பெரியநாயகி)

அறிமுகம்

இத்தல இறைவன் சுயம்பு முர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள். இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அவசியம் செல்ல வேண்டிய தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயிலாகும் பூரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஒழுக்கமும், தைரியமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். புத்திக்கூர்மையோடு எதையும் அணுகுவர். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயப் பணிகளில் நாட்டம் கொள்வர். உண்மை நீதி உடயவர்களாக இருப்பர். மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர்.

புராண முக்கியத்துவம்

சோழ மன்னன் ஒருவனுக்கு திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லை. சிவபக்தனான அவன், தனக்கு பின் சிவசேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தினான், அகத்திய முனிவரைச் சந்தித்துத் தன் மனக்குறையைச் சொல்லி அழுதான். திருவரங்குளம் சென்று, அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறி, அவனை அனுப்பி வைத்தார். மன்னனும் அத்தலம் சென்று சிவலிங்கத்தைத் தேடி அலைந்தான். அப்பகுதியில்தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவலை மன்னன் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினார்கள். மன்னன் அந்த இடத்திற்குச் சென்று பூமியில் தோண்டிப் பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கமும் தென்பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்து மன்னனுக்கு அருள் புரிந்தார். அந்த இடத்தில் அந்த மன்னன் எழுப்பிய கோயில்தான் அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில். ஒரு பூர நட்சத்திர நன்நாளில்தான் அந்த நிகழ்ச்சி நடந்ததாம். அதனால் அது பூர நட்சத்திரக் கோவிலாகக் கொண்டாடப்படுகிறது. இறைவனின் அருளால் கோயிலைக் கட்டிய மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து அவனை மகிழ்வித்தது.

நம்பிக்கைகள்

பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.

சிறப்பு அம்சங்கள்

பூரதீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உள்ளதாம். அந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பொற்பனை மரம் ஒன்று அக்காலத்தில் இருந்ததாம். அதிலிருந்து காய்த்த பொற்பழங்கள் மூலம் பணம் பெற்று இக்கோவில் கட்டப்பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல் ஸ்தூபி ஒன்று மட்டும் உள்ளது.

திருவிழாக்கள்

ஆடிப்பூரம் அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவரங்குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top