Thursday Sep 19, 2024

கோலியனூர் வாலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர் – 605103, விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146- 231 159, +91-94432 93061.

இறைவன்

இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயம், மிகவும் பழைமையானது. சுமார் ஆயிரத்துநானூறு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு குறிப்பு. கச்சிதமான தோற்றத்தில் நேர்த்தியாக அமைந்துள்ளது கோயில். ஆனால், ஆங்காங்கே சிதிலமடைந்து போய், பக்தர்கள் வரத்தில்லாமல் இருக்கிறது. ஆலயத்துக்கான மதில்களும் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. கோயிலுக்குள் நுழைவதற்கு முன் வலப் பக்கம் பெரிய ஊறல் (குளம் போன்றது) காணப்படுகிறது. இங்கு தண்ணீர் வற்றி இருபது வருடங்களுக்கும் மேலாகி விட்டதாம்! இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து நூறு வருடங்களுக்கும் மேலாகிறது. புரநல்லூர் என்றும் கோலியபுர நல்லூர் என்றும் கல்வெட்டுகளில் இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. முன் காலத்தில் இங்கு கோயில்கள் நூறு அமைந்து விளங்கியதால், கோயில்நூறு என அழைக்கப்பட்டதாம். நாளடைவில் இதுவே இதுவே மருவி, கோலியனூர் ஆகிவிட்டது

புராண முக்கியத்துவம்

மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். “சப்தகன்னியர்’ எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது. இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், பூலோகத்தில் இத்தலத்தில் தன்னை வழிபட்டு வர, குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாக கூறினார். மேலும், அவர்களது பாதுகாப்பிற்காக, தனது அம்சமான வீரபத்திரரையும் அனுப்பி வைத்தார். சிவன் அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, “கன்னியர் குரு’ என்று அழைக்கிறார்கள் .

நம்பிக்கைகள்

தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்காகவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காகவும், தீராத நோய்கள் விரைவில் குணமாகவும், முக்தி கிடைக்கவும் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். சனி தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

கூர்மாங்க சனீஸ்வரர்: நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படையில் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியவில்லை. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரணமாக விளங்குவதால் உலகின் சகல ஜீவ ராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர். இத்தனை சிறப்பு வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். ஆனால் ஒரு சில பரிகாரக் கோயில்களில் திருநள்ளாறு, குச்சனூர் போன்ற தனி சன்னதிகளில் மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே இந்த அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலில் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கி தனி சன்னதியில் சனிபகவான் காட்சி தருகிறார். சனீஸ்வரர் சிறப்புகள்: தெற்கு திசை நோக்கி அமைந்த காரணம்: வாலி மிகப்பெரிய சிவபக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்குள் 1000 சிவாலயங்களில் பூஜை செய்யும் வழக்கம் உடையவன். அதைப் போலவே இங்கு அடர்ந்த வனப் பகுதியில் 100 சிவலிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப்பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் ராவணன் தனது பக்தியினை விட சிறந்த பக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தைக் கலைக்க முடிவு செய்து பின்புறமாக மறைந்து வந்து தவம் செய்த வாலியினை பின்பக்கம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தார். இதனை உணர்ந்த வாலி தனது வாலினால் ராவணனை உடல் முழுவதும் சுற்றி கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்துவிட்டார். பின் இராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை காட்டினான். இதனை கேள்விப்பட்டு இராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மடிப்பிச்சை கேட்டு இராவணனை அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு இராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி (இலங்கையை நோக்கி) சனீஸ்வரர் பார்வை பட்டுக் கொண்டே இருக்கும்படி தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்தார். தெற்கு திசை எமனின் திசை. தனது சகோதரர் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும். சனீஸ்வரர் வழிபாடு: இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். வழிபடும் முறைகள்: சனியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழரை சனி, ஜென்மசனி, அஷ்டம சனி நடப்பவர்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த சனீஸ்னீ வரரை வலம் வரக்கூடிய நிலையில் சனி சன்னதியில் அமைந்துள்ளனர். சனிக்கிழமை நாளில் 11 சுற்று, 11 வாரங்கள் சுற்றி வர சனியின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் நீடிக்க: தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். ஆயுள் கண்டம் ஏற்படுத்தும் இதய நோய், வலிப்பு நோய், தலைசம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு வியாதிகளில் பாதிக்கப்பட்டவர்கள். சனீஸ்னீ வரரை வழிபட நன்மை நடக்கும். ஆயுள் பலம் வேண்டுவோர் நீல வஸ்திரம் அணிவித்து நீல மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தனது வயதின் எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வயது எண்ணிக்கையில் சனிதோறும் சுற்றிவந்து நீண்ட ஆயுள் பலம் பெறலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு எள் மற்றும் பிற சாதங்களை அன்னதானம் செய்யலாம். மேற்கு நோக்கிய சிவாலயமான இங்கு பெரியநாயகி அம்பாளுடன் சிவன் காட்சி தருகிறார். வாலி தன் தம்பி மனைவியை அபகரித்த தோஷம் நீங்க வழிபட்டதால், சுவாமிக்கு “வாலீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டது. வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வில்லியனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வில்லியனூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top