பழஞ்சிறை தேவி கோவில், திருவனந்தபுரம்

முகவரி :
பழஞ்சிறை தேவி கோவில்,
கோவலம் சாலை, அம்பலத்தாரா,
திருவனந்தபுரம் மாவட்டம் – 695026.
தொடர்புக்கு: 94474 00300, 0471 – 246 1037, 245 5204
இறைவி:
பழஞ்சிறை தேவி
அறிமுகம்:
பழஞ்சிறை தேவி கோவில் என்பது கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால ஆலயம். இது அம்பலத்தாரா மற்றும் பரவன்குன்னு ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. பழஞ்சிறை தேவி கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு தெற்கே 3.2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பழஞ்சிறை தேவி கோவில், ஒரு காலத்தில் பழஞ்சிறை என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், யோகீஸ்வரரின் சிலை அம்பாளின் முன் வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் தேவி, அருள் சுரக்க தயங்காதவர் என்று அழைக்கப்படுகிறார். பழஞ்சிறை தேவியை வழிபடுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், இந்தப் பிறவியில் தொல்லைகள் அகலும் என்றும் கூறப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
கேரளாவின் அனந்தன் காட்டிலுள்ள நீலாற்றங்கரையில் தேவியை நோக்கி தவமிருந்தார் யோகீஸ்வர முனிவர். அவருக்கு காட்சியளித்த தேவி, ‘என்னை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுவாய்’ எனச் சொல்லி மறைந்தாள்.
தேவி காட்சியளித்த கோலத்திலேயே சிலை வடித்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார் முனிவர். பிற்காலத்தில் காடு அழிக்கப்பட்டு சிறைச்சாலை கட்டப்பட்டதால் ‘பழஞ்சிறை’ எனப் பெயர் வந்தது. இங்கு அருள்புரியும் அம்பிகை பழஞ்சிறை தேவி எனப் பெயர் பெற்றாள்.
நினைத்தது நிறைவேற தேவிக்கு செவ்வரளி மாலை சாத்தியும், வெடி வழிபாடும் செய்கின்றனர். யோகீஸ்வர முனிவரின் சிலை அம்மனின் முன்பு உள்ளது. இவரை வழிபட்டு திருநீறு பூசினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ‘பாலாரிஷ்ட தோஷம்’ விலகும்.
மாசி மிருகசீரிடத்தன்று இங்கு திருவிழா தொடங்கும். 41 நாள் விரதமிருந்த பக்தர்கள் அப்போது ‘தோற்றப்பாட்டு’ என்னும் பாடலை இசையுடன் பாடுவர். தேவி அவதரித்த வைபவம், அருள்புரியும்
விதம் குறித்து இதில் வர்ணிப்பர். இதைக் கேட்டால் கிரக தோஷம், முன்வினைப்பாவம், தடைகள் விலகும்.
மாசித்திருவிழாவின் ஆறாம் நாளன்று நடக்கும் அத்தாழ பூஜையின் போது பெண் குழந்தைகளுக்கு அம்மன் வேடமிட்டு பூஜை செய்வர். இந்நாளில் நல்ல மணவாழ்க்கை, சுமங்கலி பாக்கியம் பெற பெண்கள் மாங்கல்ய பூஜை நடத்துவர். அன்று நள்ளிரவில் நடக்கும் ‘ஸ்ரீபூத பலி’ என்ற பூஜையில் பூதகணங்களுக்கு பலியிடும் நிகழ்ச்சி நடக்கும்.
தேவியின் சிலம்பு, திரிசூலம், வாள், பட்டு வஸ்திரத்தை அணிந்தபடி பூஜாரி இதில் பங்கேற்பார். நவக்கிரகம், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சஸ், மாடன், தம்பிரான் சன்னதிகள் இங்குள்ளன.
17 யானைகள், ஆறு சிங்க சிலைகள் கருவறையை சுமக்கின்றன. கருவறையின் மீது மும்மூர்த்திகள், மூன்று தேவியர், கங்கையுடன் கூடிய சிவன் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வெளியே உள்ள சர்ப்பக்காவு பகுதியில் ஆறடி உயர நாகராஜர் சன்னதி உள்ளது. இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கண், தோல் நோய் தீரும். ராகு, கேது தோஷம் விலகும்.






காலம்
700 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பழஞ்சிறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவனந்தபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்