திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி
அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்ப்பாடி – 612 504. திருப்பனந்தாள் போஸ்ட். திருவிடைமருதூர் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன் +91- 94421 67104
இறைவன்
இறைவன்: பாலுகந்த ஈஸ்வரர் இறைவி: பெரியநாயகி
அறிமுகம்
கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் உள்ளது. திருஆப்பாடி திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சண்டேசுவரர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சண்டிகேசர் மோட்சம் அடைந்த தலம். தற்போது இத்தலம் திருவாய்பாடி என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் இத்தல ஈசன் ஆப்பாடி உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மிகப்பழமையான கோவில். கம்பீரமான நடராஜர் திருமேனி இங்கு உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 40வது சிவத்தலமாகும். இத்தலத்திலுள்ள இறைவன் பாலுகந்தநாதர், இறைவி பெரியநாயகி.
புராண முக்கியத்துவம்
எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார்.ஒருநாள் கன்றுக்குட்டி தன்னை மேய்க்கும் இடையனை முட்ட பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன்,பால்குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து,””என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்,”என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி “சண்டிகேஸ்வரர்’ ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் “பாலுகந்தநாதர்’ ஆனார். விசாரசருமன் “ஆ'(பசு) மேய்த்த தலமாதலால், “ஆப்பாடி’ ஆனது.
நம்பிக்கைகள்
பதவி உயர்வு, பணி இடமாற்றம் விரும்புவோர் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர்.அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும், திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது சிறப்பு.
திருவிழாக்கள்
சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாய்ப்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி