Friday Sep 20, 2024

சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம் – 625 214. போன்: +91-4543-258987, 94867 31155, 93454 45554

இறைவன்

இறைவன்: ஜெனகை நாராயணப் பெருமாள் இறைவி: ஜெனகவல்லி தாயார்

அறிமுகம்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் நகரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில். மூலவர் ஜெனகை நாராயணப் பெருமாள் என்றும், தாயார் ஜெனகவல்லி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார். வைகை ஆற்றங்கரையில் பசுமையான சூழலில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஜெனகை மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இந்தக் கோயில் உள்ளது. ஜெனக புரி, சின்ன தஞ்சை, சோலைக்குறிச்சி, சதுர்வேதிபுரம், ஆனந்தசாகரம், ஜெனகயம்பதி மற்றும் சேனகபுரி என்று இந்த நகரம் பலவிதமாக குறிப்பிடப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ஜெனகனின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள். மகரிஷியான ஜெனகனுக்கோ தம்மிடம் வளரும் இந்தக் குழந்தை யார் என்பதை உணரவே முடிந்தது. மகாலட்சுமியை எந்த மனிதனுக்கு மணம் முடிப்பது என்பது பெரிய பாரமாகவே இருந்தது. சாதாரணமான பெண்ணைப் பெற்றவனுக்கே மாப்பிள்ளை கிடைக்க பாடாய் பட வேண்டியிருக்க திருமகளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடுவது என்ற கவலையில் ஜெனகன் துடித்தார். இதற்காகவே நாராயணனே பிறப்பெடுத்து வந்து இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் பாரம் நீங்குமஎன்று கவலைப்பட்டு சோழவந்தானில் வந்து தவமிருந்தான். அதுவே இத்தலம் அமைய காரணமாக உள்ளது. ஸ்ரீமன் நாராயணனுக்கே மாப்பிள்ளையாக வேண்டி தவமிருந்த ஜெனகனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று இருக்கிறது என்றால் அது சோழவந்தான் ஜெனகை நாராயணன் கோயில்தான். ஜெனகனின் தவப்பயனால் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்து சீதையை கைபிடித்தார். இந்த பெரும் செயல் செய்த ஜெனகனுக்கு நன்றி உணர்வோடு உள்ள கோயில்தான் இது.

நம்பிக்கைகள்

கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைகள் ஆகும்.விவசாய விளைச்சல் செழிக்க இத்தலத்தில் பலர் வேண்டிக் கொள்வர். இத்தலத்து பெருமாளை வேண்டிக் கொண்டால் தொழில் வளம், கல்வி விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியன நிறைவேறுகின்றன.

சிறப்பு அம்சங்கள்

ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கோயிலுக்குள் பல கல்வெட்டுகள் உள்ளன. உள் பிரகாரத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கி.பி 5 ஆம் நூற்றாண்டில் ஒரு கருங்கல் கட்டுமானத்தைக் குறிக்கிறது. ராணி மங்கம்மாள் பொ.ச.1700-இல், ஒற்றை அக்ரஹாரம் தெருவில், யாத்ரீகர்களுக்காக ஒரு சத்திரத்தைக் கட்டியதாக நம்பப்படுகிறது. இந்த சத்திரத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி மதுரையின் மிகவும் பிரபலமான மங்கம்மாள் சத்திரத்திற்கு செலுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இத்தலத்தின் மிகவும் விசேஷம் இங்கு அருள்பாலிக்கும் ஜெயவீரஆஞ்சநேயர் ஆவார். அர்த்தமண்டபத்தின் வலதுபக்கம் தனி சன்னதியாக வீற்றிருக்கும் இவரை வணங்கினால் நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தருவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆஞ்சநேயரின் வால் பின்புறம் சுற்றி நூனியில் மணி கட்டியிருக்கும் அழகு பார்ப்பவரை மயங்க வைக்கும். இந்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டலும் ஜெயம் ஆகும் என்பதால் இவர் ஜெயவீரஆஞ்சநேயர் என்ற பெயர் விளங்குகிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை பெருமளவிலான பக்தர்கள் வடைமாலை சாத்தி வழிபடுகிறார்கள். பெரிய அளவிலான ராமன் சீதை லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்ரகம் உள்ளது இக்கோயிலில். புராதன காலத்தில் இருந்தே இருக்கும் கோயில். வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் ஜெனகையம்பதி என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்குள்ள ராமனது விக்ரகம் மிக அழகிய வடிவில் மிக நேர்த்தியாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு.

திருவிழாக்கள்

சித்திரை – சித்ரா பவுர்ணமி – 3 நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும, – ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தசாவதாரத்தில் 9 அவதாரங்கள் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து சுவாமி வலம் பங்குனி பிரம்மோற்சவம் – 11 நாட்கள் – ஸ்ரீ ராம நவமி, மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி பள்ளியறை புறப்பாடு நடக்கும். தைமாதப்பிறப்பு, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். நவராத்திரி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரத்தில் விசேஷமாக இருக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top