Thursday Sep 19, 2024

120 வருடங்களுக்கு ஒருமுறை சித்தர்கள் பூசை செய்யும் அக்னீஸ்வரர், அரசண்ணாமலை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். சென்ற பதிவில் திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படிஅருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம். 

இதற்கு முந்தைய பதிவில்  அரசண்ணாமலையார் கோயிலில் 120 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை பதிவை  மூன்றாம் நாள் தரிசனம் பெற்றோம்.இன்றைய பதிவில் அந்த கோயில் பற்றி சொல்ல விரும்புகின்றோம்.

அகத்தியர் மைந்தன், 120 வருடங்களுக்கு ஒரு முறை சித்தர்கள் பூசிக்கும் சிவலிங்கத்தை, ஈரோட்டுக்கு அருகில் ஒரு ஊரில் அமைந்துள்ள மலை மேல் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அர்த்தஜாம பூசையையும் பற்றி விவரித்திருந்தார். அந்த நிகழ்சிகள் விவரிக்கப்பட்ட தொகுப்புக்களின் தொடர்பை  தருகிறேன். ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் பாருங்கள்.

“இந்தக் கோவிலில் நூற்றி இருபது வருஷத்திற்கு ஒருமுறை தலையாயச் சித்தர் என் தலைமையில் பதினெட்டுச் சித்தர்கள், நள்ளிரவு நேரத்தில் இந்த சிவபெருமானுக்கு ஒன்று சேர்ந்து அபிஷேகம் செய்வது உண்டு.  எனது மைந்தன் என்பதால் உனக்கும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காட்ட இக்கோவிலுக்கு வரவழைத்தேன்,  எங்களைக் காண முடியாது என்றாலும் சூட்சுமமாக இந்த உணர்வினைத் தெரிய வைத்தேன்.  இது இன்று மாத்திரமல்ல, இன்னும் இரண்டு நாளைக்குத் தொடரும்.  உனக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும். எனினும் இதை இப்போது யாரிடமும் சொல்வதில் பயனில்லை.  பொறுத்திரு” என்றார் அகஸ்தியர்.

சமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர், சித்தன் அருள் வாசகர் திரு தீபன், சூரத், குஜராத் அவர்கள், அந்த கோவிலை பற்றிய தகவலை அடியேனுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அனுமதியுடன், தகவல்கள் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

“சட்டென்று ஏகுக” எனத் தொடங்கிய அவரின் அனுபவம், வாசிப்பவரை மூச்சு விடக்கூட விடாமல் அடுத்தது என்ன அனுபவத்தை அகத்திய பெருமான் அவருக்கு கொடுத்திருக்கிறாரோ என வாசிப்பவரை திகைக்க வைத்த நிகழ்ச்சிகளை படித்துவிட்டு, பலரும், இன்றும், அது எந்தமலை? எங்கிருக்கிறது? எப்படி செல்வது? அந்த மலையில் இரவில் ஆபத்தான சூழ்நிலை விலகிவிட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர். அனைத்திற்குமான பதிலை கீழே தருகிறேன்.

இந்தக் கோயில் பெருந்துறை-விஜயமங்கலம் நான்கு வழிச்சாலையில் கொங்கன்பாளையத்தில் “அரசண்ணாமலை” மேல் அமைந்துள்ளது. கிராமத்து மக்கள் வருடந்தோறும் விழா எடுத்து நடத்தி வருகின்றனர். பக்கத்தில் உள்ள விஜய மங்கலத்தில் சமண சமயத்தை அவரின் படுகைகள் குன்றுகள் சிகிலமடைந்த கோயில்கள் இருக்கின்றன. அவை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

கிராமத்து மக்களால், அக்னீஸ்வரர் கோயில் தேவஸ்தான டிரஸ்ட் ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.

மாதம் மாதம், கிராமத்து மக்கள் கிரிவலம் செய்து வருகின்றனர். விழாவும் எடுத்து வருகின்றனர். அந்த கோயில் தொடர்பான செய்திகளுக்கு அவர்கள் காணொளியில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டால் மேலும் விவரங்கள் கிட்டும் என்று நினைக்கிறேன்.

கோயிலுக்கு, இன்று வரை, சென்று வர மலைப்பாதைகள் சரியாக இல்லை மிகவும் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.

இன்றும் இரவில் யாரையும் மலைமேல் தங்குவதற்கு அனுமதிப்பதில்லை. அந்த காலத்தில் இருந்த ஆபத்துகள் இன்று தொடர்வதாக கிராமத்து மக்கள் கூறுகின்றனர். தனியாக யாரும் மலை ஏறி செல்வதில்லை. குழுவாகவே செல்ல வேண்டும். இரவு நேரத்தில் மலை ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.

இந்த மலை சம்பந்தமாக கிடைத்த புகைப்படங்களையும், ஒரு காணொளியையும் கீழே தருகிறேன்.

இந்த தொகுப்பை படித்துவிட்டு, உடனேயே மலை ஏறி சென்று விடாதீர்கள். எந்த ஆபத்தான விஷயங்களிலும் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கிடைத்த தகவல்களை கீழே தருகிறேன்.

  • கடந்த 22 வருடங்களாக தை மாதம் முதல் தேதி விழா எடுத்து வருகின்றனர், அன்னதானம் நடத்தி வருகின்றனர். பத்து வருடங்களாக மலைமீது அன்னதானம் செய்து வந்தார்கள் ஆனால் சரியான அமைப்பு இல்லாததால் நீர் உணவு போன்றவை மேலே கொண்டு போக கடும் சிரமமாக இருந்ததால் மீதி 10 ஆண்டுகள் ஆக மலை அடிவாரத்தில் நடந்து வருகிறது
  • கோயிலுக்கு என்ற இருந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு விட்டன கோயிலுக்குரிய சொத்துக்கள் ஏதுமில்லை.
  • ஊர் மக்கள் கூடி சீட்டு போட்டு ஒரு சிறிய அளவிலான நிலம் வாங்கி அன்னதான மண்டபம் கட்டி உள்ளனர்.
  • கோயிலுக்கு என்று குருக்கள் அர்ச்சகர் யாரும் தற்போது இல்லை.
  • இன்றும் இரவில் யாரும் தங்குவதில்லை
  • கோயிலுக்கு இன்றும் சரியான மலைப்பாதைகள் இல்லை.
  • மாதா மாதம் பௌர்ணமி கிரிவலம் நடத்திவருகின்றனர் அதில் 1500 பேர் வரை பங்கேற்கின்றனர்.
  • வாரா வாரம் நடக்கும் ஞாயிற்றுக்கிழமை பூஜையில் சுமார் 70 லிருந்து 100 பேர்வரை பங்கேற்கின்றனர்
  • அந்த ஊரில் ஒரு டீக்கடை கூட இல்லை டீ குடிப்பது என்றாலும் 7 கிலோ மீட்டர் வரவேண்டும்
  • டிபன் கடை என்று எதுவும் இல்லை
  • மத்திய அரசின் வன பாதுகாப்பில் இந்த மலை உள்ளது. படிக்கட்டுகள் அமைப்பதற்கு வன பாதுகாப்பு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது
  • அக்னீஸ்வரர் கோயிலில் அவரிடம் உத்தரவு கேட்டு தான் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் மலை உச்சியில் ஒரு செடி நடுவது என்றாலும் அவருடைய அனுமதி பெற்றே செய்து வருகின்றனர்
  • இன்றுவரை மலையில், இரவில் யாரும் தங்குவதில்லை. சிவராத்திரி ஒரு நாள் மட்டும் தங்கி பூஜை செய்து வந்து விடுகின்றனர்.
  • கோயிலுக்கு என்று வசதிகள் ஒன்றுமே இல்லை.
  • வரும் அடியார்கள் அவரை தொடர்பு கொண்டால் ஒருங்கிணைந்து செயல்பட அவர் தயாராக இருக்கிறார் என்றும் தெரியப்படுத்தினார்.
  • ஞாயிற்றுக்கிழமை மட்டும் மிகச் சிறப்பான முறையில் அபிஷேகங்கள் ஆராதனைகள் பூஜைகள் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
  • இன்றுவரை அந்த கோயிலில், திருமண தடை, காரிய தடை, குழந்தையின்மை, கால்நடைகள் காணாமல் போனாலும் வம்பு வழக்குகள் பிரச்சினைகள், நில பிரச்சினைகள் வறுமை பிரச்சனைகள் என எந்த பிரச்சனைக்கு கோரிக்கை வைத்தாலும் உடனடியாக அக்னீஸ்வரர் அருள்செய்து அனைத்து துன்பங்களையும் மாற்றி நல்லாசி தருகிறார்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top