Monday Sep 16, 2024

ஹோமம் என்பதின் விளக்கம்!

ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார்.

நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கலைன்னாலும் ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க.

முதலில் கணபதி ஹோமம்.

எந்த காரியம் செய்தாலும் முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் வாராமல் இருக்க விநாயர் வழிபாடு, கணபதி பூஜை. துர்தேவதைகளாலோ, துஷ்ட்ட சக்திகளாலோ எந்த இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வினைகளை வேரறுக்கும் விநாயகர் பூஜை.️

அடுத்து சங்கல்ப்பம்.

கோடான கோடி மக்கள் வாழக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். சரியான முகவரி எழுதப்பட்ட தபால் எப்படி குறுப்பிட்ட நபரை சென்றடைகிறதோ, அதை போல் செய்யகூடிய இந்த ஹோமங்கள் குறுப்பிட்ட இலக்குகளை சென்றடையக்கூடியதாக இருக்க வேண்டும். அந்த இலக்கு என்பது யாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, அதாவது யாருக்காக செய்கிறோமோ அவருக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிராத்தனை செய்யப்படுவது.

அடுத்து குலதெய்வ பூஜை.

இது பெரும்பாலான ஹோமங்களில் செய்யப்படுவதில்லை. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். உலகத்தில் எத்தனை சாமிகள் இருந்தாலும் குலதெய்வம் முக்கியமானது. நம் முன்னோர்கள் காலத்தில் குலதெய்வ பூஜை என்பதை குறையில்லாமல் செய்தார்கள். எந்த காரியமாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வேண்டினார்கள். வருடத்திற்கு ஒரு முறை விழாஎடுத்தார்கள். வீட்டில் ஒரு சுபகாரியம் நடந்தாலும் முதல் பத்திரிகை சாமிக்கு வைத்தார்கள். ஆக குலதெய்வத்தோடு அவர்களுக்கு இருந்த நெருக்கம் அதிகம். எப்படி இருப்பினும் , அடுத்து செய்ய வேண்டியது குலதெய்வ பூஜை. குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு செய்யப்படும் பூஜை. ஆகமத்தில் இடம் இல்லையே என்று அலட்ச்சியம் செய்யக்கூடாது.

அடுத்து செய்யப்படுவது பிதிர் பூஜை.

இது ஒன்னும் அமாவாசை தர்ப்பணம் இல்லை. தெய்வமாகி போன நம் முன்னோர்களை தேடிபிடித்து வணங்குவது. நீத்தார் உலகம் என்று சொல்லக்கூடிய இடத்தில் நம் மூன்று தலைமுறையை சேர்ந்த முன்னோர்கள் இருப்பார்களாம். வருடத்தில் ஒரு நாள் மட்டும் வெளியே வருவதற்கு அனுமதி உண்டு. அது திதி நாள். அன்று அவர்களுக்கு உரிய திதி கடமைகளை சரிவர செய்தால் மகிழ்ந்து வாழ்த்திவிட்டு செல்வார்களாம். அவர்கள் ஆசியை பெறுவதற்காக செய்யப்படுவது பிதிர்பூஜை.

எந்த தேவதையை குறித்து ஹோமம் செய்கிறோமோ அந்த தேவதையை கும்பத்தில் நிலைநிறுத்தல். கும்ப ஸ்தாபனம் கும்பம் என்பது உடல். அதன் மேல் வைக்கப்படும் தேங்காய் என்பது தலை. கும்பத்தில் சுட்டப்படும் நூல் நாடி நரம்புகளை குறிக்கும். உள்ளே இருக்கும் தண்ணீர் ரத்தத்தை குறிக்கும். தர்ப்பை என்பது ஆகர்ஷ்சன சக்தி நிறைந்தது. காந்தத்தை எப்படி இரும்பு கவர்ந்து இழுக்கிறதோ, அதைபோல் தெய்வீக சக்தியை கவர்ந்து இழுக்கும் தர்ப்பையை கலசத்தில் வைக்கிறார்கள். ஆக கலசத்தில் நம் பிரதான தேவதை பிரச்சனமாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் அதன் தாத்பரியம்.

என்ன ஹோமம் செய்கிறோம்?

அதாவது எந்த தெய்வத்தை நினைத்து செய்கிறோமோ, அந்த தெய்வத்தை கும்பத்தில் நிலை நிறுத்துவதுதான் ஆஹாவனம் என்று பெயர்.

அடுத்து செய்யப்படுவது நவக்கிரக தோஷ பரிகாராம்.

ஜெனனி ஜென்ம சௌக்கியனாம் வர்த்தினி குல சம்பதாம் பதவிபூர்வ புண்ணியனாம் லிக்கியதே ஜென்மபத்திரிகா நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்திற்கும் காரணம் நவகிரகங்கள். நம்புகிறமோ இல்லையோ, ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, அவர்கள் தங்கள் பணியை செய்கிறார்கள். இதைதான் வாங்கி வந்த வரம் என்கிறார்கள். நாம் பரிகாரம் செய்கிறோம். அதனால் நவகிரங்களை வணங்கி பூஜிக்க வேண்டும். இதை ஹோம நிறைவுக்கு முன் செய்வதும் உண்டு. ️

இனி ஹோமம் ஆரம்பம்

இந்த நடைபெறும் போதுதான் வேத பாராயணங்கள் செய்யப்படுகிறது. வேத பாராயணங்கள் என்பது இறைவனை ஆராதிப்பது என்று பொருள். பொதுவாக பாராயணங்கள் என்பதே இறைவனை புகழ்ந்து பாடி, அவர் அருளை பெறுவதுதான். ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூலமந்திரம், வேதமந்திரம், காயத்திரி மந்திரம், பிராத்தனை மந்திரம் என்ற நான்கு உண்டு. உதாரணமாக மூல மந்திரம் என்பது பீஜாச்சரம் கொண்டு சொல்வது.

அது ஓம் ஸ்ரீம் ரீம் என்று வரும்.

வேத மந்திரம் என்பது ஒலி அலைகளால் நன்மை பெறுவது. காயத்திரி மந்திரம் என்பது எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்கிறோமோ அவரின் புகழுரைகளை சொல்வது. பிராத்தனை மந்திரம் என்பது நம் வேண்டுதல் பலிப்பதர்க்காக சிரம் தாழ்த்தி, கை கூப்பி, மனதார பிராத்திப்பது என்று பொருள். பாராயண முடிவில் சமகம் சொல்லப்படுகிறது.வசுவதாரா கொண்டு நெய் ஊற்றும் போது சொல்லப்படும் மந்திரம் சமகம்.

கடைசியாக பூர்ணாஹுதி

இது ஹோமத்தின் நிறைவு பகுதி. பட்டு துணியில் வாசானாதி திரவியங்கள் சேர்த்து, எட்டு கண் விட்டெரிக்கும்அக்னி தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாஹுதி

எனப்படுவது. இந்த அவிர் பாகத்தை பெற்று கொள்ள தேவலோக தேவேந்திரனே வருவாராம். இதை செய்து முடித்ததும் ஹோமம் நிறைவு பெறுகிறது…!

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top